Horticulture
||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பனை

ஓலைத்தொழல்

ஒலையைக் கொண்டு பாய், பெட்டி முடைதல் பரம்பரைத் தொழிலாக இருந்து வருகிறது. பனை ஒலையில் இருந்து கூடைகள், பூந்தொட்டிகள், மலர் அலங்காரக் கூடைகள், நீர் இறைக்கப் பயன்படும் கூடைகள் போன்றவை செய்யலாம். குழந்தைகளுக்கு பென்சி டப்பா, பாய் செய்யலாம். இவை சூடு மற்றும் குளிரினால் பாதிக்கப்படாதவை. ஓலைப் பெட்டிகள் உறுதியாக இருக்கவும் நீண்ட நாட்கள் பயன்படுததுவதற்கும் அவற்றின் பின்னால் அகணி நாரைக் கொண்டு தைத்து விடுவார்கள். பனை அவற்றின் பின்னால் அகணி நாரைக் கொண்டு தைத்து விடுவார்கள். பனை ஒலையின் உட்பகுதியில் நுண்ணிய மயிர் போன்ற நரம்புகள் பின்னியிருப்பதால் ஒலையை நீளவாட்டிலோ அல்லது குறுக்குப் பக்கதிலோ கிழிக்க இயலாது.


பனை ஓலை வேயப்பட்ட குடிசை

பனையோலை பொருட்கள்

பனைந்தடுக்கு மற்றும் பனங்கூடை பின்னுதல்

பனைநார் பூக்கூடைகள்

ஒலைகளினால் செய்யும் பொருட்களும் அவற்றின் பயனும்

1. ஓலைத்தடுக்கு - குழந்தை பிறந்தவுடன் தரையில் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது
2. இறைப்பெட்டி - கிணற்றிலிருந்த நீர் இறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது
3. அரிசிப்பெட்டி - சமைக்கும்பொழுது அரிசியைக் களைந்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது
4. கடகம் - ஒரு மரக்கால், அரை மரக்கால் தானியம் கொள்ளும் அளவு பயன்படுத்தப்படுகிறது

குருந்தோலை

மெல்லியதாகவும், வெண்மையாகவும், மிருதுவாகவும், வழவழவப்பாகவும் இருக்கும். அதன்மேல் ஒரு எண்ணெய்ப்பசை இருக்கும்.  குருத்தோலையை ஏடு ஏடாகப் பிரித்து, வெயிலில் உலரவைத்து ஈரம் படாமல் தைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். ஓலையில் ஈரம் படுமாயின் அதன் மேல் படரும் பாசி ஓலையை மஞ்சள் நிறமாக மாற்றி விடும். இந்தக்  குருத்தோலைகளைக் கொண்டு பலவகைப் பாய்கள், பெட்டிகள் கூடைகள், நாகரிகப் பொருட்கள் செய்யப்படுகின்றன. இந்த குருத்தோலைகளில் கண் கவரும் சாயங்களை ஏற்றிக் கைத்திறன் நிறைந்த பொருள்கள் செய்யப்படுகின்றன.

இன்னும் கூட பல வண்ண ஓலைப்பெட்டிகளில் புது மண இணையருக்குச் சீர் வரிசைகள் அனுப்பப்படுகின்றன. இந்தக் குருத்தோலைப் பொருள்கள் செய்வதில் கீழ்க்கண்ட கிராமங்கள் புகழ் பெற்றவை

1. கன்னியாகுமரி - அழகிய மண்டபம், தக்கரலை தேங்காய்ப்பட்டணம்
2. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, - மண்ப்பாடு, குலுசேகரப் பட்டினம், தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம், வேம்பார், நாகலாபுரம், இலஞ்சி, தென்காசி, கயத்தாறு, வடக்கங்குளம், கரைச்சுற்றுப்புதூார்
3. இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை - இராமநாதபுரம், திருப்புல்லாணி, சித்ததார்கோட்டை, மேலப்பசலை கேப்பனூர், பரமக்குடி, கீழக்கரை, எம்பனேசுவரம், இராமேசுவரம், சிவகங்கை
4. நாகப்பட்டினம் - நாகூர்

குருத்தோலைகளிலிருந்து கைப்பகைள், சிறுகூடைகள், பாய்கள், விசிறிகள், கிலுகிலுப்பைகள் மற்றும் பொம்மைக்ள செய்யலாம்.

சாரோலை

பசுமையாகவும். உறுதியாகவும். தடிப்பாகவும் இருக்கும். அதிகம் முற்றிய ஓலையை வளைத்தால் முறியும் குணமுடையது. சாரோலையைப் பதப்படுத்துவது சற்று கடினம், பனையிலிருந்து ஓலையை வெட்டியவுடன், அரைமணி நேரம் வெய்யிலில் உலரவிட வேண்டும். பிறகு அதை அடுக்கடுக்காக மடித்துக் குருத்தோலை மாதிரிக் கட்டிவிட வேண்டும். இப்படிக் கட்டி வைத்துவிட்டால், மாதக்கணக்கில் ஓலை கெடாமல் இருக்கும். இதற்குச் ‘சுருக்குப்பிடித்தல்’ என்று பெயர். இவ்வாறு சுருக்குப் பிடித்த ஓலையை சத்தகக்க கத்தியின் உதவியால் முதுகிலுள்ள ஈர்க்கையும் வயிற்றிலுள்ள பண்டீர்க்கையும் அகற்றி விட வேண்டும். பிறகு கால் அங்குலம், அரை அங்குலம் அகல அளவுக்கு ஓலையை வாரி பாய், தடுக்கு போன்ற பொருட்களை செய்யலாம்.

இந்த ஓலைப்பாயைக் கொண்டு தோல், ஜவுளிச் சிப்பம், நூல் கட்டுகள், கருவாடு ஆகியவற்றை கட்டுவதால் உள்ளிருக்கும் சாமான்கள் காற்றோட்டத்துடன் கெடாமலிருக்கும். பாயிலிருந்து எந்தவிதச் சாயமும், வண்ணமும் உள்ளிருக்கும் பொருட்களில் படுவதில்லை. இந்தப் பாய் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக் கூடியது. ஓலைப் பாயை இரண்டு மூன்று தடவைகள் கட்டுவதற்கு பயன்படுத்தலாம். சாதாரணமாக 5 அடி நீளம், 2 ½ அடி அகலத்தில் பாய்கள் செய்யப்படுகினற்ன.
சாரோலையால் வேய்ந்த ஓலைகள் சுமார் மூன்று நான்கு ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். ஓலை வீடுகள் நவீன குளிரூட்டப்பட்ட அறை மாதிரியே இருக்கின்றன. வெப்ப காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும்.

குருத்தோலை சாமான்கள்

குருத்தோலை நுனி பிரியுமுன் அடிமட்டையுடன் வெட்டப்படுகிறது. வெண்மையாகவும், ஈர்க்கின் ஓரத்தில் பசுமையாகவும் இருக்கும். இதை இலேசாக விரித்து இளம் வெய்யிலில் காய விட வேண்டும். நிழலில் காய விடுவதும் நல்லது. முதலில் ஓலையின் அடியிலுள்ள மட்டையை முற்றிலும் அகற்றி விட வேண்டும். இப்பொழுது மடல் வட்டமாக விரியும் அளவுக்கு வரும். ஒருபுறம் இதழைக் கட்டித் தொங்கவிட வேண்டும். அல்லது தரையில் பிரித்துக் காய வைக்க வேண்டும். இரண்டு நாள், மூன்று நாள் காய்ந்ததும் ஓலை வலு பெற்று விடும். இதை மறுபடியும் இருந்தபடியே மடல் மடலாக மடக்கிக் குருத்தோலை இதழைக் கொண்டு கட்டி சேகரித்து வைத்துக்காள்ள வேண்டும்.

ஈர்க்கைக் கிழித்தல்

குருத்தோலைச் சாமான்கள் செய்வதற்கு இரும்பு ஊசியைக் கொண்டோ அல்லது சத்தகத்தின் காம்பு கொண்டோ ஓலையின் காம்பிலிருந்து (மட்டையை ஒட்டியுள்ள இடம்) நுனியை நோக்கிக் குத்தியிழுக்க வேண்டும். எவ்விதக் கோணலும் இல்லாமல் ஈர்க்கு தனியாகப் பிரிந்துவிடும். பிறகு ஓலையைத் திருப்பி எதிர்பக்கத்திலுள்ள சிறிய ஈர்க்கைக் கிழிக்க வேண்டும். இதற்குப் பண்டீர்க்கு பிரித்தல் என்று பெயர். ஆகவே ஈர்க்கில் மேலுள்ள பகுதிக்கு ஈர்க்கு என்றும், அடிப்பகுதியிலுள்ள ஈர்க்கிற்கு பண்டீர்க்கு என்றும் பெயர்.  இப்பொழுது வருவதற்குத் தகுதியான கருத்தோலைகள் தனித்தனியகாச் சேகரிக்கப்படுகின்றன. குருத்தோலையை வாழை இலை, ஈந்து ஓலை போன்ற நேராக சாதாரணமாகக் கழிக்க முடியாது. தும்புகள் இணைக்கப்பட்டிருப்பததால் ஓலை உறுதியாகவும் வளைக்கும் வடிவிலேயே நிமிராமல் நிற்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த ஓலையின் நடவில் சிறு சிறு துளைகள் இருப்பதால் சாயநீரில் தோய்த்துக் காய்ச்சும் பொழுது சாயம் துளைகளுக்குள் சென்று உறுதியாகப் பிடித்துக்கொள்கிறது.

ஓலை வாரும் கருவிகள்

ஓலையை ஓரே அளவாக வாரியபின், பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வடிவமுள்ள கத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டுக்கோட்டை நகரத்ததார் பெண்கள் அரிவாள் மனையில் வைத்தே ஓலை வாருகிறார்கள். இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிறைச் சந்திரன் வடிவில் நீண்ட காம்புள்ள சத்தக்கத்தியை பயன்படுத்துகின்றனர். காம்பின் நீளம் 6 அங்குலமும், அகலம் கால் அங்குலமும் இருக்கும். காம்பின் நுனிப்பகுதி கூர்மையாக வடிக்கப்பட்டிருக்கும். இந்தக் கத்தி கீழ்கக்ணட வேலைகள் செய்யப்பயன்படுகிறது.

  • ஓலை வாருதல்
  • காம்பைக் கொண்டு ஈர்க்குப் பிரித்தல்
  • காம்பைக் கொண்டு நார்ப்பெட்டிகள் தைத்தல்
  • ஈர்க்குத் தட்டுகள்  பின்னும்பொழுது இந்தக் காம்பைக் கொண்டு குத்தித்தான் ஓலை சொருகப்படுகிறது. எனவே ஓலை வாருவதற்கு அரிவாள்மனையும், சத்தகத்தியும் பயன்பட்டு வந்தன.

ஓலை வாரும் நவீன கருவிகள்

ஒலை வாருவதில் ஒரே அளவாகவும், வேகமாகவும் ஓலை வாருவதற்குக் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீண்ட சதுரப்பலகையில் குறுக்காக ஒரு அறுவை அறுத்து அதில் சவர கத்திகள் பொருத்தப்படுகின்றன.

வெவ்வேறு அளவுகளுள்ள துளையில் வைத்து ஓலையை இழுக்கும்பொழுது ஒவ்வொரு ஓலையும் ஒரே அளவுள்ளதாக வரும். நமக்கு எந்த அளவு தேவையோ அதற்குத் தகுந்தாற்போல் உள்ள துளையில் வைத்து இழுக்க வேண்டும். இக்கருவி பழவேற்காடு, மணப்பாடு, காவிரி நகர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கையாளப்பட்டு வருகிறது. இதை இலகுவில் உள்ளூர் தச்சரே செய்துகொள்ள முடியும். நான்காவதாக ஒரே சமயத்தில் ஒரே அளவுள்ள ஓலை எலக்குளாகவும் அல்லது வெவ்வேறு அகலமுள்ள எலக்குளாகவும் வாரிக்கொள்வதற்கு ஒரு சிறு ஒலை வாரும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு குருத்தோலைகளை ஒரே சமயத்தில் வைத்து ஒரே இழுப்பில் ஓலைவாரி விடலாம்.

ஓலை வாரும் கருவிகளும் அதன் பயன்பாடுகளும்

1.அரிவாள் மனையில் வாரும் முறை

ஈர்க்கு நீக்கப்பட்ட குருத்தோலை இதழைப் பதமான அரிவாள் மனையில் வைத்து காய்கறி அறுப்பதுபோல் கீழிருந்து மேலாக வாருகிறார்கள். இதில் ஒரு இதழ் வாருவதற்கு ஒரு நிமிடம் ஆகிறது. ஒரே அளவாகவும் வருவதில்லை. நேரமும் அதிகமாகிறது. இரண்டு விரல்களால் ஓலையைப் பிடித்து அறுக்கும் போது அரிவாள் மனையில் விரல்பட்டுக் காயம் ஏற்ட வாய்ப்பு உள்ளது. இதில் நவீன பொருட்கள் செய்வதற்கான அகலக் குறைவான ஓலைகளை வார முடியாது. எனவே இதைத் தொழிலாளர்கள் கையாளுவது சிரமமாக இருக்கிறது. நகரத்தார் பெண்கள் மட்டும் கையாளுகின்றனர்.

2.சத்தகத்தியால் வாருதல்

ஆறு அங்குல நீளமுள்ள ஈர்க்கு ‘ஏ’ வடிவில் மடிக்கப்படுகிறது. ஓலை இதழ் எவ்வளுவு அகலத்தில் வேண்டும் என்பது முதலில் முடிவெடுக்கப்படுகிறது. ‘ஏ’வடிவ அச்சில் வார வேண்டிய ஓலையின் அளவை சத்தகத்தியால் வார வேண்டும். ஈர்க்கின் மடிப்பான பகுதி இடது கைவிரல்களால் பிடிக்கப்படுகிறது. வாரவேண்டிய ஓலையை ஈர்க்கின் மடிப்பிற்குள் வைத்து அச்சில் குறிக்கப்பட்ட இடத்தில் கத்தியின் கூர்மையான பகுதி பொருத்தப்படுகிறது. இடதுகை விரல்களால் இதழ் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. அப்பொழுது அச்சில் குறிக்கப்பட்ட இடத்திற்கும் ஈர்க்கின் மடிப்பிற்கும் இடையே உள்ள அகலத்தில் ஓலை வாரப்படுகிறது. இதில் எவ்வித ஆபத்தும் இல்லை. வாருவதும் எளிது. ஆனால் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு தடவை வார வேண்டியுள்ளது. ஓலை வாருவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. இம்முறை தமிழகமெங்கும் கையாளப்படுகிறது.

3.சங்கர் பனையோலை வாரும் கருவி

இந்தக் கருவியில் வெவ்வேறு அகலமுள்ள வரிகளில் சவரக் கத்திகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருபுறத்திலிருந்து வார வேண்டிய ஓலையை வலது கையால் திணித்தால் ஓலையின் நுனி இரண்டு பிரிவாகத் துளைக்கு வெளியே நீட்டிக்கொண்டு வரும். பிளந்துவரும் இரு ஓலைகளையும் ஒரே நேராக இடது கையால் இழுத்தால் வார்ந்த ஓலையும், வார வேண்டிய ஓலையும் வெளியில் வரும். வார வேண்டிய ஓலையை மறுபடியும் மறுபடியும் துளையில் வைத்து இழுத்துத் தேவையான ஓலையை வாரலாம். இந்தக் கருவியில் சீரான அளவுள்ள ஓலைகளை வாரிக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு ஓலையாக வாருவதால் சத்தகக் கத்தியில்  ஓலைவார ஆகும். நேரம் இதற்கும் ஆகிறது. ஆனால் சிறிய இதழ்களை வாருவதற்கு இக்கருவி உகந்ததாக இருக்கிறது.

4.சோணை ஓலை வாரும் கருவி

வாரவேண்டிய குருத்தோலையின் அகலம் எவ்வளவு இருப்பினும் இந்தக் கருவியின் மீது வைத்து இழுப்போமானால் ஓலை முழுவதும் தேவையான அளவு வாரப்பட்டு விடுகிறது.

இதன் பயன்கள்

  1. ஒரே வேளையில் ஓலை முழுவதும் வாரப்பட்டுவிடுகிறது.
  2. ஈர்கோடு வைத்துக் கிழித்துக் கொள்ளலாம், ஈர்க்கைத் தனியாக சீவ வேண்டிய தேவையில்லை.
  3. இரண்டுக்கும் மேற்பட்ட இதழ்களையும் வைத்து ஒரே சமயத்தில் வாரி விடலாம்.
  4. வாரவேண்டிய எலக்கின் அளவுக்குத் தக்கவாறு சவரக் கத்தியை மாற்றிப் பொருத்திக் கொள்ளலாம்.
  5. வாருவதில் கழிவு ஏற்படுவதில்லை. கடைசி வரிசையிலுள்ள கத்தியின் அகலத்தைக் குறைத்துப் பொருத்திக் கொண்டால் ஓலையின் கடைசிப் பகுதி கழிவாகாமல் சிறிய ஓலையாக வந்து விடுகிறது.
  6. எளிதில் புது கத்திகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

நல்ல தரம் கிடைக்க வேண்டுமானால், ஓலையின் அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அந்த அளவு இந்தக் கருவியில் கிடைக்கிறது. எனவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் ‘சோணை ஓலை வாரும் கருவி’ நல்ல பயனைத் தருகிறது.

பெட்டி முடைதல்

இரண்டு இதழ்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துப் பின்னிப் பாயாகவும். தடுக்காகவும், தட்டிகளாகவும் செய்து கொள்வதற்குப் பாய்ப் பின்னல் அல்லது தட்டிப் பின்னல் என்று பெயர். அந்தப் பின்னல்கள் பாய் பின்னல் அல்லது தட்டிப் பின்னல்கள், மிஞ்சி முடிச்சு, வாழைப்பூ முடிச்சு, கண் பின்னல், சடைப்பின்னல், முல்லைப்பூ முடிச்சு அல்லது சுருள் பின்னல், பூரான் முடிச்சு, சுற்றுப் பின்னல் என வகைப்படுத்தப்பட்டுள்ளன
சாதாரணமாக ஒவ்வொரு பின்னல் முறையிலும் வெவ்வேறு பொருட்கள் செய்யப்படுகின்றன. அவைகளில் சில.

1. பாய்ப்பின்னல் - படுக்கும்பாய்,  உட்காரும் தடுக்கு, தட்டி வகைகள், ஓலைப்பெட்டிகள்
2. மிஞ்சி முடிச்சு   உட்காரும் தடுக்கு, சூட்கேஸ், மீன் வாய்ப்பெட்டி, சந்தைக்கூடை, கைப்பை
3. வாழைப்பூ முடிச்சு - பழவேற்காடு கூடை, பலவகைக் கூடைகள்
4. கண் பின்னல் - வெங்காயக்கூடை
5. சடைப்பின்னல் - தொப்பிகள், கைபிடிகள், இடுப்புப்பட்டை வகைகள்
6. முல்லைப்பூ முடிச்சு  அல்லது சுருள் பின்னல் - முல்லைப்பூ மாலை, அலங்காரத் தோரணங்கள்
7. பூரான் முடிச்சு - மாலைகள், அலங்காரப் பொருட்கள்
8. சுற்றுப்பின்னல் - கடகப் பெட்டி, நார்ப்பெட்டி மற்றும் கூடை வகைகள்

பனையோலைகளைக் கொண்டு தங்க வீடு, படுக்கப்பாய், விதைக்கக் கொட்டான், தானியம் சுமக்கக் கடகம், சீர் கொடுக்க சீர்ப்பெட்டி, கோவிலுக்குத் தேங்காய், பழம் கொண்டு செல்ல ஓலைப்பெட்டி முதலியவை செய்யப்படுகின்றன.

ஓலைச்சாயம்

சாயத்தையும் ஓலையையும் வேகவைத்து சாயமேறிய ஓலையைப் பெட்டிகளின் வாய்களிலும், நடுவிலும் அலங்காரமாக வைத்துப் பின்னுதல் இயல்பு. சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் சிவப்புச் சாயத்தை ஓலையில் ஏற்றுவார்கள். மஞ்சள் நிறம் ஏற்றுவதற்கு வீட்டிலுள்ள மஞ்சளை அரைத்துத் நீரில் கலக்கிக் கொதிக்க வைத்து ஓலைகளை மூழ்கவைத்துப்பின் அவற்றைக் குளிர்ந்த நீரில் கழுவி உலர்த்தி எடுத்துக் கொள்வார்கள். சிவப்புச் சாயம் அதிகநாள் நிற்கும். ஆனால் மஞ்சள் சாயம் சூரிய ஒளி பட்டவுடன் மங்கிவிடும்.

நவீன முறையில் சாயமேற்றல்

குருத்தூலைகளில் நன்கு சாயம் ஏறும். நிழலில் வைத்திருந்தால் ஓலையில் ஏறிய சாயம் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும் சாயம் ஓலைகளில் உறுதியாகப் பற்றிக் கொள்ள ‘காரச் சாயத்தை’ பயன்படுத்த வேண்டும்.

சாயமேற்றுதல்

சாயமேற்ற வேண்டிய குருத்தோலையை நன்கு வாரி வைத்துக்கொள்ள வேண்டும். மண் அல்லது அலுமினியப் பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். நீர் கொதிநலையை அடைந்தவுடன் சாயத்தூளைத் தூவவும். ஐந்து நிமிடங்களுக்குள் சாயம் நீரில் கரைந்து விடும். இப்பொழுது வாரி வைத்துள்ள வெள்ளை ஓலையை அமிழ்த்தி ஐந்து நிமிடங்கள் கொதிக்கும் சாயத்தில் இருக்கும்படி செய்யவும். பிறகு அதை எடுத்துக் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நிழலில் காய விட வேண்டும்.

நாகரிகப் பொருட்கள் செய்தல்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாடு என்னும் சிற்றூரில் செய்யப்படும் பிளாப்பெட்டியும் மாலையும் மெஞ்ஞானபுரத்தில் தயாராகும் தையல் பெட்டிகளும் குரைச்சுற்றுப்புதூரில் செய்யப்படும் தட்டு வகைகளும் இராமநாதபுரம் நகரில் முடையப்படும் ஓலைப் பாய்களும் விசிறிகளும் திருப்புல்லாணி கண் கவர் தூக்குப் பைகளும், சித்ததார்க் கோட்டை நகைப் பெட்டிகளும், மண்டபம் கூடைகளும், சிவகங்கை சிலுக்குக் கொட்டான்களும், நாட்டுக்கோட்டை நகரத்ததர் செய்யும் சீதனப் பெட்டிகளும், நாகூர் மடக்கு விசிறிகளும், பழவேற்காடு கூடைகளும், எட்டையபுரம் வட்ட விசிறிகளும் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விற்பனையாகின்றன.

பூ வெட்டுதல்

சாயமேற்றப்பட்ட குருத்தோலைகளையும், வெள்ளை ஓலைகளையும் பலவிதப் பூக்களின் இதழ்களாகக் கத்தரித்துக் கொண்டு வெட்டலாம். வெட்டிய இதழ்களைப் பூக்களின் உருவத்திற்கு ஏற்றபடி சத்தகக்கத்தியின் காம்பினால் சுருட்டி வளைக்க வேண்டும். கத்தியினால் ஓலையை இரண்டு மூன்று முறை சுருட்டும் போது ஓலையின் உட்புறத்திலுள்ள நரம்புகள் வளைந்து நிமிராமல் நின்று விடுகின்றன. எனவே பூக்களை இதழ்களாகச் சேர்த்துக் கட்டும் போது அவை உருவத்தை இழக்காமல் அழகாக இருக்கின்றன.

மாலையின் வகைகள்
ஓலை மாலை கட்டுவதில் கீழ்க்கண்ட வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

  • ரோஜாப் பூ மாலை – இதழ்களாக வெட்டிக் கட்டப் படுகிறது.
  • சடை மாலை குருத் தோலையை மிகவும் சன்னமாக வாரி சடையாகப் பின்னி 4, 5 சடைகளை ஒருபுறமாக வைத்து மத்தியிலும் கீழும் அலங்காரத் தட்டுகளைப் பொருத்திச் செய்யப்படுகிறது.
  • முல்லைப் பூமாலை – சுருள் பின்னல்களில் ஓலைச் சுருள்களைப் பின்னி அவற்றை முல்லைப் பூ மாலையாகக் கட்டப் படுகிறது.
  • ஓலைகளை நெற்றியில் இடும் திலகம் அளவுக்குப் பொட்டுகள் செய்து அடுக்கடுக்காக ஊசியினால் கோர்த்து மாலைகளாகச் செய்யப்படுகிறது.

விளையாட்டுச்சாமான்கள்

ஓலைகளைக் கொண்டு கிராமங்களில் விளையாட்டுச்சாமான்கள் செய்வதுண்டு. ஓலை இலக்குகளைச் சிலுவை அடையாளமாக வைத்துக் காற்றாடி செய்து விற்பார்கள்.

ஓலை அணிகலன்கள்

முற்காலத்தில் கிராமப் பெண்கள் ஓலையில் அணிகலன்கள் செய்து அலங்கரித்துக் கொள்வார்கள். முக்கியமாகக் காதில் இருபக்கமும் குமிழ் உள்ள தங்க நகைகளை ஓலையைச் சுருட்டி வைத்தமாதிரி செய்து போடுகிறார்கள். இன்றும் இதற்குக் ‘காதோலை ’ என்று பெயர் உண்டு.

ஓலையை அடுக்கடுக்காகப் பின்னி மிஞ்சி செய்து கால் விரல்களில்  அணிவார்கள்.    இதற்கு        ம் மிஞ்சி என்ற பெயரே உள்ளது. 1 ¼ செ.மீ. அகலத்தில் ஓலையை நறுக்கி கையில் காப்பாக அணிகிறார்கள். திருமணத்தின் பொழுது நெற்றியில் ஓலையைக் கட்டிக் கொள்கிறார்கள். இது போன்று தங்கத்தில் செய்து மணப்பெண்டிர் நெற்றியோலையை நெற்றியில் அணிகிறார்கள்.

காது வளர்க்க ஓலைத்தக்கை

காதில் சிறு துளை ஏற்படுத்துவார்கள். பிறகு சிறிய குருத்தோலைச் சுருளை அந்தத் துளைக்குள் வைத்து விடுவார்கள். வாரம் ஒருமுறை ஓலைச்சுருளைப் பெரிதாக்கி மாற்றிக் கொண்டே வருவார்கள்.  இதற்கு ஓலைத்தக்கை என்று பெயர். ஒவ்வொரு ஓலைச்சுருளைப் பொருத்தும் பொழுதும் காதின் துளை அகலமாய்த் தொங்க ஆரம்பிக்கும். நகை போடும் அளவிற்குக் காது தொங்கியவுடன் ஓலைத்தக்கையை எடுத்துவிட்டுக் காதிலுள்ள புண்ணை ஆற்றவார்கள். குருத்தோலைச் சுருளை வைப்பதன் நோக்கம்,  ஓலைச்சுருள் தினந்தோறும் விரிந்து கொடுத்துத் துளை பெருக்க உதவும்.

ஓலையும் இசையும்

ஓலையைக் குழல் போல் சுருட்டிக் குறுகிய பகுதியை வாயில் வைத்துச் சிறுவர்கள் ஊதுவதிலிருந்து அருமையான  இன்னிசை உண்டாகிறது. நாதஸ்வரத்தில் இசை உண்டாக்குவதற்குக் குருத்தோலையை முக்கோண வடிவமாக நறுக்கி ஒரு அங்குல நீளத்தில் பொருத்திக் கொள்வார்கள்.

சாரோலை

மிட்டாய்ப் பெட்டிகள் செய்தல்

சாரோலையை ½  செ.மீ. அகலத்தில் வாரிச் சதுரப் பெட்டிகள் செய்யப்படுகின்றன. சாதாரணமாக டின்களில் அடைப்பதைக் காட்டிலும் மிட்டாய் போன்ற தின்பண்டங்களை ஓலைப் பெட்டிகளில் அடைப்பது இலகுவாகும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி குஜராத் போன்ற பிற மாநிலங்களிலும் பிஸ்கட் போன்ற பொருட்களை ஓலைக் கொட்டான்களில் அடைத்து விற்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் என்ற கிராமத்தில் மிட்டாய்ப் பெட்டிகள் செய்கின்றனர்.

பழப்பெட்டி

வாழை, ஆரஞ்சு போன்ற பழங்களைக் கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சாரோலைப் பெட்டியில் வைத்து விற்கிறார்கள்.

பூப்பெட்டி

பூக்களை எடுத்துச் செல்வதற்கும் , மாலைகளைக் கட்டி அனுப்புவதற்கும் சாரோலைப் பெட்டிகள் பயன்படுகின்றன.

வெற்றிலைக்கட்டு

தமிழ்நாட்டில் , திருநெல்வேலி ஆத்தூர் ஆகிய இடங்களில் வெற்றிலைக்கட்டு சாரோலைப் பாய்களில் வாழைமடலால் கட்டி அனுப்பப்படுகின்றன.

படகுக் கயிற்றில் சாரோலை

மராட்டிய மாநிலத்தில் மீன் பிடிப்பதற்கு ஈச்ச ஓலையைக் கொண்டு முறுக்கும் கயிற்றைப் பனையோலையால் மூடிச் சுற்றிப் பின்னுகிறார்கள். இப்பொழுது கயிறு தெரியாமல் மூடப்படுகிறது. சாரோலையில் எண்ணெய்ச் சத்து இருப்பதால் இந்தக் கயிறு உப்பு நீரில் படும் பொழுது கெடுவதில்லை.

புட்டுக் கருப்புக்கட்டிக்கொட்டான்

சுக்கு, எள் போட்டுச் செய்யப்படும் புட்டுக் கருப்புக்கட்டியையும், சில்லுக்கருப்புக் கட்டியையும் சாரோலைச் சதுரப் பெட்டியில் அடைத்துத் தான் விற்கிறார்கள்.

தலைமுடி ஏற்றுமதிக் கொட்டான்

தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தலைமுடி சாரோலைக் கொட்டான்களில் வைத்து அனுப்பப்படுகிறது.

ஓலைப்புட்லூ

ஆந்திர மாநிலத்தில் சாரோலையைக் கொண்டு பனை வெல்லம் முழுவதையும் 20 முதல் 25 கிலோ கொண்ட சாரோலைக் கட்டுகளாகக் கட்டி இருப்பு வைக்கிறார்கள். இந்தக் கட்டுக்கு ஓலைப்புட்லூ என்று பெயர்.

காவோலை

ஓலைகளையே களையாத பனைகளில் முற்றிக் காய்ந்து பழுப்பாகத் தொங்கும் சாரோலைக்குக் காவோலை என்று பெயர். இவை அடுப்பு எரிக்க மட்டுமே பயன்படும்.
பனையோலைகளில் அறிமுக அட்டைகள்(Visiting cards)  வைத்துக் கொள்வது பெருமையானதாகக் கருதப்படுகிறது. முதிர்ந்த  பனையோலைகள் அடுப்பெரிக்கப் பயன்படுவதோடு தென்னை மரங்களின் தண்டுகளில் திருடர்கள் ஏறுவதைத் தடுக்க இவற்றைக் கட்டி வைக்கலாம். மேலும் பனையோலைகளில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் களர் மற்றம் உலர் நிலங்களை சீர்திருத்தம் செய்யவும் பயன்படுகின்றன.

ஈர்க்கு

ஓலையின் இரு இதழ்களைச் சேர்க்கும் முதுகுப் பாகத்திற்கு ஈர்க்கு என்று பெயர். ஓலையின் இதழ்கள் எவ்வளவு நீளம் இருக்கின்றனவோ அவ்வளவு நீளம் ஈர்க்குமிருக்கும். ஈர்க்கு தடிப்பாகவும், தட்டையாகவும், அடியில் உறுதியாகவும், நுனியில் மிருதுவாகவும் இருக்கும். ஆனால் ஓலையைக் காட்டிலும் அதிக வலுவுடையது.  ஈர்க்கு முழுவதும் நுண்ணிய ரோமம் போன்ற தும்புகளாலானது. எனவே ஈர்க்கை வளைக்கவோ, நம்முடைய தேவைப்படி பின்னவோ முடிகிறது. குருத்தோலையின் ஈர்க்கு வெண்மையாகவும், சாரோலையின் ஈர்க்கு பசுமையாகவுமிருக்கும். ஓலையுடன் கூடிய ஈர்க்கைக் கூரிய நுனியுள்ள ஊசியால் குத்தி ஈர்க்கு வேறாகவும் ஓலை வேறாகவும் பிரிக்கிறார்கள். ஈர்க்கு நரம்பு போன்றது. அந்த நரம்பையொட்டி அரைக்கால் அங்குல அகல ஓலை ஈர்க்குடன் இருக்கும்படி வைத்துக் கிழிக்கின்றனர். இவ்வாறு கிழிக்கப்பட்ட ஈர்க்கு,  கட்டுக் கட்டாகக் கட்டப்பட்டு விற்கப்படுகிறது.

ஈர்க்கைக் கொண்டு சுளகு, வட்டத்தட்டு முதலியன ஏராளமாகச் செய்யப் படுகிறது. வீட்டில் தானியத்தைச் சுத்தம் செய்யவும், பதரை நீக்கவும், குருணையை ஒதுக்கவும், தூசியை நீக்கவும், கல்லைப் பிரிக்கவும் பயன்படுத்துவதற்கு சுளகு என்று பெயர். சுளகினுடைய அமைப்பு பின்னால் அகலமாகவும் நுனியில் குறுகியும் பூவரசு இலையினுருவத்தை ஒத்திருக்கும். சுளகில் இருவகை உண்டு. ஒன்று கட்டுச் சுளகு, மற்றொன்று சுற்றுச் சுளகு, அதாவது ஈர்க்கினால் பின்னி பனை மட்டையை வளைத்து விளிம்பில் இரண்டு அங்குல உயரத்தில் வைத்துக் கட்டியிருப்பார்கள். சுளகின் அடிப்புறத்தில் மட்டையின் உயரம் சுமார் 1 ½ அங்குலமிருக்கும்.  நுனி  பகுதியில் அந்த மட்டை உயரமில்லாமல் ஆறு ஏழு இடங்களில் மட்டையையும் ஈர்க்கையும்  சேர்த்துக் கட்டப் பட்டிருக்கும். இதற்குக் ‘கட்டுச்சுளகு’ என்று பெயர். மற்றொரு முறையில் ஈர்க்கினுடைய தடுக்கையும் மட்டையையும் சேர்த்து ஒரு அங்குலத்திற்கு ஒரு வளையம் மாதிரி சுற்றிச் சுற்றிக் கட்டியிருப்பார்கள். அந்தச் சுற்றுக்களும் ஈர்க்கினால் தான் சுற்றப்படும். எனவே இதற்குக் ‘சுற்றுச்சுளகு’ என்று பெயர்.

வட்டச் சுளகு
ஈர்க்கினால் சதுரமாகத் தடுக்கைப் பின்னி, பனை மட்டையை இருவட்டங்கள் செய்து, தடுக்கின் ஓரத்தை மட்டை வளையங்களுக்கு நடுவில்  வைத்து சுமார் இரண்டு அங்குல உயரத்தில் கட்டுவார்கள். இந்தச் சுளகின் விட்டம் சுமார் ஒரு அடியிலிருந்து மூன்று அடி வரை இருக்கும். இந்தச் சுளகுதான், சோறு கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது. சோற்றை வடித்தவுடன் இந்த வட்டச்சுளகில் கொட்டிக் குளிர வைப்பார்கள். இந்தச் சுளகை வெளிநாடுகளில் வீட்டில் அலங்காரப் பொருளாக வைக்கிறார்கள். சுளகின் அடிப்பகுதியில் சாணத்தையும் சிறிது களிமண்ணையும் கலந்து மெழுகி வைத்துக் கொண்டு பத்திரப் படுத்துவார்கள். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு வண்ண ஈர்க்கினால்  பின்னிய இச்சுளகு கண்களைக் கவரும். திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சுளகு உற்பத்தி அதிகம்.

ஈர்க்குப் பெட்டி

ஈர்க்கை இரண்டாக வகிர்ந்து செய்யப்படும் ஈர்க்கம் பெட்டிகளைக் கோவில்களில் தேங்காய், பழம் எடுத்துச் செல்லப் பயன்படுத்துகின்றனர்.

சடைக் கயிறு

மூன்று ஈர்க்கை ஒன்றாகச் சேர்த்து, பெண்கள் சடை பின்னுவது மாதிரி சடைக் கயிறு பின்னுகிறார்கள். இந்தச் சடைக் கயிறு மீன், கருவாடு, பாய்க் கட்டுகள் போன்ற பொருள்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. இராமேஸ்வரம், இராமநாதபுரம் முதலிய இடங்களில் பிடிக்கப்படும் மீன்கள் ஓலைப் பாயில் சுற்றப்பட்டு, ஈர்க்குச் சடை பிரியாமல் பின்னப்பட்டு, நூற்றுக்கணக்கான மைல் தூரங்களுக்கு தொடர் வண்டி மூலம் அனுப்பப்டுகின்றன.

ஈர்க்கும் வெளிநாட்டுப் பயன்பாடும்

ஈர்க்கை நன்றாகச் சுத்தம் செய்து, தேவையான நீளத்தில் நறுக்கிக் கட்டுக் கட்டாகக் கட்டி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சாலைகளைச் சுத்தம் செய்யவும், தரைகளைக் கழுவவும் பயன்படும் துடைப்பான்களில் (பிரஷ்) ஈர்க்கைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

சோற்று வடிமார்

குருத்தோலை ஈர்க்கை முன்பகுதியில் அகலமாகவும் பின்புறம் குறுக்கியும் அடுக்கி அகணியால் கட்டுவார்கள். இதற்கு வடிமார் என்று பெயர். சோற்றை வடிப்பதற்கு இந்த ஈர்க்கு வடிமார் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது. சோறு பக்குவமானவுடன் சோற்று வடிமாரை நீரில் கழுவி அகலமான பகுதியை சுருக்கி பாளைக்குள் வைக்க வேண்டும். கொண்டைப் பகுதி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சோற்றுப் பானையை உயரமான இடத்தில் வைத்துக் கவிழ்த்தால் வடிநீர் சுத்தமாக வடியும். வடிமாரின் கொண்டையைப் பிடித்துக் கொண்டால், கையில் சூடேறாது. கைகளில் சூடான வடிகஞ்சி கொட்டிவிடாது. வடிதட்டு வடிக்கும் பொழுது நழுவி, கைகளில் கொதிநீர் பட்டுக் காயப் படுவதைப் பார்க்கலாம். வடிமார் கொண்டு சோறு வடிப்பது தென்மாவட்டங்களில் கையாளப்படுகிறது.

பண்டீர்க்கு

ஓலையின் வயிற்றுப் புறத்திலுள்ள நுண்ணிய நரம்பு போன்ற ஈர்க்கிற்கு பண்டீர்க்கு என்று பெயர். இதைச் சத்தகக்கத்தியின் நுனியால் குத்திக் கீறி எடுக்கிறார்கள். இந்த ஈர்க்கையும் சாரோலையையும் கொண்டு நீண்ட குழாய் போன்ற கண்கள் உள்ள வெங்காயக் கூடைகள்(நீளம் சுமார் 2 அடி, வாய்விட்டம் 6 அங்குலம்) செய்யப்படுகின்றன. வெங்காயத்தைக் காற்றோட்டமுள்ள இந்தக் கூடைகளில் நிரப்பி ஏற்றுமதி செய்கின்றனர்.

Source: Dr.V.Ponnuswami, PhD, PDF (Taiwan), Former Dean & Professor (Horticulture), Horticultural College & Research Institute, Tamil Nadu Agricultural University, Coimbatore

e-mail:swamyvp200259@gmail.com
Website:www.swamyhortiiech.com

Updated on Jan 2016

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016