| | |  |  |  |  |
 
பச்சைப்பயறு
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

பச்சைப்பயறு - தரமான விதை உற்பத்தி முறைகள்

நிலம் தேர்ந்தெடுத்தல்
    
விதைப்பயிர் பயிர் செய்யும் நிலம் வடிகால் வசதி கொண்டிருக்க வேண்டும். மேலும் அந்நிலம் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்கியதாக இல்லாதிருத்தல் அவசியம். களர், உவர் மற்றும் அமிலத்தன்மை இல்லாமல் இருப்பது அவசியம்.
     
விதைப் பயிர் விதைக்கும் நிலத்தில் அதற்கு முந்தய பருவத்தில் வேறு பச்சைப்பயறு சாகுபடி செய்திருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அது சான்று பெற்ற அதே இரகமாக இருத்தல் நல்லது. இதனால் தன்னிச்சையாக முளைக்கும் கலவன்களை தடுக்கலாம்.

இனத் தூய்மையைப் பராமரிக்க பயிர் விலகு தூரம்
    
பச்சைப் பயறு தன் மகரந்தச்சேர்க்கை கொண்டிருந்தாலும், தேனீக்கள் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளது. எனவே, விதைப் பயிர் வேறு பச்சைப்பயறு இரகத்திடமிருந்தும், சான்று பெறாத அதே இரகத்திடமிருந்தும், 5 மீட்டர் (15 அடி) இடைவெளி இருத்தல் அவசியம்.
     
இனக்கலப்பை தடுக்க 5 அல்லது 6 வரிசை விதை பயிர் இரகத்தை எல்லைப் பயிராக விதைக்க வேண்டும்.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்
    
விதைகள் முதிரும் போது அதிக மழையோ, வெயிலோ, குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். பச்சைப்பயறு விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஆடி மற்றும் மாசிப் பட்டங்களாகும்.

நிலம் தயாரித்தல்
     
நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை நன்கு உழவு செய்ய வேண்டும். இதனால் மண் நன்கு பக்குவம் அடையும். நிலத்தை பாத்திகளாகவோ, அல்லது 30 செ.மீ. (1 அடி) அகலப் பார்களாக அமைத்துக் கொள்ளலாம்.

உரமும் உரமிடுதலும்
    
ஏக்கருக்கு 10 வண்டி மக்கிய தொழுவுரம் இட்டு மீண்டும் உழ வேண்டும். அடி உரமாக 20 கிலோ யூரியா மற்றும் 120 கிலோ சூப்பர் மற்றும் 85 கிலோ பொட்டாஷையும் கலந்து பார்களின் பக்கவாட்டில் இட வேண்டும்.

விதை தேர்ந்தெடுத்தலின் அவசியம்
    
விதைப் பயிர் உற்பத்திக்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சான்று விதைகள் இரகத்தின் மரபுத் தன்மைகளுடன் அதிக முளைப்புத் திறனும், வீரியத் தன்மையும் கொண்டிருப்பதால் அவைகள் விரைவாக முளைத்து வீரியமுள்ள நாற்றுகளை கொடுக்கும். இதனால் பயிர் எண்ணிக்கை அதிகரித்து, அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.

விதை அளவு
    
ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படுகிறது.

கடின விதைகள்
     
பயறு விதைகளை விதைத்து, அவை முளைக்கும் போது சில விதைகள் கல் போன்று கடினமாக இருக்கும். இவைகளை கடின விதைகள் என்கிறோம். இவ்விதைகள் நீரில் ஊற வைக்கும் போது நீர் உறிஞ்சாமல் கல் போன்று காணப்படும்.
     
விதை உற்பத்தியின் போது பயிருக்கு போதுமான தண்ணீர் கிடைக்காதது, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடின விதைகள் உருவாகின்றன. சேமிப்பின் போது பொதுவாக கடினத்தன்மை நீங்கி விடும். எனினும் கடின விதை காணப்பட்டால் அவற்றை நீக்கி விட வேண்டும்.
     
கடின விதையை அறிய, விதைகளை நீரில் ஊறப்போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்பும், சில விதைகள் நீரை உறிஞ்சாது அப்படியே காணப்படும். அவ்வாறு நீர் உறிஞ்சாத விதைகள் கடின விதைகளாகும். அவற்றை நீக்கி விட்டு மற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகள் வயலில் ஒரே சீராக முளைக்கும்.

கடின விதையை கட்டுப்படுத்துதல்
     
பத்து சதவீதத்திற்கும் அதிகமாக கடின விதைகள் காணப்பட்டால், அந்த விதைகள் விதைப்பதற்கு ஏற்றதல்ல, இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து விதைக்கும் போது விதைக் கடினத்தன்மை நீங்கி விடும். உடனே விதைக்க வேண்டும் என்றால், விதையின் கடினத்தன்மை நீங்க அமிலச் சிகிச்சை செய்ய வேண்டும்.

அமிலச் சிகிச்சை என்றால் என்ன?
    
விதையின் கடினத் தன்மைக்கு காரணமே விதை உறை கடினமாக இருப்பது தான். அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது, விதையுறை மென்மை அடைகிறது. இதனால் நீர் எளிதில் உட்சென்று கடினத் தன்மை நீங்கி முளைப்புத் திறன் அதிகமாகிறது.
     
அமிலச் சிகிச்சை செய்ய 10 சத வியாபார ரீதியான கந்தக அமிலம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதைக்கு 100 மிலி என்ற அளவில் கந்தக அமிலம் கலந்து, இரண்டு நிமிடம் வைத்திருந்து பின்னர் நீரில் மூன்று நான்கு முறை கழுவ வேண்டும். இதனால் விதைகளின் மேல் படர்ந்துள்ள அமிலம் நீங்கி விடும். பின்னர் நிழலில் நான்கு மணி நேரம் உலர்த்தி விதைக்கலாம்.

நுண்ணூட்ட விதை நேர்த்தி

கடினப்படுத்தப்பட்ட விதைகள் வறட்சியை தாங்குவதோடு, விதைப் பயிருக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் கிடைத்து விதைகள் திறம் பெற முடிகிறது. இதற்கு மாங்கனீஸ் சல்ஃபேட் என்ற இரசாயன உப்புக் கரைசலை தயாரிக்க வேண்டும்.

மாங்கனீஸ் சல்ஃபேட் உப்புக் கரைசலை தயாரிப்பது எப்படி?

  1. பச்சைப் பயறு விதைகளை கடினப்படுத்த 0.01 சத மாங்கனீஸ் சல்ஃபேட் உப்பு கரைசலை தயாரிக்க வேண்டும்.
  2. இதற்கு 5 லிட்டர் சுத்தமான நீர் எடுத்து, அதில் 0.5 கிராம் மாங்கனீஸ் சல்ஃபேட் உப்பைக் கரைக்கவும்.
  3. மேற்சொன்ன கரைசலிலிருந்து 3.5 லிட்டர் எடுத்து அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான எட்டு கிலோ பச்சைப் பயிறு விதைகளை மூன்று மணி நேரம் ஊறப்போட வேண்டும்.
  4. பின்னர் விதைகளை ஆறு மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

பூசணக்கொல்லி விதை நேர்த்தி
     
கடினப்படுத்திய விதைகளை காப்டான் அல்லது பெவிஸ்டின் பூசணக் கொல்லியினை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூசணக் கொல்லி கலந்த 24 மணி நேரம் கழித்து நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வது சாலச் சிறந்தது.

ரைசோபிய நுண்ணுயிரினை பயன்படுத்துவது எப்படி?
    
பயறு வகைப் பயிர்களின் வேர்களில் வேர்முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் இருக்கின்றன. இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கின்றன.
     
பச்சைப்பயறு பயிருக்கு அதற்கென்று பரிந்துரைக்கப்படும் ரைசோபிய நுண்ணுயிரை  உபயோகித்தால் நல்ல பயன் அடையலாம்.  இரண்டு பொட்டலங்கள் நுண்ணுயிர் கலவையை 500 மில்லி ஆற வைத்த கஞ்சியுடன் கலந்து பின்னர் 8 கிலோ விதையுடன் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதையை 3 - 4 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.
     
பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக் கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிடில் மருந்தினால், ரைசோபிய நுண்ணுயிர் பாதிப்புக்குள்ளாகும்.

விதைப்பு
     
ஒரு அடி பார் அமைத்த நிலத்தில், பார்களில் பக்கவாட்டில் குழிக்கு இரண்டு விதை என்ற விகிதத்தில் விதைக்கலாம். செடிக்குச் செடி இடைவெளி 10 செ.மீ (நான்கு விரல் இடைவெளி) இருக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் முளைப்பு நீர் அவசியம். அதன் பின்பு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூப்பு மற்றும் காய்ப்பிடிப்பு சமயங்களில் நீர் பாய்ச்சுதல் மிகவும் அவசியம். காய்ப்பிடிப்பின் போது நீர் சரிவர பாய்ச்சாவிட்டால் கடின விதைகள் தோன்றுவதற்கு ஏதுவாகிறது.

இலைவழி உரம்
    
அடியுரத்தின் தேவைபற்றி நாம் முன்பே பார்த்தோம். எனினும் விதைப்பயிருக்கு அடியுரம் மட்டுமே போதாது என்பது முற்றிலும் உண்மை. இதற்கு நாம் பல இரசாயனக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
     
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரம்/இரசாயனங்களை நூறு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 25 - 35 ஆம் நாளும், பின்னர் காய்ப்பிடிப்பின் போதும் (40 - 50 ஆம் நாளும்) ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.

வ.எண்

உரம்/இரசாயனம்

அளவு (நூறு லிட்டர் நீரில் கரைக்க வேண்டிய அளவு)

1.

யூரியா

4 கிலோ

2.

டி.ஏ.பி

1000 கிராம்

3.

முரியேட் ஆப் பொட்டாஷ்

600 கிராம்

4.

பொட்டாஷியம் சல்ஃபேட்

20 கிராம்

5.

டீபால்

40 மில்லி

6.

சக்சினிக் அமிலம்

20 கிராம்

களை நிர்வாகம்
    
தக்க தருணத்தில் களைகளை நீக்குவதன் அவசியம் பற்றி நாம் நன்கு அறிவோம். பச்சைப்பயறு விதைப்பயிரில் களைகளை நீக்குவதால் பச்சைப்பயறு செடிகள் வேகமாக வளர்ந்து விளைச்சலுக்கு உதவும். விதைத்த மூன்று நாட்களுக்குள் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி பாசலின் களைக் கொல்லியை கலந்து தெளிக்க வேண்டும். பின்னர் 15 நாள் கழித்து ஒரு கைக் களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பின் அவசியம்

பூச்சிகள்
     
பச்சைப்பயிரில் தண்டு ஈயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இதனால் செடிகள் காய்ந்து விடும். இதனைத் தடுக்க விதைத்த 7 வது நாளும் மீண்டும் பத்து நாட்களுக்கு பின்பும் எண்டோசல்பான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி மருந்து கலந்து தெளிக்கலாம். விதைப்பயிர் வளர்ச்சி பருவத்தின் போது காணப்படும் முக்கிய பூச்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் (அல்லது) டைமித்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 மில்லி கலந்து தெளிக்கவும்.

நோய்கள்
    
வளர்ச்சி பருவங்களின் போது காணப்படும் தேமல் நோய் பாதித்த செடிகளை அவ்வப்போது நீக்க வேண்டும். வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் கொண்ட செடிகளை நீக்குவதுடன், பிடுங்கிய இடத்தில் 0.1% பெவிஸ்டின் கரைசல் ஊற்ற வேண்டும். இதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

கலவன் அகற்றுதல்
     
பிற இரகம், விதைப்பயிரில் கலந்து விடுவதை கலவன் என்கிறோம். கலவன்கள் விதைப் பயிரின் இனத்தூய்மையைப் பாதிக்கின்றன. மேலும், சிலவகைக் கலவன்களினால் பூச்சி மற்றும் நோய் பரவும் வாய்ப்புகளும் உண்டு.
     
எனவே பச்சைப்பயிர் விதை உற்பத்தியில் கலவன்களை கீழ்காணும் பருவங்களில் கண்டிப்பாக நீக்குதல் அவசியம்.

  1. பூக்கும் பருவத்திற்கு முன்னர்
  2. பூப்பின் போது
  3. காய்ப்பிடிப்பின் போது
  4. அறுவடைக்கு முன்னர்

முளைத்த 25 நாட்களில் கலவன்களைக் கண்டறிந்து அகற்றி விட வேண்டும் (அட்டவணையில் காண்க). இதற்கு பயிர் செய்யப்பட்ட இரகத்தின் இயல்புகளை கொண்டிராத செடிகளையும், கொடி ஓடிய செடிகளையும், வேறு பயர் செடிகளையும் நீக்கி விடுவதால் விதைப் பயிரில் இனத்தூய்மையைப் பாதுகாக்கலாம். அதே போன்று வேர் அழுகல் நோய், வாடல் நோய், மஞ்சள் நோய் மற்றும் தேமல் நோய் கொண்ட செடிகளையும் நீக்க வேண்டும்.
     
பூப்பின் போது பூக்களின் நிறம் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும். காய்ப்பிடிப்பின் போது காய்களின் நீளம், நிறம், காய் மீது உள்ள முடி ஆகியவற்றைக் கொண்டு கலவன்களை அகற்றலாம். அறுவடைக்கு முன்னர் விதைகளின் நிறம் மற்றும் உருவம் கொண்டு கலவன் அகற்ற வேண்டும்.

அறுவடை
     
விதைத்த 70 - 80 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. இது சுமார் 50 சத பூப்பிலிருந்து 30 நாட்களாகும். காய்கள் பழுப்பு நிறம் அடைவது அறுவடையின் அறிகுறி ஆகும். செடிகளில் 70 சத காய்கள் கறுமை நிறம் அடைந்தவுடன், செடிகளை வெட்டி களத்தில் போடலாம். தாமதித்தால் காய்கள் வெடித்து விதை சிதறி விடும்.
     
அறுவடைக்கு முன் தெளிப்பு

அறுவடைக்கு முன்னர், பயறு வண்டுகளின் சேதத்தைத் தடுக்க எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
     
அறுவடை செய்த காய்களின் ஈரப்பதம் சுமார் 17 - 18 சதம் இருக்கும். செடிகளை களத்தில் காயப்போட வேண்டும். ஒரு களத்தில் ஒரு இரகம் மட்டும் காயப்போட வேண்டும். இல்லாவிடில், வெயிலினால் காய்கள் வெடிக்கும் போது விதைகள் ஒரு குவியலிலிருந்து இன்னொரு குவியலுக்கு சென்று விடும். இதனால் இனக்கலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
     
காய்ந்த செடிகள் கறுப்பு நிறமடையும்போது, விதைகளைப் பிரிக்க குச்சி கொண்டு அடித்து நீக்கலாம். அடித்த பின் காற்றில் தூற்றி விதைகளைப் பிரிக்கலாம். பிரித்த விதைகளை நன்கு காய வைத்து விதையின் ஈரப்பதம் 10 சதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு காய்ந்த விதைகளையே விதைச் சுத்திகரிப்பு செய்ய பயன்படுத்த வேண்டும்.

விதை உருவாக்கம்
    
திறட்சியான விதைகளைப் பெற, விதைகளை இரகத்திற்கு ஏற்றவாறு 2 மி.மீ வட்டக்கண் சல்லடை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதைகளில் காணப்படும் பூசணத்தாக்கு கொண்ட விதைகள், உடைந்த தோலூரிந்த விதைகள் ஆகியவற்றை நீக்கி நல்ல தரமான விதைகளையே சேமிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

விதை சேமிப்பு
     
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்
    
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத் திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க, விதைகளின் ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதை சேமிப்புப் பைகள்
     
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 காஜ் அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள் ஆகும். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.
     
விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும் பொழுது 6 அல்லது 7 மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
     
விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றை பாதிப்பதைத் தடுக்கலாம். எப்பொழுதும் விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்கி வைப்பது நல்லது.

விதை சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு
    
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்று புகாமல் விதை கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள் . மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

பயறு விதை மற்றும் தானிய சேமிப்பு
    
விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு. அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக் கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால் அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே, விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதை நேர்த்தி செய்வது நல்லது.
     
நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது. விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திரம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம்.

விதைச் சான்றளிப்பு
     
தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்துய்மையில் சிறிதும் குன்றாமலும், களைவிதை,பிற இரக விதை, நோய் தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும்போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். பயிர்கள் அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது மூட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.
     
விதை உற்பத்தி தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூட சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.
     
விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றனது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
     
ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.
     
எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். நம் தமிழகத்தில் அரசின் விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
     
சான்று விதை உற்பத்தி செய்யும் போது உற்பத்தி செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத் தரம் இருத்தல் அவசியம்.

வயல் தரம்

கலவன்கள் (அதிக பட்சம்)

  1.  

0.2 சதம்

விதைத் தரம்

சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

  1.  

98 சதம்

தூசி (அதிக பட்சம்)

  1.  

2 சதம்

பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)

  1.  

1 சதம்

களை விதைகள் (அதிக பட்சம்)

  1.  

1 சதம்

முளைப்புத் திறன் ( குறைந்த பட்சம்)

  1.  

75 சதம்

ஈரத்தன்மை (அதிக பட்சம்)

  1.  

 

காற்றுப்புகாத பை

  1.  

8.0 சதம்

காற்றுப்புகும் பை

  1.  

9.0 சதம்

 

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam