தவேப வேளாண் இணைய தளம் :: பாரம்பரிய வேளாண்மை
பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம், வேளாண்மை அமைச்சகம், இந்திய அரசு, புதுடெல்லி

முன்னுரை

பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம் நமது பாரம்பரிய பயிர் இரகங்களை பாதுகாக்கவும், மேலும் புதிய இரக அபிவிருத்தியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் நலன் கருதி 2001ம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை செயல்படுத்த பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் தனிச்சிறப்புகளாவன பயிர் இரகங்களை பாதுகாத்தல், உழவர்களின் உரிமையை நிலைநாட்டுதல், பாரம்பரிய இரகங்களை பேணி காத்தல் மற்றும் பாரம்பரிய இரகங்கள் அழியாமல் தடுத்தல்.
பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டத்தின்  முக்கிய நோக்கங்கள்
  • பாரம்பரிய பயிர் வகைகள் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் நிலைநாட்டுதல் மற்றும் புதிய பயிர் வகைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல்
  • விவசாயிகளின் பாரம்பரிய இரகங்களை அங்கீகரிக்கவும், பாதுகாத்து மேம்படுத்தவும் மற்றும் புதிய பயிர் இரகங்கள் உருவாக்கத்திற்கு எந்த நேரத்திலும் விவசாயிகள் தங்கள் பங்களிப்புகளை அளிக்க உறுதி செய்தல்.
  • நாட்டின் வேளாண்மை வளர்ச்சியை அதிகரிக்க புதிய இரகங்கள் உருவாக்குபவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பொது மற்றும் தனியார் துறையில் விதை உற்பத்தியை தூண்டுவதற்கு முதலீடு அளித்தல்.
  • விவசாயிகளுக்கு உயர் தரமான விதைகள் மற்றும் விதைக் குச்சிகள் கிடைப்பதை  உறுதி செய்யும் வகையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துதல்.
ஆணையத்தின் செயல்பாடுகள்
  • புதிய இரகங்கள், வழக்கத்தில் உள்ள இரகங்கள் மற்றும் பாரம்பரிய இரகங்களை பதிவு செய்தல்.
  • புதிய இரகங்களுக்கான தனித்தன்மை ஒத்த குணாதிசயம் மற்றும் நிலைப்பு தன்மை ஆய்வு செய்ய பயன்படும் நெறிமுறைகளை உருவாக்குதல்
  • பதிவு இரகத்தின் சிறப்பியல்புகளை கண்டறிந்து ஆவணம் செய்தல்
  • அனைத்து பயிர் இரகங்களுக்கும் கட்டாயமாக பதிவு அட்டவணை தயார் செய்தல்
  • விவசாயிகளின் இரகங்களை ஆவணம் செய்தல், குறியீடு இடுதல் மற்றும் பட்டியலிடுதல்
  • பாரம்பரிய பயிர் இரகங்கள் சேமிப்பில் ஈடுபடும் விவசாயிகள், விவசாயிகளின் சமூகம் குறிப்பாக பழங்குடி மக்களை கண்டறிந்து அவர்களின் இரகங்களை அங்கீகரித்து விருது வழங்கி கெளரவித்தல்.
  • தேசிய பயிர் இரகங்களை பதிவு செய்யும் பதிவேடுகளை பராமரித்தல்
  • தேசிய மரபணு வங்கியினை பராமரித்தல்.
 
சட்டத்தில் உள்ள உரிமைகள்

மரபியலார் உரிமைகள்

மரபியலாரால் உருவாக்கப்பட்ட இரகங்களை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, விநியோகிக்க, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ய உரிமை வழங்குதல்

ஆராய்ச்சியாளர்களின் உரிமைகள்

உாமைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த இரகங்களை ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த எந்த தடையும் இல்லை. ஆனால் தொடர்ந்து பயன்படுத்த தருணங்கள் அமைந்தால் கண்டிப்பாக அந்த இரகத்தினை உற்பத்தி செய்த மரபியல் வல்லுநரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

விவசாயிகளின் உரிமை

  • விவசாயிகள் தன் அனுபவத்தால் உருவாக்கிய இரகங்களை பதிவு செய்யலாம்.
  • தற்பொழுது வழக்கத்தில் உள்ள இரகங்களை விவசாயிகளின் இரகங்களாகவும் பதிவு செய்யலாம்.
  • இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயியின் இரகங்களை அவர் பாதுகாக்கவும், பயன்படுத்தவும், சாகுபடி செய்ய, பரிமாற்றம்  செய்ய மற்றும் விற்பனை செய்ய இயலும்.
  • பாரம்பரிய பயிர் இரகங்களை பாதுகாத்து வரும் விவசாயிகள் விருதுகள் மற்றும் வெகுமதிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள்.
  • இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த இரகங்கள் சாகுபடி செய்யும் பொழுது எதிர்பார்த்த பலன் தரவில்லை என்றால் விவசாயிகள் இழப்பீடு பெற இச்சட்டத்தின் 39(2) கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஆணையத்தினால் எடுக்கப்படும் முடிவிற்கு விவசாயிகள் மேல் முறையீடு செய்ய விரும்பினால் ஆணைய தீர்பாயம் அல்லது உயர்நீதி மன்றங்களில் வழக்கு தொடர எவ்வித பணமும் கட்ட தேவையில்லை.

பதிவு செய்தல்

தனித்தன்மை, ஒத்த குணாதிசயம் மற்றும் நிலைப்பு தன்மை கொண்ட இரகங்களை பதிவு செய்தல், இவ்விதம் பதிவு செய்யப்படும் இரகங்களின் சிறப்பம்சங்கள், மரபுகள் போன்ற செய்திகளை மத்திய அரசு அதன் அலுவலக குறிப்பேட்டில் வெளியிடும். ஆணையத்தின் மூலம் இந்திய தாவர இரக வெளியீடு இதழில் குறிப்புகள் இடம் பெறும்.

இதுவரை 57பயிர் இரகங்களை மத்திய அரசாங்கம் பதிவு செய்துள்ளது. மேலும் பிபிவி எப்ஆர்ஏ ஆணையமானது. தனித்தன்மை, ஒத்த குணாதிசயம் மற்றும் நிலைப்புத் தன்மையை கண்டறிய ஒவ்வொரு பயிர்களுக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது. இதில் கோதுமை, நெல், மக்காச்சோளம், சோளம், கம்பு, கொண்டைக்கடலை, துவரை, பச்சைப்பயறு, உளுந்து, அவரை, பருத்தி, சணல், கரும்பு, இஞ்சி, மஞ்சள், கடுகு, சூரியகாந்தி, ஆமணக்கு, எள், நிலக்கடலை, சோயா, மிளகு, ஏலக்காய், ரோஜா, சாமந்தி, மா, பூண்டு, தக்காளி, வெண்டை, காளிஃபிளவர், முட்டைகோஸ், வெங்காயம், உருளை, கத்தரிக்காய் போன்றவைகள் அடங்கும்.

தொழில்நுட்ப செய்தி மலர் மரபணு வங்கி தொழில்நுட்ப கையேடு
வேளாண் பல்லுயிர் மரபியல் புத்தகம் வீடியோ சிடி – விதை சட்டம் மற்றும் பதிவு பெற்ற இரகங்களின் விபரங்கள்
ஆண்டு அறிக்கை மூலம் ஆணையத்தின் தகவல்களை மக்களுக்கு தெரிவித்தல்

பதிவு கட்டணம்

வ.எண்

பயிர் இரகங்கள்

கட்டண விபரம்

1.

விதை சட்டம் பகுதி 5 ன் கீழ் நடைமுறையில் உள்ள பயிர் இரகங்கள்

ரூ.1000/-

2.

புதிய இரகம் அல்லது வழக்கத்தில் உள்ள இரகத்திலிருந்து கண்டறியப்பட்டவை

தனிநபர்      - ரூ. 5000/-
கல்வி நிறுவனம் – ரூ. 7000/-
வர்த்தகரீதியாக   - ரூ.10000/-

3.

நடைமுறையில் உள்ள இரகம் – அதைப்பற்றிய பொதுவான தகவல்கள் அறிந்தவை

தனிநபர்      - ரூ.5000/-
கல்வி நிறுவனம் – ரூ.7000/-
வர்த்தகரீதியாக  - ரூ.10000

டியுஎஸ் ஆய்வு மையம் (DUS)

52 யுஎஸ் ஆய்வு மையங்கள் ஆணையத்தால் நிறுவப்பட்டு பலவிதமான பயிர் இரகங்களை பற்றிய குறிப்புகளை பராமரிக்க உதவுகின்றது. இவ்வழிகாட்டி நெறிமுறைகளை ஆணையத்தின் இணையதளத்தில் காணலாம்.

இந்திய தாரவகை ஆய்வு இதழ் (Plant Variety Journal of India)

ஆணையத்தின் இந்திய தாவர வகை ஆய்வு இதழ் ஒவ்வொரு மாதமும் இரண்டு மொழிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முதல் வாரத்தில் பெறும் வண்ணம் அதன் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

சான்றிதழ் பதிவு செய்தல்

ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்த விண்ணப்பம் பதிவாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் பதிவு சான்றிதழ் விண்ணபித்தவருக்கு அனுப்பப்படும். இதுவரை ஆணையத்தால் 305 பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பதிவு சான்றிதழ் மரப்பயிர் மற்றும் கொடி இரகங்களுக்கு 9 ஆண்டுகளும், மற்ற பயிர் இரகங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். மேலும் பதிவு சான்றிதழை புதுப்பித்தல் அல்லது மறு ஆய்வு செய்ய வேண்டுமானால் கொடிப்பயிர்களானால் அதிகபட்சம் 18 ஆண்டும், மற்ற பயிர் இரகங்களுக்கு 15 ஆண்டுகள் வரை மட்டுமே பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

தேசிய பயிர் இரக பதிவு குறிப்பு

ஆணையத்தின் பதிவாளர் தலைமையகத்தில் தேசிய பயிர் இரக பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இதில் பதிவு செய்த அனைத்து பயிர் இரகங்களை பற்றிய தகவல்கள் வல்லுநர்களின் பெயர் மற்றும் விலாசம், பதிவு செய்த தாவர வகைகளை பற்றிய விரிவான தகவல்கள், அதன் விதை அல்லது நாற்றுகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இலாப பங்கீடு திட்டம்

விவசாயிகள் உரிமைச் சட்டத்தில் இலாப பங்கீடு திட்டம் ஒரு முக்கிய செயலாகும். விவசாயிகளின் உரிமைச் சட்டம் பாகம் 26ன் கீழ் இந்திய குடிமகனோ (அ) தனி நபரோ (அ) அரசு சாரா நிறுவனங்களோ பங்குகளை கொண்டு உருவாக்கப்படும் புதிய இரகங்களுக்கு வணிகரீதியாக சந்தையில் விற்கும் அளவிற்கேற்ப மரபியலார் / விவசாயிகள் பொதுநிதியில் கட்டணம் செலுத்த வேண்டும்.

சமூகத்தின் உரிமைகள்

புதிய இரகங்களை உருவாக்குவதற்கு அதனை சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு முக்கிய பங்களிப்பு ஆற்றிய கிராமம் (அ) உள்ளூர் கிராம மக்களுக்கு பங்களிப்பு நிதி வழங்கப்படும்.புதிய இரகம் உருவாக்குவதில் முக்கிய பங்கு ஆற்றிய கிராமம் மற்றும் சமூகத்தைப் பற்றி தனி நபரோ (அ) அரசு சாரா நிறுவனமோ கிராமத்தின் சார்பாக ஆணையத்துடன் முறையிட்டு பங்களிப்பை பெற்றுத் தரலாம்.

போட்டோ பேங்க்கிற்கு இங்கே க்ளிக் செய்யவும்

ஆதாரம்

வேளாண்மை அறிவியல் நிலையம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம்,
நாமக்கல் – 637 002
தொலைபேசி எண் : 04286-266244,266345,266650
தொலைநகல் : 04286 -266650
மின்னஞ்சல் : kvk-namakkal@tanuvas.org.in
இணையதளம் : www.namakkalkvk.com

Updated on March, 2015

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014