Seed Certification
பாகல்

பாகல் விதை

தரமான விதை உற்பத்தி முறைகள்

விதை தரமானதென்றால் அது தனது பாரம்பரிய குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் களை பிற ரகம் மற்றும் பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், பூச்சி  பூஞ்சாணங்களால் தாக்கப்படாமலும், தூசி துப்பு இல்லாமலும் இருப்பது அவசியம். விதை விதைத்தவுடன் நன்கு முளைத்து செழிப்பாகவும், சீராகவும் வளர்ந்து அதிக மகசூலுக்கு அடிப்படையாக இருப்பது தரமான விதையே ஆகும். இப்பொழுது தரமான விதை உற்பத்தி வழிமுறைகளை காண்போம்.

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

நிலத் தேர்வு செய்யும் போது முந்தைய பருவத்தில் வேறு இரக பாகல் பயரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்

பாகலில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே பூத்து மகரந்த சேர்க்கை ஏற்படுகின்றன. எனவே, பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக வயல்களிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரம் தனித்துப் பயிரிட வேண்டும். இவ்வாறு தனித்துப் பயிரிடுவதால் இரகங்களின் பாரம்பரியத் தன்மை அல்லது மரபுத்தன்மை கெடாமல் பாதுகாக்க முடியும்.

விதைத் தேர்வு

“விளையும் பயிர் முளையிலே” என்ற பழமொழி. செடிகளை எவ்வாறு பராமரிக்கிறோமோ அதைப் பொறுத்தே பயிர் மகசூலும் அமையும். விதை உற்பத்தி பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய தன்மைகளையும் பராமரிப்பது, விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே, விதை உற்பத்தி பயிர் விதைப்புக்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுநர் விதைகள் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம்.

நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு

விதை உற்பத்தி செய்யத் தேர்ந்தெடுத்த நிலத்தை நன்கு உழுது பண்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் 2.5 மீட்டருக்கு மீட்டருக்கு 2 மீட்டர் என்ற இடைவெளியில் 45 செ.மீ நீள, அகல ஆழமுள்ள குழிகளை தோண்ட வேண்டும்.  இவ்வாறு குழிகள் எடுத்த ஒரு வாரத்திற்குப்பின் குழி ஒன்றுக்கு 10 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் யூரியா 13 கிராம், சூப்பர் பாஸ்பேட் 72 கிராம் மற்றும் பொட்டாஷ் 19 கிராம் ஆகிய உரங்களை குழி மண்ணுடன் நன்கு கலந்து குழிகளை நிரப்பி சமப்படுத்தி விடவும். மேலும் பாகல் படரும் தன்மையுடைய செடி என்பதினால் நடவு வயல் முழுவதும் கொடிகள் படருவதற்கு வசதியாக படத்தில் உள்ளது போல் பந்தலை 2 மீட்டர் உயரத்தில் அமைக்க வேண்டும். அல்லது படத்தில் உள்ளது போல வரிசை வரிசையாக கம்பிகளை கட்டி அதன்மீது கொடிகளை படர விடலாம். அவ்வாறு பந்தல் அமைத்தோ அல்லது வரிசையாக கம்பிகள் கட்டியோ கொடிகளை படர விடுவதால் நல்ல மகசூல் கிடைப்பதுடன் கலவன்கள் நீக்குவது எளிதாகும்.

விதைப்பு

       


பொதுவாக பாகல் விதைகள் வயல்களில் விதைத்த பின்பு குறைந்த முளைப்புத்திறனுடன் காணப்படுகின்றன. ஏனெனில் , விதைகள் முளைக்க நீண்ட நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவ்வாறு முளைப்பதால் செடிகள் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வராமல் கால தாமதமாகும். எனவே, பாகலில் முளைகட்டிய விதைகளை விதைப்பது செடிகளை ஒரே சீராக வளர்ப்பதற்கு உதவுகின்றன.

விதைகளை முளைகட்டுவதற்கு முதலில் பாகல் விதைகளை 24 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய விதைகளை இருமடங்கு ஈர மணலுடன் கலந்து விதைகள் வெளியே தெரியாமல் மணலுக்குள் புதைந்து இருக்குமாறு மூன்று நாட்கள் வைக்க வேண்டும். அந்நாட்களில் மணலின் ஈரம் குறையாமல் நீர் விட்டு வரவும். அதன்பிறகு மணலில் இருந்து விதைகளை பிரித்தெடுக்க வேண்டும். பிரித்தெடுத்த விதைகளில் முளைக்கூறு வந்துள்ள விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க பயன்படுத்த வேண்டும்.


ஒரு ஏக்கருக்குத் தேவையான 1.8 கிலோ முளை கட்டிய விதைகளை மேலே குறிப்பிட்டவாறு தயார் செய்த குழிகளில் குழி ஒன்றுக்கு மூன்று விதைகள் வீதம் சம இடைவெளி விட்டு ஊன்ற வேண்டும்.

முளை கட்டிய விதைகளை விதைப்பதால் ஒரு குழிக்கு மூன்று விதைகள் போதுமானது. செடிகளை கலைக்க வேண்டியதில்லை. ஒரே சமயத்தில் செடிகள் முளைத்து சீராக வளர்வதால் பயிர்களை பராமரிப்பது எளிது.

நீர் நிர்வாகம்

விதை நடவு செய்தபின் பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வாறு தண்ணீர் ஊற்றும் போது மண்ணை நீர் அரிக்காமலும், விதைகள் வெளியில் தெரியாமலும் கவனமாக ஊற்ற வேண்டும். செடிகள் முளைத்து நன்கு வளர்ந்த பின்பு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சுவது முக்கியம்.

நடவு பாத்தி பராமரிப்பு
       
ஒவ்வொரு குழியிலும் திடமான மூன்று செடிகளை மட்டும் பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நாம் அளிக்கும் உரம் மற்றும் நீர் போன்றவைகளுக்கு பற்றாக்குறையில்லாமலும் செடிகளுக்குள் போட்டியில்லாமலும் நன்கு வளர ஏதுவாகும். விதைகள் நட்ட 20 - 25 நாட்களில் செடிகளில் கொடி ஓடத் தொடங்கிவிடும். அச்சமயத்தில் ஒவ்வொரு செடிக்கும் முள் இல்லாத கம்புகளை நட்டு பந்தலின் மேல் செடிகளைப் படர விடவேண்டும். செடிகளின் காய்கள் பிடிக்கும் வரை தினமும் செடியில் தோன்றும் கொடிகளை பந்தலில் படரவிட வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

குழிகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது மிக முக்கியம். ஏனெனில், களைச் செடிகள் பாகல் செடிகளுக்கு போட்டியாக இடுபொருட்களை எடுத்துக் கொள்ளுவதால் விதை மகசூல் குறைவதுடன் அவற்றின் தரமும் குறைகின்றன. எனவே, செடிகள் படருவதற்குள் குழிகளில் இரண்டு அல்லது மூன்று முறை கைக்களை எடுத்துவிட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்

பொதுவாக கொடிவகைக் காய்கறிகளில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக பூக்கின்றன. செடிகளில் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால்தான் நமக்கு நல்ல மகசூல் கிடைக்கும். எனவே பாகல் விதைப் பயிர்க்கு எத்திரல் என்னும் வளர்ச்சி ஊக்கியை 200 பி.பி.எம். அளவில் செடிகளில் 4 இலைகள் தோன்றிய தருணத்தில் இருந்து ஒரு வார இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும்.

மேலுரம்

விதைப்பயிர் காய்கறிப் பயிரில் இருந்து மாறுபடுவதால் காய்கறி விதைப் பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில், காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்தால்தான், அவற்றினுள்ளே உள்ள விதைகள் நன்றாக முதிர்ச்சி அடைந்த நல்ல தரமுள்ள விதையாக நமக்கு கிடைக்கும். எனவே, மேலுரம் இடுவது மிக முக்கியம். பாகல் விதைப் பயிர்க்கு கீழ்க்கண்டவாறு மூன்று மேலுரங்கள் இடவேண்டும்.

மேலுரம்

உரங்கள்

குழி ஒன்றுக்கு

தருணம்

முதல் மேலுரம்

யூரியா

22 கிராம்

முதல் பூ தோன்றும் நாள்

இரண்டாவது

யூரியா + பொட்டாஷ்

18 கிராம் + 5 கிராம்

பூத்த 20வது நாள்

மூன்றாவது

யூரியா + பொட்டாஷ்

18 கிராம் + 5 கிராம்

பூத்த 40வது நாள்

பயிர் பாதுகாப்பு

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது போல விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

தரமான விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம்

சாதரணமாக, பாகல் வயல்களில் சில கொடிகள் வேறுபட்ட இலை அமைப்புகளுடன் சில கொடிகள் வேகமாக வீரியத்துடன் படர்வதையும், மற்றும் சில கொடிகள் மிகவும் மெதுவாக காலதாமதமாகி படர்வதையும் காணலாம். அவை, ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க முடியும்? விதை உற்பத்தி செய்யப்படுகிற பாகல் வயலில் ஏதோ ஒரு வேறு இனக்கலப்பு ஆகியிருப்பதே இது தெரியப்படுத்துகிறது. இதனால், நாம் உற்பத்தி செய்யும் பாகல் இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

எனவே, பாகல் விதைக்காக நடவு செய்யப்பட்ட பாத்திகளில் அந்தக் குறிப்பிட்ட பாகல் இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டுத்  தெரிகின்ற எல்லா பயிர்களையும், களைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட முக்கியமாக வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்னரே நீக்கிவிடுதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி செய்யலாம்.

கலவன்கள் நீக்கும் தருணம்            நீக்கப்பயன்படும் தன்மைகள்

பூப்பதற்கு முன்                                   செடிகளின் உயரம், படரும் தன்மை, இலை மற்றும் தண்டின்                                                           அமைப்பு,நிறம்.
பூக்கும் தருணம்                                   பூக்களின் நிறம்
காய்ந்த பின்                                       காய்களின் வடிவம், நிறம், பருமன்

அறுவடை

பாகலில் தானியப் பயிர்கள் போல் ஒரே அறுவடையாக இல்லாமல் பல அறுவடைகளாக செய்ய வேண்டி உள்ளது. அவற்றில் முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளை காய்கறிக்காக அறுவடை செய்து கொண்டு இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து வரும் பழங்களையே விதை எடுக்க பயன்படுத்த வேண்டும். இவ்வறுவடைகளிலிருந்து கிடைக்கும் விதைகள் மட்டுமே அதிக முளைப்புத்திறனும், வீரியமும் உடையதாக இருக்கும். அதே போல அறுவடைகளிலிருந்து படத்தில் உள்ளது போல நடுத்தரம் முதல் பெரிய பழங்களை மட்டுமே விதை எடுப்பதற்காக உபயோகிக்க வேண்டும். மேலும், அறுவடை செய்யும்போது பழங்கள் நன்கு பழுத்து முதிர்ந்திருக்க வேண்டும்.

பொதுவாக காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து 5 முதல் 7 நாட்கள் கழித்த பின் விதைக்காக அறுவடை செய்ய வேண்டும். ஏனெனில், அப்பொழுதுதான் விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்திருக்கும். அச்சமயத்தில் காய்களின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து படத்தில் உள்ளது போல பழுக்க ஆரம்பிக்கும். அச்சமயத்தில் காய்களை அறுவடை செய்தபின் ஓரிரு நாட்கள் வைத்திருந்து விதை பிரித்தெடுக்க வேண்டும். விதைக்காக எடுக்கும் போது பாரம்பரிய குணாதிசயங்கள் கொண்ட நடுத்தரம் முதல் பெரிய பழங்களில் இருந்தே விதை எடுக்க வேண்டும். அவ்வாறு பழங்களை தேர்வு செய்வதால் விதை மகசூல் கூடுவதுடன் தரமான விதைகள் கிடைக்கின்றன.

விதைத்தரம் பராமரிக்க சில வழிமுறைகள்

காய்களை அறுவடை செய்தபின் விதை பிரித்தெடுக்கும் முன்பு தேர்ந்தெடுத்த இரகத்திலிருந்து வேறுபட்ட காய்களையும் படத்தில் உள்ளது போல சிறிய பழங்களையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கிய காய்களையும் அகற்றிவிட்டு நல்ல தரமான காய்களையே விதை எடுக்க பயன்படுத்த வேண்டும்.

விதை பிரித்தெடுக்கும் முறைகள்


தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களையே விதை எடுக்கப் பயன்படுத்த வேண்டும். பாகலில் விதை பிரித்தெடுப்பது எளிது. பழங்களை படத்தில் உள்ளது போல நீளவாக்கில் இரண்டாக அறுத்து எடுத்து, பின் நடுவில் உள்ள வளவளப்பான சதையுடன் கூடிய விதைகளை அகற்றி விட வேண்டும். அவ்வாறு பிரித்தெடுத்த சதையுடன் கூடிய விதைகளை கைகளால் நன்கு கசக்கி நீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவிவிட வேண்டும். அதன்பின் விதைகளை நன்கு உலர்த்த வேண்டும்.

விதையை உலர்த்துதல்

பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும். பாகலில் விதைகள் அதிக அளவு ஈரப்பத சூழ்நிலையில் இருப்பதால், விதை பிரித்தெடுத்தவுடன் கித்தான் சாக்குகளின் மேல் பரப்பி நிழலில் 8 முதல் 10 மணி நேரம் வரை ஓரிரு நாட்கள் உலரவைக்க வேண்டும். விதைகளை வெய்யிலில் உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெய்யிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

 

 

விதை சுத்திகரிப்பு


விதைகளை நன்கு உலர்த்திய பின்பு விதைகளை சுத்திகரிப்பது மிக முக்கியம். அவ்வாறு விதை சுத்திகரிப்பு செய்வதால் முதிராத பொக்கு மற்றும் சிறிய விதைகளை அகற்றுவதால் விதைகளின் வீரியம் மற்றும் சேமிப்புத் திறன் கூடுகின்றன.

பாகலில் விதை தரம் பிரிக்க முதலில் படத்தில் உள்ளது போல வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துடன் நல்ல முதிர்ச்சி அடையாமல் உள்ள பொக்கு விதைகளைப் பெண்களை வைத்து பொறுக்கிவிட வேண்டும். அதன்பின் விதைகளை பி.எஸ்.எஸ்.4 நம்பர் கம்பி வலை சல்லடை அல்லது 16/64” வட்டக்கண் சல்லடைகள் கொண்டு சலித்து தரம் பிரிக்க வேண்டும். விதைகளை சலித்து சல்லடை மேலே தங்கும் தரமான, அடர்த்தியான விதைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

விதை சுத்திகரிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை
       
விதை பிரித்தெடுக்கும் கலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். விதைத் தரம் பிரிக்கும் சல்லடைகளை ஒரு இரகத்திற்குப் பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் பொழுது நன்கு சுத்தம் செய்யாவிடில் விதை கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும். எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விதை சேமிப்பு

விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்

விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 7 - 8 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில் நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதை நேர்த்தி

விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வைக்கவேண்டும். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இராசயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமிக்கவேண்டும். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

விதை சேமிப்புப் பைகள்

விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி ஓரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் அல்லது அலுமினிய பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

விதைச் சான்றளிப்பு

விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு ஆகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, முட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதை சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

சான்று விதை உற்பத்திக்கு பரிந்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம்

வயல் தரம்

  • கலவன்கள்                                                            0.20 சதம்

(அதிக பட்சம்)

  • அனுமதிக்க முடியாத களைச் செடிகள்

(அதிக பட்சம்)                                                                    -

விதைத் தரம்

  • சுத்தமான விதைகள்

(குறைந்த பட்சம்)                                                   98 சதம்
தூசி (அதிக பட்சம்)                                                 2 சதம்

  • பிற இனப்பயிர் விதைகள்                                 இருக்கக்கூடாது

(அதிக பட்சம்)      

  • பிற இரக விதைகள்                                          10/கிலோ

(அதிக பட்சம்)

  • களை விதைகள் (அதிக பட்சம்)                               இருக்கக்கூடாது
  • அனுமதிக்க முடியாத களைவிதைகள்

(அதிகபட்சம்)                                                                 இருக்கக்கூடாது

  • முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)                       60 சதம்
  • ஈரத்தன்மை (அதிக பட்சம்)       

காற்றுப்புகும் பை                                                   7.0 சதம்
காற்றுப்புகாத பை                                                  6.0 சதம்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam