வெற்றிக் கதைகள் :: வேளாண்மை - 2013

[ 2011 வெற்றிக் கதைகள் காண.. ]
[ 2012 வெற்றிக் கதைகள் காண.. ]
[ 2013 வெற்றிக் கதைகள் காண.. ]
நன்றி பசுமை விகடன் ...
குடும்ப ஆரோக்கியத்திற்கு 100% உத்தரவாதம்
10.01.2014 [மேலும் தகவலுக்கு...]

ஆர்வமும் உழைப்பும் இருந்தால், அடுக்குமாடி வீடுகளில் கூட அழகாக விவசாயம செய்ய முடியும எனப்தை சமீபகாலமாக நகரவாசிகள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில ஒருராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி. திணடுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலாக வேலை செய்கிறேன். எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனால்தான், வீட்டிலேயே 1,500 சதுர அடியில் தோட்டம் போட்டு இயற்கை முறையில், தக்காளி, கத்தரி, மளிகாய், பொன்னாங்கன்னி, தண்டுக்கீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி என்று சாகுபடி செய்கிறேன். மாடியில் தோட்டம் அமைப்பது என்பது, இப்போது மிகவும் சுலபமான விஷயமாகிவிட்டது. இதற்காகவே கடைகளில் தனியாக விற்கும் பைகளை வாங்கி மண், மண்புழு உரத்தைக் கலந்து கொட்டி, செடிகளை வளர்க்க முடியும். தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, இந்தச் செடிகளை கவனித்தால் போதும். காய்கறி வாங்குவதற்காக பையைத் தூக்கி கொண்டு அலையத் தேவையில்லை. செலவு, அலைச்சல் குறைவு என்பதை விட விஷமில்லாத காய்கறிகள் கிடைக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். திண்டுக்கல் மாதிரி பகுதிகளில் கோடையில் வெயில் அதிகமாக இருக்கும். அதனால், பசுமைக்குடில் அமைத்து முள்ளங்கி, இஞ்சி விளைய வைக்கிறேன். மாடித் தோட்டத்திற்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திருக்கிறேன். 15 நாளைக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி மண்புழு உரம் தூவுவேன். ஒரு சாகுபடி முடிந்ததும், அடுத்த முறை அந்தப் பையில் அதே பயிரைப் போடுவதில்லை. வேறு பயிரைத்தான் நடுவேன். அவ்வளவுதான் பராமரிப்பு. ஆனால், மாடித் தோட்டம் கொடுக்கும் பலன் அளவில்லாதது. எங்க தேவைக்குப் போக மீதி காய்களை நண்பர்களுக்குக் கொடுத்துவிடுவோம். எங்கள் காய்கறிகளை சாப்பிட்ட நண்பர்கள் சிலரும் அவங்க வீட்டில் தோட்டம் போட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார் சின்னசாமி. எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தோட்டத்திற்குள் வந்துவிட்டாலே மன அழுத்தம் சுத்தமாக குறைந்துவிடும். சொட்டுநீர் இருந்தாலும், என்னோட பொண்ணு தினமும் அவ கையாலேயே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறாள். மொத்தத்தில் இந்த தோட்டம் எங்க குடும்பத்தினருடைய உடலுக்கு மட்டுமில்லாமல்.. மனதிற்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு என்று ஆத்மார்த்தமாகச் சொன்னார். தொடர்புக்கு சின்னசாமி, செல்போன் :97860 59130 அரசு அலுவலகங்களில் கூரைத் தோட்டம்! வேகமெடுக்கும் புதுமுயற்சி ! தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் ‘கூரைத் தோட்டம்’ என்ற திட்டத்தை முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி அதன்மூலம், மொட்டை மாடியில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். கேரட், பீன்ஸ், முள்ளங்கி, கத்திரி, மிளகாய், பட்டாணி, வெண்டை, புடல், பாகல், பீர்க்கன், சுரை, வெள்ளரி. அவரை, பீட்ரூட், வெங்காயம். கொத்தவரை, முருங்கை போன்ற காய்கள், வாழை, மா, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள், மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகப் பூ, சாமந்திப் பூ, சம்பங்கி, அடுக்குமல்லி ஆகிய பூக்கள், அகத்திகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்ட பல தாவரங்களை இங்கு வளர்க்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக இது பராமரிக்கப்படுகிறது. மாடித் தோட்டத்தில் 7 ஆயிரத்து 200 சதுர அடியில் 720 கூடைகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கூடையிலும் ஒவ்வொரு விதமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. சாணம், மண், தேங்காய்மஞ்சு (தேங்காய் நார்க்கழிவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொள்கிறோம். எங்களுக்கும் இதுபோல் கூரைத் தோட்டம் அமைத்துக் கொடுங்கள்’ என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதன் மூலம் எங்களுக்கு நல்லதொரு தொழில்வாய்ப்பும், வருமானத்திற்கான வழியும் கிடைத்துள்ளது என்கிறார்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள். சூலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசுந்தரம், சில மாதங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்குப் போயிருந்தபோது, கூரைத்தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருந்தது. எங்கள் அலுவலகம், தற்போதுதான் கட்டப்பட்டது என்பதால், அதிலேயே செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தோம். அதனால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. விளைவிக்கப்படும் பொருட்களை, இப்பகுதியில் உள்ள 94 சத்துணவு மையங்களுக்கு விற்பனை செய்கிறோம். விரைவில் அலுவலக வளாகத்திலேயே கடை அமைத்து, பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம், ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் திட்டம் என்றார். தொடர்புக்கு பால சுந்தரம், செல்போன் : 94433 50350

மாற்றுப் பயிராக மக்காச்சோளம் !
10.01.2014 [மேலும் தகவலுக்கு...]

விற்பனைக்குக் கைகொடுக்கும் கால்நடைப் பல்கலைக் கழகம் ! இந்தியாவில் இறைச்சிக்கான தேவை பெருகிக்கொண்டே வருவதால், ஆடு, கோழி என கால்நடைப் பண்ணைகளும் பெருகிக் கொண்டே வருகின்றன. பெரும்பாலான பண்ணைகளில் கொட்டில் முறையில் கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதால், அடர் தீவனத்திற்கான தேவையும் பெருகிக்கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து கொண்டே வருவதும் அடர்தீவனத்திற்கான தேவைக்கு ஒரு காரணம். இத்தகையச் சூழலில், அடர் தீவனத்திற்கான மூலப்பொருட்கள் சாகுபடி மற்றும் விற்பனை ஆகியவை… நல்ல வருமானம் தரும் தொழில்களாக மாறியுள்ளன. குறிப்பாக, மக்காச்சோளத்திற்கு நல்ல விற்பனை வாய்ப்புள்ளது. இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் மக்காச்சோள சாகுபடிக்கு மாறி வருகின்றனர். பல மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளத்தை சாகுபடி செய்கிறார்கள். தற்போது, வேளாண் அறிவியல் மையங்களிலும் மக்காச்சோள சாகுபடி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட பட்டுமுடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோள சாகுபடிக்கு மாறி, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவீதா மருத்துவக் கல்லூரியைத் தாண்டியதும் வலது புறம் திரும்பினால்… 23 கிலோ மீட்டர் தொவைில் இருக்கிறது, பேரம்பாக்கம். அங்கிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால், பட்டுமுடையார்குப்பம். இந்த கிராமத்தில், நெல், காய்கறிகள், மலர்கள் என விவசாயம் செழிப்பாக நடக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரைச் சந்தித்தோம். இரண்டு வருடத்திற்கு முன் காட்டுப்பாக்கம் கே.வி.கே (வேளாண் அறிவியல் மையம்) நடத்திய மக்காச்சோளத்துக்கு சாகுபடி பயிற்சியில் கலந்துகொண்டேன். குறைந்த தண்ணீர், அளவான வேலையாள் இருந்தாலே மக்காச்சோளத்திற்கு போதுமானது என்று தெரிந்துகொண்டேன். நெல் சாகுபடி அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று தெரிந்ததும் மக்காச்சோள சாகுபடி செய்யும் ஆசை வந்தது. கே.வி.கே. விஞ்ஞானிகள், எங்க கிராமத்திற்கு மக்காச்சோளத்திற்காக முகாம் நடத்தினார்கள். 50 பேர் கலந்து கொண்டோம். ஆனாலும் 4 பேர்தான் பயிர் செய்வதற்கு ஒப்புக்கொண்டார்கள். அதில் ஒருவனாக மூன்று ஏக்கரில் மக்காச்சோளம் போட்டேன். 100 நாளில், 5 டன் மகசூல் எடுத்தேன். கிலோ 11 ரூபாய் என்று கே.வி.கே. மூலமாகவே எடுத்துக் கொண்டார்கள். எல்லா செலவும் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபமாக நின்றது. அதன்பிறகு கே.வி.கே.மூலமாக மக்காச்சோளம் உற்பத்தியாளர் சங்கம்’ ஆரம்பிச்சாங்க. அதற்கு நான்தான் தலைவர். சங்கம் மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க இருக்கும் மக்காச்சோள விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், சந்தைபடுத்துவது பற்றி ஆலோசனைகளைக் கொடுத்துட்டு இருக்கிறேன். இதுவரைக்கும் மூன்று முறை மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கிறேன். நெல்லைவிட, இதில் நல்ல லாபம் கிடைக்கிறது. காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலுவிடம் பேசியபோது, “மக்காச்சோளம், நடவு துவரை, வணிக ரீதியான மலர்கள், காளான், தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்தப் பண்ணையம்.. என மாற்றுப் பயிர்கள், லாபம் ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகள் தரும் பயிற்சிகளை எங்கள் மையத்தில் நடத்தி வருகிறோம். மக்காச்சோளத்திற்கு அதிக தேவையும், விற்பனை வாய்ப்பும் இருப்பதால்… மாற்றுப் பயிர்கள் வரிசையில் இதை முன்னிலைப்படுத்தி வருகிறோம். தவிர, குறைந்த தண்ணீரில், குறைந்த வேலையாட்களைக் கொண்டே சாகுபடி செய்ய முடியும். தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய தீவனத் தொழில்நுட்ப மையத்தின் தீவன அரவை ஆலை, காட்டுப்பாக்கம் வேளாண் நிலையத்தில் அமைந்துள்ளது. இதற்கே, ஒரு நாளைக்கு 4 டன் மக்காச்சோளம் தேவை. பெரும்பாலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்துதான் கொள்முதல் செய்வோம். எங்கள் பகுதி விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில்தான், ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யச் சொல்லி வருகிறோம். புதிதாக பயிர் செய்பவர்களுக்கு பயிற்சியும், தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்குகிறோம் என்றார் குமரவேலு. எங்களிடம் சேமிப்புக் கிடங்கு இருப்பதால், விவசாயிகள் கொடுக்கும் மக்காச்சோளத்தை உடனடியாகப் பெற்றுக் கொள்வோம். மற்ற மாவட்ட விவசாயிகளும் விற்பனைக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம். சந்தை விலையை விட 1 ரூபாய், 2 ரூபாய் கூடுதலாகவே கொடுத்து எடுத்துக் கொள்வோம். மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணம் செய்யப்படும். தற்போதைக்கு 1 கிலோ மக்காச்சோளம், 15.50 காசு விலையில் வாங்குகிறோம். மணிகளில் 10 சதவிகிதம் ஈரம் இருக்குமாறும், பூஞ்சாணத் தாக்குதல் இல்லாமலும், காய வைத்து கொடுக்க வேண்டும் என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று சந்தைத் தகவல்களையும் தந்தார். தொடர்புக்கு, வேளாண் அறிவியல் நிலையம், காட்டுபாக்கம், தொலைபேசி: 044 -27452371 செல்போன் :98844 02613 மனோகரன், செல்போன் :94446 60398 கோதண்டராமன், செல்போன் :98405 40260 ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு www.vikatan.com

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013