பயிர் பாதுகாப்பு : வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: பென்டலோனியா நைக்ரோநெர்வோசா
சேதத்தின் அறிகுறி:

  • இவை இலை மற்றும் வாழை மட்டைகளின் இடுக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன.
  • அசுவுணிகள் ஒரு வகை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அதைச் சுற்றி எந்நேரமும் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்.
  • அசுவுணிகள் கும்பலாக வாழையின் மீது அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.
  • வா‌ழையில் அதிக அளவு சேதம் ஏற்படுத்தும் ‘முடிக்கொத்து’ நோயைப் பரப்பும் காரணிகளாக இவை இருக்கின்றன.
  • இந்நோய் அனைத்து வாழை இரகங்களையும் தாக்கும். எனினும், மட்டி, பச்சை, செவ்வாழை மற்றும் மலை வாழை இரகங்கள் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகின்றன.
  • இளம் பருவத்தில் நோய் தாக்கிய வாழைக்கன்றுகள் முட்டையாகவும், இலைகள் சிறுத்தும், இலை நரம்புகள் தடித்தும் காணப்படும். வளர்ந்த வாழையை இந்நோய் தாக்கினால் இலைக்காம்புகள் சிறுத்து, வாழையின் நுனியில் இலைகள் கொத்தாகக் காணப்படும்.
  • வாழை குலை தள்ளும் தருணத்தில் நோய் தாக்கியிருப்பின், குலை வெளியே தள்ளப்படுவதற்குப் பதில் தண்டுப் பாகத்தில் வெடித்து வெளிவரும். பூ மடலின் நுனிப்பாகம், இலை போன்று பச்சையைாக இருக்கும். குலைகள் சிறுத்தும் திருகியும் காணப்படும். இதனால், 20- 60 சதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இலைகள் கொத்து கொத்தாக காணப்படும் புது இலைகள் விரியாது இலைகளின் மேல் பூச்சிகளை காணலாம் தேன் போன்ற திரவத்தைச் சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொண்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டைகள் : அசுவுணிகள் முட்டையிடுவது இல்லை நேரடியாகக் குஞ்சு பொரிக்கின்றன.
  • இளம் குஞ்சுகள் : நீள்வட்ட வடிவில் சற்று நீண்டிருக்கும். செம்பழும்பு நிறத்தில் ஆறு பிரிவுகளூடைய உணர் கொம்புகளைக் கொண்டிருக்கும்.
  • பூச்சிகள் : சிறிய மற்றும் நடுத்தர அளவுடைய அசுவினிகள் சிவப்‌பு முதல் அடர் பழுப்பு, பளபளப்புடன் சில சமயங்களில் கருமை நிறத்தில் காணப்படும்.
இளம் குஞ்சுகள் முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • பயிர்செய்யும்போது நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பூச்சி தாக்குதல் வராமலிருக்க நல்ல கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • தாக்கப்பட்ட மரத்தை கிழங்கோடு சேர்த்து அழிக்க வேண்டும்.
  • வாழை இலை மற்றும் பூவினை 49° செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவினிகள் இறந்துவிடும்.
  • இளம் கன்றுகள், இலை, இலை காம்புகள், சுருண்ட இலை ஆகியவற்றின் மீது சோப்பு தண்ணீர் அல்லது பூச்சிக் ‌கொல்லிக‌ளுடன் சோப்புநீர் கலந்து தெளிக்கவும்.
  • மெத்தில் டெமட்டான் 25 இ.சி 0.05 சதவிதம் தெளிக்கவும்.
  • பிரக்கோனிட் குழவிகளான லைசிமெலிபிய‌ஸ் டெஸ்‌டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும்.
  • ‌மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை, அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை.
  • பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவே‌ரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015