மீன் வளம் :: நீர் மேலாண்மை

 

  • மீன் வளர்ப்பினை நண்ணீர், உவர்நீர் மற்றும் கடல்நீர் ஆகிய 3 வகை நீரிலும் மேற்கொள்ளலாம். நமது நாட்டில் உவர் மற்றும் கடல்நீரைப் பயன்படுத்தி இறால், நண்டுகள், கடற்பாசிகள், நுண்பாசிகள் போன்றவைகளை வளர்க்க இயலும்.
  • கெண்டை மீன்கள் பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளவை. மேலும் இவை தாவரப் பொருட்கள், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களை உண்டு வாழக்கூடியவை. எனவே இவற்றை குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி செய்யலாம்.
  • மீன் பண்ணை அமைக்க களி மண், வண்டல் மற்றும் மணல் கலந்த மண் வகைகள் ஏற்றவை. பாறைகள், அதிக மேடு பள்ளங்கள் இன்றி சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 9 வரை இருக்க வேண்டும்.
  • மீன் வளர்ப்புக் குளங்களை குறைந்தது 1/4 ஏக்கர் (1000 ச.மீ) பரப்பில் அமைக்கலாம். மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே சிறந்தது.
  • மீன் குளங்களில் சுண்ணாம்பு இடுதல் நீருக்கு போதுமான கார மற்றும் அமிலத்தன்மையை அளிக்கவும், நச்சுயிரிகளை அழிக்கவும் உதவும். அதோடு   நீரின் கலங்கல் தன்மையையும், பாசிப்படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்தல் போன்ற பலன்களையும் தரும்.
  • மீன் பண்ணைகளில் களை அல்லது பகை மீன்களை அழிப்பதற்கு குளத்தில் பலமுறை இழுவலை கொண்டு இழுத்துத் தேவையற்ற மீன்களை அழிக்கலாம் அல்லது பிளீச்சிங் பவுடர், இலுப்பைப் புண்ணாக்கு போன்ற சில குறிப்பிட்ட மீன் (பூச்சிக்) கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
  • நன்னீர் மீன் குளங்களில் நீரின் ஆழம் 1 மீ (4 - 5 அடி)க்கு அதிகமாக இருத்தல் வேண்டும். மீன்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போதும், வெப்பநிலை அதிகரிக்கும் போதும் நீரின் ஆழத்தை அதிகரிக்க வேண்டும்.
  • நன்னீர் மீன் வளர்ப்பில் நீரின் பச்சை நிறம் குறைந்து, ஒளி ஊடுருவும் ஆழம் அதிகரிப்பது, நீரில் இயற்கை உணவுகளின் அளவு குறைவதைக் காட்டும் அறிகுறி. இந்நிலையில் குளங்களுக்கு உரமிடுதல் அவசியம். ஒளி ஊடுருவும் ஆழம் 20 - 30 செ.மீ ஆக இருப்பது நல்லது.
  • மீன் வளர்ப்புக் குளங்களில் கோடை காலங்களிலும், தொடர்ச்சியாக மேகமூட்டம் இருக்கும்போதும். பிராணவாயு பற்றாக்குறை ஏற்படலாம். மழைக்காலங்களில் குளத்து நீரில் அமிலத்தன்மை ஏற்படலாம். இத்தகைய தருணங்களில் குளங்களுக்கு அதிக அளவில் அங்கக உரம் இடக்கூடாது.
  • மீன் குளங்களில் அல்லி, தாமரை போன்ற படரும் நீர்த்தாவரங்கள் அதிகமாக இருந்தால் சூரிய வெளிச்சம் கிடைக்காமல் இயற்கை உணவு உற்பத்தி குறையும் . எனவே அவற்றின் தண்டுகளை வெட்டி, இலைகளை கிழித்து விட்டால் புல் கெண்டை மற்றும் ரோகு இன மீன்களுக்கு உணவாக பயன்படும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014