பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்

நோய்க் காரணி ஏரிசிபி பாலிகோனி

நோயின் அறிகுறிகள்

  • இந்நோயை தோற்றுவிக்கும் பூஞ்சாணம் இலை, இலைக்காம்பு, தண்டு, பூங்கொத்து, பிஞ்சு, காய் முதலிய அனைத்துப் பகுதிகளையும் தாக்குகிறது.
  • நோயுற்ற பகுதிகளில் வெண்மை நிறத்துகள்கள் இலைகளின் மேல் பரப்பிலும், சில சமயம் இலைகளின் கீழ் பரப்பிலும் காணப்படும்.
  • நாளடைவில் இப்படிவ உருவம், ஒன்றோடொன்று இணைந்து பின் பழுப்பு, கருமை நிறமாக இலைப்பரப்பு முழுவதும் மூடிவிடும்.
  • பாதிக்கப்பட்ட செடியின் வளர்ச்சிக் குன்றி வாடி வதங்கிவிடும்.
  • இந்நோய் பிஞ்சுகள் விட்டபின் தோன்றினால், பிஞ்சுகள் காய்ப்பதில்லை.
  • முதிர்ச்சியுறும் பகுதியில் தென்பட்டால், காய்கள் சிறியனவாகவும். சுருங்கியும் காணப்படும்.
  • நாளடைவில் பாதிக்கப்பட்ட பிஞ்சு, காய்கள் கருமை நிறமாக கீழே விழுந்து விடும்.

பரவுதல்

  • இந்நோய் ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்கு நோயுற்ற இலைகள் மூலமாக பரவும். பொதுவாக நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு காற்றின் மூலம் பரவுகிறது.

தடுப்புமுறைகள்

  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது வேப்யெண்ணைய் 3 சதம் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் நோய் கண்டவுடன் தெளிக்க வேண்டும் (அ) யுகலிப்டஸ் இலைச்சாறு 10 சதம் நோய் கண்டவுடன் மற்றும் 10 நாட்கள் கழித்தும் தெளிக்கவும். (அ) எக்டேர் ஒன்றுக்கு கார்பன்டாசிம் 250 கிராம் அல்லது நனையும் கந்தகத் தூள் 2500 கிராம் தெளிக்கவும்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2019