Seed Certification
மொச்சை

மொச்சை - தரமான விதை உற்பத்தி முறைகள்

நிலம் தேர்ந்தெடுத்தல்

மொச்சை விதைப் பயிருக்காக தேர்ந்தெடுத்த நிலத்தில் அதற்கு முந்திய பயிர் சான்று பெறாத அதே மொச்சை இரகமோ அல்லது வேறு இரகமோ இருக்கக் கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தின் போது முளைத்து கலவனாக தோன்றும் வாய்ப்புள்ளது. இதனால் விதைச் சான்று பெற இயலாது. மேலும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தோன்றாத நிலமாயிருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் திரட்சியான விதைகளைத் தரும்.

J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன?
         
வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. முந்தைய பருவத்தில் வேறு இரக நெல் பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம்.  இவ்வாறு செய்வதால் “தான் தோன்றிப் பயிர்களால்” ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்

மொச்சைப் பயிரில் தேனீக்கள் அதிகமாக காணப்படுவதால் இது ஓர்அயல் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிர். எனவே, இனக் கலப்பைத் தடுக்க மொச்சைப் பயிரை, சான்று பெறாத அதே இரகமோ அல்லது வேறு இரகத்திடமிருந்தோ விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 75 அடி இடைவெளி விதைப் பயிருக்கும் மற்ற மொச்சை பயிருக்கும் இடையே இருத்தல் அவசியம்.

விதைப்பயிர் செய்ய ஏற்ற பருவம்
         
விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெயிலோ, குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். இதற்கு ஆடிப்பட்டம் மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்
         
நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின்பு மூன்று அடி கொண்ட பார்கள் அமைக்க வேண்டும். கோ2 இரகத்திற்கு 1.5 அடி பார்கள் போதுமானது.

உரமும் உரமிடுதலும்
         
ஒரு ஏக்கருக்கு பத்து வண்டி மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்னர் கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும்.

விதைத் தேர்ந்தெடுத்தலின் அவசியம்

           
விதை உற்பத்திக்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சான்று விதைகள் இனத்தூய்மையுடன் இருப்பதால் வயல்களில் கலவன் தோன்றுவது தவிர்க்கப்பட்டு விதைப் பயிரின் இனத்தூய்மை பாதுகாக்கப்படுகிறது.

விதை அளவு

ஒரு ஏக்கர் பயிரிட 8 கிலோ கோ.1 இரக விதையும், 10 கிலோ கோ.2 இரக விதையும் தேவைப்படும்.

பூசணக்கொல்லி விதை நேர்த்தி
         
மொச்சை விதைகளுக்கு பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் பூசணக்கொல்லி மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ரைசோபிய விதை நேர்த்தி

ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை நேர்த்தி செய்வதற்கு இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகள் தேவைப்படும். ரைசோபியம் விதைகளில் ஒட்டுவதற்கு ஒரு இணைப்புப்பொருள் தேவை. இதனை அரிசி கஞ்சி கொண்டு தயாரிக்க வேண்டும். 500 மி.லி. நீரில் 100 கி அரிசியை கொதிக்க வைத்து பசையாக்க வேண்டும். இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளுக்கு 300 மி.லி. அரிசி கஞ்சி தேவைப்படும். தயார் செய்த அரிசி கஞ்சியை நிலழில் 5 மணி நேரம் உலர்த்த வேண்டும். இதனில் இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடுவதால் கருப்பு நிற பொருள் கிடைக்கும். ஒரு பக்கெட்டில் 8 கிலோ மொச்சை விதையில் ரைசோபியம் சேர்த்த அரிசி கஞ்சியை ஊற்றி கைகளால் (அ) குச்சியால் நன்கு கிளற வேண்டும். இக்கலவை அனைத்து விதைகளிலும் நன்கு பரவிய பின்னர் ஒரு சாக்குப் பையின் மேல் அதனை பரப்பி நிழலில் 6 மணி நேரம் உலர வைக்க வேண்டும். இதனை தயாரித்த 24 மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.

☻எச்சரிக்கை

    • எப்பொழுதும் புதிதாக தயார் செய்த பாக்கெட்டுகளையே வாங்க வேண்டும்
    • பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    • ரைசோபிய பாக்கெட்டுகள் காய்ந்திருந்தால் உபயோகிக்க கூடாது.

விதைப்பு
         
விதைகளை பார்களில் பக்கவாட்டில் விதைக்க வேண்டும். குழிக்கு இரண்டு விதையாக 5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். செடிக்குச் செடி இடைவெளியாக கோ.1 இரகத்திற்கு ஒரு அடியும், கோ.2 இரகத்திற்கு அரை அடியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் முளைப்பு நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூப்பு, காய்ப்படிப்பு மற்றும விதை முதிர்ச்சி ஆகிய பருவங்களில் மண்ணில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

இலைவழி உரம்

மொச்சையில் அதிக காய்பிடிப்பு மற்றும் விதை உற்பத்திக்கு இலைவழி உரம் அளித்தல் அவசியம். இதற்கு நாம் பல இரசாயன பொருட்கள் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உரம் மற்றும் இரசாயன பொருட்களை நூறு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 25/35 ஆம் நாளும், பின்னர் காய்பிடிப்பின் போதும் (40/50 ஆம் நாளும்) தெளிக்கவேண்டும்.

வ.எண்

உரம்/இரசாயனம்

நூறு லிட்டர் நீரில் கரைக்க வேண்டிய அளவு

1.

யூரியா

2.5 கிலோ

2.

டி.ஏ.பி.

650 கிராம்

3.

மியூரியேட் ஆப் பொட்டாஷ்

440 கிராம்

4.

பொட்டாஷியம் சல்பேட்

9 கிராம்

5.

டீபால்

40 கிராம்

           
கோ.1 இரகமாக இருந்தால் விதைத்த 100 நாளும் பின்னர் 120 ஆம் நாளும் என இருமுறை அடிக்க வேண்டும். கோ.2 இரகமாக இருப்பின் விதைத்த 45ம் நாளும் பின்னர் 55ம் நாளும் தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்
         
ஆரம்பத்தில் தோன்றும் களைகளைக் கட்டுப்படுத்த விதைத்த மூன்று நாட்களுக்குள் பாசலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 250 லிட்டர் நீர் தேவைப்படும் எனவே 500 மில்லி பாசலின் தேவை. களைக்கொல்லி தெளித்த 25 ஆம் நாள் ஒரு கைக்களை எடுத்து களைகளை நன்றாக கட்டுப்படுத்தி, மகசூலை அதிகப்படுத்தலாம்.

பயிர் பாதுகாப்பின் அவசியம்

மொச்சை பயிர் வயலில் முளைத்தவுடன் தண்டு ஈ தாக்குதலுக்கு உள்ளாகும்.


பூப்பின் போது பூவண்டுகள் தோன்றினால் அவற்றை பிடித்து அழித்துவிட வேண்டும். முதிர்ச்சி பருவத்தின் போது காய் துளைப்பான் காணப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த ரோகார் (2 மி.லி/லி.) தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

நோய் பாதுகாப்பு

           
ஆன்த்ரக்னோஸ் இலைப்புள்ளி நோய் தோன்றினால் ஒரு லிட்டர் நீரில் 1 கிராம் பெவிஸ்டின் அல்லது 4 கிராம் மான்கோசெப் பூசணக் கொல்லிகளில் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

J 0.1 சதம் மற்றும் 1 சதம் பேவிஸ்டின் கரைசலை தயார் செய்வது எப்படி?

1 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 0.1 சதம் கரைசலாகும். 10 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 1 சதம் கரைசலாகும்.

கலவன் அகற்றுதல்

         
கோ.1 இரகம் நீண்ட கால இரகமாகும். இந்த இரகம் 50 சத பூப்பு அடைய 75 முதல் 90 நாட்கள் தேவை. ஆனால், கோ.2 இரகம் குறுகிய கால இரகம். எனவே, 50 சத பூப்பு அடைய 35/45 நாட்கள் மட்டுமே தேவை. இவை இரண்டு குணாதிசயங்களைத் தவிர வேறு வேற்றுமைகள் இல்லை (அட்டவணை).

பூப்பின் போது கலவன்களை கண்டறிந்து, பூக்காத இரகங்களை நீக்கிவிட வேண்டும். இது மட்டும் அல்லாது ஆன்த்ரக்னோஸ் என்னும் இலைப்புள்ளி நோய் மற்றும் தேமல், வாடல், வேரழுகல் நோய் கண்ட செடிகளையும் நீக்க வேண்டும்.

அறுவடை
         
விதைகள் கோ.1 இரகத்தில் 50 சத பூப்பிலிருந்து 33 நாட்கள் கழித்தும் கோ.2 இரகத்தில் 25 நாட்கள் கழித்தும் முதிர்ச்சி அடையும். அப்போது காய்களின் பச்சை நிறம் மாறி பழுப்பு நிறமடையும். காய்கள் அதிகமாக சுருங்கியோ, நிறம் மாறியோ காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.

விதை உருவாக்கம்

தேர்ந்தெடுத்த காய்களை நிழலில் உலர்த்தி நன்கு காயவைக்க வேண்டும். பின்னர் விதைகளை குச்சி கொண்டு அடித்து பிரித்து அவற்றை காற்றில் தூற்றி சுத்தம் செய்ய வேண்டும் (வரைபடம் 3).

விதைகளை 18/64” (7 மி.மீ) அங்குல வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். விதைகளில் காணப்படும் உடைந்த, சுருங்கிய, பூசணம் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.

விதைச் சேமிப்பு

விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதைச் சேமிப்புப் பைகள்

விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும்பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம். எப்பொழுதும் விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்கி வையுங்கள்.

விதைச் சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு
         
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

விதைச் சேமிப்பு
         
விதைகளை நன்கு சேமிக்க அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதைநேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.

பயறுவிதை மற்றும் தானிய சேமிப்பு

விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு. அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால் அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதைநேர்த்தி செய்வது நல்லது.

நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது, விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம்.

☺ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்றால் என்ன?

ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்பது சாதரணமான வெள்ளை களிமண் ஆகும். இது ஈரப்பதம் நீக்கப்பட்டு, அமிலத்தினால் கழுவப்பட்டது என்பதால் பூச்சிகளின் மேல்புரத்தை தாக்கி அழிக்கும். இது மிகவும் குறைந்த விலை கொண்டது மற்றும் மனிதர்களுக்கு தீங்கற்றது. ஒரு கிலோ விதைக்கு நூறு   கிராம் ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும்.

விதைச் சான்றளிப்பு

தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும்,களைவிதை, பிற இரக விதை, நோய் தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும்,முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது முட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.

விதை உற்பத்திக்கு தரக்கட்டுபாட்டுக்கென்று சட்டப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத் தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்னறன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

வயல் தரம்

  • கலவன்கள்                                            0.2 சதம்

(அதிக பட்சம்)

விதைத் தரம்


சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

97 சதம்

தூசி (அதிக பட்சம்)

3 சதம்

பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)

0.05 சதம்

களை விதைகள் (அதிக பட்சம்)

0.01 சதம்

முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)

70 சதம்

ஈரத்தன்மை (அதிக பட்சம்)

 

காற்றுப்புகாத பை

7.0 சதம்

காற்றுப்புகும் பை

12.0 சதம்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam