| | |  |  |  |  |
 
சோயாமொச்சை
 
முக்கியத்துவம்
சுத்திகரிப்பு சாதனங்கள்
சுத்திகரிப்புத்தளங்கள்
 

சோயாமொச்சை

தரமான விதை உற்பத்தி முறைகள்

விதை தரமானதென்றால் அது தனது பாரம்பரிய குணங்களிலிருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும்.  மேலும் களை, பிற ரக மற்றும் பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், âச்சி, âஞ்சாணங்களால் தாக்கப்படாமலும், தூசி, துப்பு இல்லாமலும் நல்ல முளைப்புத்திறன் கொண்டாதகவும் இருப்பது அவசியம்.  விதை விதைத்தவுடன் நன்கு முளைத்து, செழிப்பாகவும், சீராகவும் வளர்ந்து அதிக மகசூலுக்கு அடிப்படையாக இருப்பது தரமான விதையே ஆகும். 

நிலம் தேர்ந்தெடுத்தல்
     
சோயாமொச்சைக்கு நல்ல வடிகால் கொண்ட நிலம் அவசியம்.  இல்லாவிடில் முளைப்பு பாதிப்பதோடு மகசூலும் குறையும்.
      
விதைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இதற்கு முந்தைய பயிர் சோயாமொச்சையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.  மேலும் வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் தாக்காத நிலமாயிருத்தல் நலம்.

இனத்தூய்மையை பராமரிக்க  பயிர் விலகு தூரம்
      
சோயா மொச்சை தன் மகரந்தச் சேர்க்கை மட்டுமே கொண்டிருப்பதால் விதை பயிரை மற்ற இரகங்களிலிருந்து குறைந்தது 10 அடி விலக்கி வைத்திருக்க வேண்டும்.  இதற்கு விதை பயிரைச் சுற்றி 10 அடிக்கு அதே பயிரை எல்லை பயிராக பயிர் செய்யவேண்டும்.

☺ விவசாயிகள் அடிக்கடி விதைப் பயிரினை விலக்கி வைக்க இயலவில்லை என கூறுகின்றனர். அச்சமயங்களில் ஐந்து வரிசை மக்காச்சோள பயிரினை விதைப்பயிரினை சுற்றி வளர்த்தல் பிற பயிரின் கலப்பினை தடுக்கும். 

விதைப்பயிர் செய்ய ஏற்ற பருவம்
      
தமிழ்நாட்டில் கோ.1 மற்றும் ஆடுதுரை-1 என இரு முக்கிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன.  விதை பயிரை ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் பயிர் செய்யலாம்.

நிலம் தயாரித்தல்
      
நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழ வேண்டும்.  பின்னர் ஒரடி பார்கள் அமைக்க வேண்டும்.

உரமும் உரமிடுதலும்
      
கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 வண்டி தொழுவுரம் இடவேண்டும்.
      
சோயமொச்சை அதிக புரதமும் எண்ணெய் சத்தும் கொண்டுள்ளதால் அதற்கு அதிக உரமும் தேவை.  ஒரு ஏக்கருக்கு 40 கிலோ யூரியா 360 கிலோ சூப்பர் மற்றும் 50 கிலோ மூரியோட் ஆப் பொட்டாஷ் அடி உரம் தேவை.  இவ்வுரங்களை ஒரடி பார்களில் பக்கவாட்டில் இடவேண்டும்.

விதை தேர்ந்தெடுத்தலின் அவசியம்

      
விதைப்பயறு உற்பத்திக்கு சான்ற பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும்.  ஏனெனில் இரகத்தின் மரபுத் தன்மைகளுடன் அதிக முளைப்பு திறனும் வீரியத் தன்மையும் கொண்டிருப்பதால் அவைகள் விரைவாக முளைத்து வீரியமுள்ள நாற்றுகளை கொடுக்கும்.  இதனால் பயிர் எண்ணிக்கை அதிகரித்து அதிக மகசூக்கு வழிவகுக்கும்.

உங்கள் கவனத்திற்கு

எந்த ஒரு விவசாயியும் சான்று விதை உற்பத்தி செய்யலாம். அந்த பகுதியின் வேளாண் அலுவலர் அதற்கு துணை புரிவார். சான்று விதை உற்பத்தி ஆதார விதையை கொண்டும், ஆதார விதை உற்பத்தி வல்லுநர் விதையை கொண்டும் உற்பத்தி செய்ய வேண்டும்.

விதைகளை தேர்வு செய்வது எப்படி?
      
சோயா மொச்சை விதைகள் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டு உருண்டையாக இருக்கும்.  தரமான விதைகளை பெற 5.72 மில்லி மீட்டர் வட்டக்கண் சல்லடையில் தங்கும் விதைகளை பயன்படுத்த வேண்டும்.  இது தவிர விதைகளில் காணப்படும் அழுகிய, ஊதா நிறம் கொண்ட விதைகள் மற்றும் பச்சை நிறம் கொண்ட விதைகளை நீக்கிவிட வேண்டும்.
அ. சுருங்கிய மற்றும் அழுகிய விதைகள்
ஆ. தரமான விதைகள.

விதை அளவு
      
ஒரு ஏக்கருக்கு 16 கிலோ விதைத் தேர்வு செய்ய வேண்டும்.
      
சோயா மொச்சையில் அதிக புரதம் உள்ளதால் அது நீரை வெகு விரைவில் உருஞ்சி சேதம் அடைகிறது.  இதனால் முளைப்பு குறைகிறது.  இந்த சேதத்தை தடுக்க சோயா மொச்சைக்கு ஈரமணல் கொண்டு மெதுவாக நீர் எற்ற வேண்டும்.

ஈர மணல் கொண்டு நீர் ஏற்றுவது எப்படி?
      
ஒரு கிலோ மணலில் 50 மில்லி நீரை ஊற்றினால் அது 5 சத ஈரப்பதம் பெறும்.  ஒரு ஏக்கருக்கு தேவையான 16 கிலோ விதைக்கு 16 கிலோ மணல் தேவை.  இந்த மணலுடன் 800 மில்லி நீரை ஊற்றி கலக்கவும்.  பின்னர் ஒரு வாளியில் 2 அங்குலம் ஈர மணல் அதன் மேல் 2 அங்குல விதையும் மீண்டும் 2 அங்குல மணல் 2 அங்குல விதை என அடுக்க வேண்டும்.  இவ்வாறு 16 கிலோ விதையையும் மணலையும் இரண்டு வாளிகளில் அடுக்கி வாளிகளை பிளாஸ்டிக் உர சாக்கு கொண்டு மூடிவிட வேண்டும்.  பதினாறு மணி நேரம் கழித்து சல்லடை கொண்டு மணலை சலித்து விதைகளை பிரிக்கலாம்.  இவ்வாறு விதை நேர்த்தி செய்த விதைகள் சீராக முளைகின்றன.

பூசணக்கொல்லி விதைநேர்த்தி
      
ஒரு ஏக்கருக்கு தேவையான 16 கிலோ விதைக்கு 32 கிராம் கேப்டான் அல்லது திராம் பூசணக்கொல்லியை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

ரைசோபிய நுண்ணுயிரினை பயன்படுத்துவது எப்படி?
     
சோயா மற்றும் பிற பயறு வகைப் பயிர்களின் வேர்களில் வேர் முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் முடிச்சுகளில் ரைசசோபியம் என்ற நுண்ணுயிர் இருக்கின்றன. ஒரு செடியின் வேரில் மண்ணில் உள்ள பாக்டீரியாவை பொருத்து 50 முதல் 100 வேர்முடிச்சுகள் வரையில் காணப்படும். இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கின்றன. இதற்கு பதிலாக செடிகள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பளிக்கின்றன. இது கூட்டுறவு வாழ்க்கை என அழைக்கப்படுகின்றது. சோயாமொச்சை பயிருக்கு ரைசோபிய நுண்ணுயிரை உபயோகித்தால் ஒரு ஏக்கருக்கு 210 கிலோ தழைச்சத்தை கிரகிக்க முடியும்.
      
மண்ணில் போதுமான அளவு ரைசோபிய நுண்ணுயிரி இல்லாத காரணத்தால் விதைப்பிற்கு முன்னர் ரைசோபிய நுண்ணுயிரியை சேர்ப்பது அவசியமாகும். ரைசோபியத்தை சேர்க்கும் முறை உட்புகுத்துதல் என்றழைக்கப்படுகின்றது. மக்கிய மண்ணில் சேர்க்கப்பட்ட நுண்ணுயிர் கலவையே 250 கிராம் பாக்கெட்டுகளில் கிடைக்கும். பண்ணயைில் உள்ள பெண்களே ரைசோபிய நுண்ணுயிரியை மண்ணில் உட்புகுத்துதலாம்.

ரைசோபிய பாக்கெட்டுகளில் உள்ளதை கொண்டு விதை நேர்த்தி செய்வது எப்படி?

ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை நேர்த்தி செய்வதற்கு இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகள் தேவைப்படும். ரைசோபியம் விதைகளில் ஒட்டுவதற்கு ஒரு இணைப்புப்பொருள் தேவை. இதனை அரிசி கஞ்சி கொண்டு தயாரிக்க வேண்டும். 500 மி.லி. நீரில் 100 கி அரிசியை கொதிக்க வைத்து பசையாக்க வேண்டும். இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளுக்கு 300 மி.லி. அரிசி கஞ்சி தேவைப்படும். தயார் செய்த அரிசி கஞ்சியை நிலழில் 5 மணி நேரம் உலர்த்த வேண்டும். இதனில் இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடுவதால் கருப்பு நிற பொருள் கிடைக்கும். ஒரு பக்கெட்டில் 16 கிலோ ரைசோபியம் சேர்த்த அரிசி கஞ்சியை ஊற்றி கைகளால் (அ) குச்சியால் நன்கு கிளற வேண்டும். இக்கலவை அனைத்து விதைகளிலும் நன்கு பரவிய பின்னர் ஒரு சாக்குப் பையின் மேல் அதனை பரப்பி நிழலில் 6 மணி நேரம் உலர வைக்க வேண்டும். இதனை தயாரித்த 24 மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும்.

☻எச்சரிக்கை

    • எப்பொழுதும் புதிதாக தயார் செய்த பாக்கெட்டுகளையே வாங்க வேண்டும்
    • பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
    • ரைசோபிய பாக்கெட்டுகள் காய்ந்திருந்தால் உபயோகிக்க கூடாது.

பாஸ்போ பாக்டீரியா விதைநேர்த்தி
      
ரைசோபியம் நுண்ணுயிர் போலவே பாஸ்போ பாக்டீரியாவும் ஒரு நுண்ணுயிர்.  இது மண்ணில் உள்ள மணிச்சத்தை வேர்களுக்கு மீட்டுத் தருகிறது.  இதனால் வேர்கள் அதிகமாக பெருகி செடிகள் துரிதமாக வளர உதவுகிறது.
      
ரைசோபியம் நுண்ணுயிர் விதைநேர்த்தி செய்வது போலவே இதையும் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.  இரண்டு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை 300 மில்லி ஆற வைத்த கஞ்சியுடன் கலந்து கொள்ளவும்.  பின்னர் இதனை 16 கிலோ சோயா மொச்சை விதையுடன் கலந்துவிட வேண்டும்.
      
ரைசோபிய விதைநேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பின்னர் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
      
விதைநேர்த்தி செய்த விதைகள் கருப்பு நிறம் அடையும்.  எனவே கருப்பு நிறம் அடையவில்லை என்றால் நுண்ணுயிர் கலவை விதைகளின் மேல் படியவில்லை என அறியலாம்.

விதைப்பு

      
விதைநேர்த்தி செய்த விதைகளை பார்களில் பக்கவாட்டில் இரண்டு அங்குல ஆழத்தில் ஊன்ற வேண்டும்.  செடிக்கு செடி இடைவெளி 10 செ.மீ. (நான்கு விரல் இடைவெளி).

நீர் நிர்வாகம்
      
விதைத்தவுடன் ஒரு நீரும், மூன்றாம் நாள் உயிர் நீரும் பின்னர் பயிர் வளர்ச்சி பருவம், பூப்பு, காய்பிடிப்பு, விதை முதிர்ச்சி பருவம் ஆகியவற்றில் நிலத்தின் தேவைக்கு ஏற்ப வாரம் ஒரு முறையோ, 10 நாட்களுக்கு ஒரு முறையோ நீர் பாய்ச்ச வேண்டும்.
      
சோயா மொச்சையில் நீர் நிர்வாகம் அவசியம்.  இல்லாவிடில் பூக்கள் விழும்.  மேலும் காய்கள் சப்பையாகி விடும்.

இலைவழி உரம்
      
திரட்சியான விதைகளை பெறுவதற்கு அடி உரம் மட்டுமே போதாது.  இலை வழியாகவும் உரம் செலுத்த வேண்டும்.
      
தரமான விதை உற்பத்திக்கு, போதிய ஊட்டச்சத்து, கொடுப்பது அவசியம்.  சிறுவர்களுக்கு, வளரும் போது எவ்வாறு ஊட்டம் அவசியமோ, அதேபோன்று விதைகள் உண்டாகி வளரும் போதும் அவற்றிற்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது.  இதற்கு வேர்கள் மண்ணில் இருந்து பெற்ற சத்துக்கள் மட்டும் போதாது.  இலை மூலமாகவும் அளித்திடல் வேண்டும்.  இவ்வாறு இலை மூலம் நாம் ஊட்டச்சத்து அளிக்கும் போது, வளரும் விதைகளுக்கு ஊட்டம் போய்ச் சேரும். அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி வகுக்கும்.   இலைவழி உரம் அளிப்பதற்கு டி.ஏ.பி உரக்கரைசலை பயன்படுத்தவேண்டும்.

தேவையான பொருட்கள்

  • 4 கிலோ டி.ஏ.பி உரம்
  • 13 லிட்டர் நீர்
  • 15 லிட்டர் பிளாஸ்டிக் வாளி
  • வடிகட்ட ஒரு துணி
  • கைத்தெளிப்பான்

 

  • முதலில் 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 13 லிட்டர் நீரில், தெளிப்பதற்கு முந்திய நாள் மாலை ஊறவைக்க வேண்டும்.
  • மறுநாள் தெளிந்த நீரை மட்டும் எடுத்து, துணியின் துணை கொண்டு வடிகட்டி விட வேண்டும்.
  • பின்னர் ஒரு லிட்டர் கரைசலை எடுத்து அதனுடன் 14 லிட்டர் நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு தயாரித்த நீர்த்த கரைலை கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் செடிகளின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு தெளிக்க 200 லிட்டர் நீர்த்த கரைசல் தேவைப்படும்.
  • மாலை நேரங்களில் (நான்கு மணிக்கு மேல்) தெளித்தால் இலைகள் கருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • டி.ஏ.பி கரைசல் தெளித்த உடன் நீர்ப் பாய்ச்சுதல் மிகவும் அவசியம்.

இக்கரைசலை பயிரின் 50 சத பூப்பு பருவத்தில் ஒரு முறையும் பின்னர் 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் அடிக்க வேண்டும்.  வளரும் விதைகளுக்கு எளிதில் ஊட்டம் போய்ச்சேரும்.  அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி வகுக்கும்.

  • டி.ஏ.பி கரைசலை காலையிலோ (அதாவது 9 மணிக்குள்) அல்லது மாலையிலோ (4-6 மணிக்குள்) தெளிப்பதால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாது.
  • கரைசல் தெளிப்பதற்கு முன்னர் நீர் பாய்ச்சுதல் அவசியம்.
  • கரைசலுடன் பூச்சிக் கொல்லி மருந்தும் கலந்து தெளிக்கலாம்.
  • கைத்தெளிப்பானை சுத்தமாக கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.  களைக்கொல்லி அடிக்க பயன்படுத்திய கைத்தெளிப்பானை உரக்கரைசல் அடிக்க பயன்படுத்தக்கூடாது.

நுண்ணூட்ட கரைசல் தெளித்தல்
      
இலைவழி உரமாக இரண்டு சத டி.ஏ.பி கரைசல் மற்றும் 0.5 சத துத்தநான சல்ஃபேட் கரைசல் தெளிக்கலாம்.

துத்தநாக சல்ஃபேட் கரைசல் தயாரிப்பது எப்படி?
      
ஒரு ஏக்கருக்கு தெளிக்க தேவையான 100 லிட்டர் நீரில் கரைக்க அரைக் கிலோ துத்தநாக சல்ஃபேட் தேவை.  இதனை ஐந்து லிட்டர் நீரில் ஊற வைத்து பின்னர் 95 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கலாம்.

எப்போது தெளிப்பது?
      
டி.ஏ.பி மற்றும் துத்தநாக சல்ஃபேட் கரைசலை பூப்பின் போதும், பின்னர் காய்பிடிப்பின் போதும் கலந்து தெளிப்பதால் விதை மகசூல் கூடும்.

களை நிர்வாகம்
      
விதைத்த 3 நாட்களுக்குள் பாசலின் களைக்கொல்லியை தெளிப்பதால் ஆரம்பத்தில் தோன்றும் களைகளை தடுக்கலாம்.  இதற்கு இரண்டு மில்லி பாசலின் களைக்கொல்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.  களைக்கொல்லி நிலத்தில் தெளிக்க விசிறி நாஸில் பொருந்திய கைத்தெளிப்பானை பயன்படுத்த வேண்டும்.
      
விதைத்த மூன்று வாரம் கழித்து இரண்டாவது களை எடுக்க வேண்டும். 

பயிர் பாதுகாப்பின் அவசியம்
பூச்சிக் கட்டுப்பாடு
      
இளஞ்செடிகளில் இலைச்சுருட்டு புழு தோன்றும்.  இதனை கட்டுப்படுத்த முளைத்த ஐந்தாம் நாள் ஏக்கருக்கு 10 கிலோ மெலத்தியான் பத்து சத தூளை தூவலாம்.
      
பயிரின் வளர்ச்சி பருவத்தில் தோன்றும் தண்டு ஈ மற்றும் வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்த லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் மீதைல் டெமட்டான் அல்லது ரோகார் கலந்து தெளிக்கலாம்.

நோய் கட்டுப்பாடு

      
சோயா மொச்சையில் அதிகமாக மஞ்சள் தேமல் நோய் காணப்படும்.  இவற்றை கண்டவுடன் நீக்கினால் நோய் மேலும் பரவுவதை தடுக்கலாம்.  இது தவிர வெள்ளை ஈயினாலும் இந்த நோய் பரவும்.  ஆகவே வெள்ளை ஈயையும் கட்டுப்படுத்த வேண்டும்.
      
சில சமயங்களில் முருணை, வேர் அழுகல், வாடல் நோய் ஆகியவை தோன்றலாம்.  இந்த நோய் கண்ட செடிகளையும் நீக்கி விடவேண்டும்.

0.1 சதம் மற்றும் 1 சதம் பேவிஸ்டின் கரைசலை தயார் செய்வது எப்படி?

1 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 0.1 சதம் கரைசலாகும். 10 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 1 சதம் கரைசலாகும்

கலவன் அகற்றுதல்
      
பிற இரகம், விதைப்பயிரில் கலந்து விடுவதை கலவன் என்கிறோம்.  கலவன்கள் விதைப் பயிரின் இனத்தூய்மையை பாதிக்கின்றன.  மேலும், சிலவகைக் கலவன்களினால் பூச்சி மற்றும் நோய் பரவும் வாய்ப்புகளும் உண்டு.
      
சோயாமொச்சை விதைப் பயிரில் கலவன்களை கீழ் காணும் பருவங்களில் கண்டிப்பாக நீக்குதல் அவசியம்.

  • பூக்கும் பருவத்திற்கு முன்னர்
  • பூப்பின் போது
  • காய்ப்பிடிப்பின் போது
  • அறுவடைக்கு முன்னர்

 

சோயா மொச்சையில் இரகங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப கலவன் அகற்ற வேண்டும்.    பொதுவாக பயிரின் மூன்று முக்கிய பருவங்களில் கலவன்களை அறிந்து அகற்ற வேண்டும்.
      
வளர்ச்சி பருவத்தின் போது செடியின் உயரம், இலைகளின் அகலம் மற்றும் மஞ்சள் தேமல் நோய் கொண்ட செடிகளை நீக்க வேண்டும்.
      
பூப்பின் போது பூக்காத செடிகளையும் தேமல் நோய் கண்ட செடிகளையும் அகற்ற வேண்டும்.  கூடவே குருணை, வாடல், வேர் அழுகல் நோய் கண்ட செடிகளையும் நீக்கி விடலாம்.
      
காய்ப்பிடிப்பின் போது காயின் நீளம், அகலம் மற்றும் காய்களின் மேல் உள்ள முடி விதைகளின் எண்ணிக்கை, விதைகளின் நிறம் மற்றும் அகலம் ஆகியவை கொண்டும் கலவன் அகற்ற வேண்டும்.  கருப்பு நிறம் கொண்ட விதைகளை பிற இரகத்தைச் சேர்ந்தவை.  எனவே அச்செடிகளை அறுவடையின் போது கண்டிப்பாக நீக்கிவிட வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு

சோயாமொச்சை இரகங்களின் குணங்கள் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
☺எச்சரிக்கை

அனைத்துகலவன்களையும் விதை வயலில் இருந்து உடனடியாக அகற்றி அழித்துவிடவேண்டும்

அறுவடை
      
பூத்த 60 நாள் கழித்து காய்கள் முதிர்ச்சி அடையும்.  அச்சமயம் செடியில் உள்ள இலைகள் உதிர்ந்து விடும்.  செடிகளின் அடிமட்டத்தில் உள்ள காய்கள் பழுப்பு நிறமாகவும் மேல் மட்டத்தில் உள்ள காய்கள் மஞ்சள் நிறமாகவும் இருக்கம்.  இதுவே அறுவடைக்கு ஏற்ற தருணம்.
      
செடிகளை கதிர் அரிவாள் கொண்டு அறுத்து களத்தில் காயப்போட வேண்டும்.  காய்ந்த செடிகள் பழுப்பு நிறம் அடையும்.  விதைகளை பிரிக்க குச்சிகள் கொண்டு அடிக்கலாம்
      
விதை நீக்கிய தொலிகளை மாட்டுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.
அறுவடைக்கு முன்னர், பயறுவண்டுகளின் சேதத்தைத் தடுக்க, எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

விதை உருவாக்கம்
      
விதைகளை சுத்தம் செய்து பத்து சத ஈரப்பதம் வரும்வரை உலர்த்தி விடவேண்டும்.  பின்னர் 5.72 மி.மீ. வட்டக்கண் சல்லடையில் சலிக்க வேண்டும்.  சலித்த விதைகளில் காணப்படும் உடைந்த தோல் நீங்கிய காயமுற்ற மற்றும் பழுப்பு நிறம் கொண்ட விதைகளை அகற்றி தரமான விதைகளை சேமிக்க வேண்டும்.

விதைச் சேமிப்பு
      
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்
      
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது.  விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்தினை விரைவில் இழக்கின்றன.  குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ சேமிக்கவேண்டும்.  நீண்ட காலம் விதைகளை சேமிக்க, விதைகளின் ஈரப் பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வைக்கலாம்.

விதை நேர்த்தி
      
விதைகளை சேமிப்பதற்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.  இதற்கு திரம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வைக்கவேண்டும்.

விதை சேமிப்புப் பைகள்
      
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை.  ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில்  விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். 

ஈரக்காற்று புகா பைகள் எவை? 
700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள்.  எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.
      
விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள்.  சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம்.  ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
      
விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும்.  இதனால் தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளின் ஊடுருவி அவற்றை பாதிப்பதைத் தடுக்கலாம்.  விதை மூட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்க வேண்டும்.

விதைச் சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு
      
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடாலாம்.  காற்று புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைக்க வேண்டும்.  மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள்.  இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப் படும்.

விதைச் சேமிப்பு
      
விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7-8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து சேமிக்க வேண்டும்.

பயறுவிதை மற்றும்தானிய சேமிப்பு முறை
      
விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு.  அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால் அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது.  மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும்.  எனவே, விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதை நேர்த்தி செய்வது நல்லது.
      
நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து சேமிக்கலாம்.  இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது.  விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திரம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.  விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து தானியமாக்கப் பயன் படுத்தலாம்.

☺ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்றால் என்ன?
      
ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்பது சாதரணமான வெள்ளை களிமண் ஆகும். இது ஈரப்பதம் நீக்கப்பட்டு, அமிலத்தினால் கழுவப்பட்டது என்பதால் பூச்சிகளின் மேல்புரத்தை தாக்கி அழிக்கும். இது மிகவும் குறைந்த விலை கொண்டது மற்றும் மனிதர்களுக்கு தீங்கற்றது. ஒரு கிலோ விதைக்கு ஒரு   கிராம் ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும். ஊக்குவிக்கப்பட்ட களிமண் சொரசொரப்பான மேல் தோல் கொண்டதால் பயறு வண்டுகளை வெட்டு விடும். வெட்டு படுவதால் விரைவில் உடலிலுள்ள நீரினை இழந்து வண்டுகள் இறந்து விடும்.

ஊக்குவிக்கப்பட்ட களிமண் விதை நேர்த்தி
      
பயறு விதைகளை தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் (அ) வேப்பபெண்ணயெ் ஆகியவற்றையும் கொண்டும் ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். இவை சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத மற்றும் விவசாயிகள் எளிதில் உபயோகிக்கும் முறைகளாகும்.
      
சுற்றுப்புறத் தோழமை வாய்ந்த தாவரங்களான வேப்பம், புங்கம் மற்றும் அரப்பு ஆகியவற்றை கொண்டும் ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். இவை பூச்சி விரட்டியாகவும், சேமிப்பின் பொழுது ஏற்படும் தாக்குதலை தடுக்க வல்லதாகவும் இருக்கும். மஞ்சள் பொடியும் உபயோகிக்கலாம்

விதைச் சான்றளிப்பு
      
தரமான விதைகள் என்பது தன்னுடை இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும். களைவிதை, பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும்.  மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும்.  இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும்.  அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும்.  எனவே விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது முட்டுவழி செலவுகளை குறைக்க முடியும்.

விதை உற்பத்தி தரக்கட்டுபாட்டுக்கென்று  சட்டபூர்வமாக எற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும்.  இதைத்தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன், என்று கூட சொல்லலாம்.  மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கக் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது.  விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யபபடுகிறது.  மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.  இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். 

சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்ய விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம்

வயல் தரம்


கலவன்கள் (அதிக பட்சம்)

0.2 சதம்

விதைத் தரம்


சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)

97 சதம்

தூசி (அதிக பட்சம்)

3 சதம்

பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)

0.05 சதம்

களை விதைகள் (அதிக பட்சம்)

0.01 சதம்

முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)

70 சதம்

ஈரத்தன்மை (அதிக பட்சம்)

 

காற்றுப்புகாத பை

7.0 சதம்

காற்றுப்புகும் பை

12.0 சதம்

கலவன் அகற்றும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில சோயா இரகங்களின் குணாதிசயங்கள்
(கீ்ழ்கண்ட குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)    


குணாதிசயங்கள்

கோ.1

கோ.2

பெற்றோர்

தைவான் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு

யுஜிஎம்  21 x ஜே எஸ் 335

50 சதம் பூக்கும் நாள்

37

30 – 40

வயது (நாள்)

85

75 – 80

செடியின் உயரம் (செ.மீ)

58

30 – 40

கிளைகளின் எண்ணிக்கை

6

  •  

பூ நிறம்

ஊதா

இளஞ்சிவப்பு முதல் ஊதா

ஒரு காயில் உள்ள விதையின் எண்ணிக்கை

2-4

-

விதைகளின் நிறம்

வெளிர் மஞ்சள் நிறம்

வெளிர் மஞ்சள் நிறம்

நூறு விதைகளின் எடை (கிராம்)

12.5

13 – 14

விதை மகசூல் (கிலோ/எ)

1640

1340

 

 
முன்னுரை
செÂல்படும் திட்டங்கள்
விதை உற்பத்தி
ப¢ற்சி
விதை ஆய்வு
இரசாயன பொருள்கள்
பூச்சிக்கொல்லி மற்றும்
பூïச¡Ωக்கொல்லி
விதை மேலாñமை
 
முக்கிÂத்துவம்
தகுதி வரம்புகள்
பதிவு முறை
ஆய்வு
தரக்கட்டுப்பாடு
அங்ககச் சான்றளிப்பு
கட்டΩ விபரம்
விñΩப்ப படிவங்கள்
தொடர்பு கொள்ள

 
நோக்கம்
விதை அடைப்பு கொள்கலன்கள்
சேமிப்பு கார½¢கள்
அமைப்புகள்
சேமிப்பு கிடங்கு சுகாதாரம்
 
 

| Home | Seasons & Varieties | Tillage | Nutrient Management | Irrigation Management | Weed Management | Crop Protection | Cost of Cultivation |

© All Rights Reserved. TNAU-2008.

Fodder Cholam