பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிவப்புக் கூண் வண்டு: ரின்கோபோரஸ் ஃபெர்ரோஜினஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • மரத்தில் ஓட்டைகளும், ஓட்டைகள் வழியே திசுக்களைத் தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகளும் காணப்படும்.
  • புழுக்கள் உட்சென்ற சிறிய துவாரத்தின் வழியே சிவப்பு நீர் வடிந்து காய்ந்த பிசின் காணப்படும்,
  • வெள்ளைப் புழுவானது இளந்தண்டு பகுதியைத் துளைத்து உள்ளே சென்று, இளந்தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று வேகமாக வளர்கின்றது. ஆகவே தண்டின் சோற்றுப்பகுதி எங்கும் துவாரங்களாக காணப்படுகின்றன.
  • பலமற்ற இந்த நிலையில் மரத்தின் கொண்டைப் பகுதி எளிதாக முறிந்து விழுவது இயல்பு.
  • மரத்தின் தண்டுப்பகுதியில் கூர்ந்து கவனித்தால், புழுக்களின் இரையும் சப்தம் கேட்கும்.
  • தாக்குதல் அதிகரிக்கும் நிலையில் மரத்தின் உட்புற ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. அத்துடன் கொண்டைப்பகுதி முறிந்து விடுவதால் மரமானது பட்டுவிடும்.
தண்டு மீது துளைகள்
தின்றபின் வெளியே தள்ளப்பட்ட மரநாறுகள்

பூச்சியை அடையாளம் காணுதல்:

  • முட்டை: நீள்வட்ட வடிவத்தில் வெள்ளை நிறத்தில் காணப்படும். துளைக்கப்பட்ட துவாரங்கள், காயம்பட்ட மற்றும் தண்டின் தாக்கப்பட்ட இடுக்குகளில் முட்டைகள் இடப்படுகின்றன.
  • புழு: இலேசான மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இப்புழுக்களுக்குக் கால்கள் கிடையாது. குட்டையான, சதைப்பற்றுடன், நடுவில் தடித்தும் ஓரங்களில் சற்று குறைந்ததாகவும் புழுக்கள் காணப்படும்.
  • கூட்டுப்புழு: புழுக்கள் தண்டின் உடல் பகுதியில் கூட்டை அமைக்கின்றன. தின்று கழித்த நார் மற்றும் சக்கைப்பகுதியை இணைத்து நீண்டு உருண்ட கூட்டை இப்புழுக்கள் அமைக்கின்றன.
  • வளர்ச்சியடைந்த வண்டு: சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில், முதுகுப் பகுதியில் 6 புள்ளிகளுடன் காணப்படும். ஆண் வண்டுகள் நீண்ட துதிக்கை போன்ற மூக்குடன், வாய்ப்பாகத்தில் அடர்ந்த உரோமங்களுடன் காணப்படும்.
கூட்டுப்புழு
வளர்ச்சியடைந்த வண்டு

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • அருகில் இருக்கும் மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வண்டு தாக்கிய மரங்களை வெட்டி அழிக்கவும்.
  • தண்டுப்பாகத்தில் உள்ள ஓலைகளை முழுவதும் வெட்டுவதால் வண்டுகள் முட்டையிட எளிதாகிறது. இதைத் தடுக்க பச்சை ஓலைகளை வெட்டுவதைத் தவிர்க்கவும். தேவை ஏற்படின் தண்டிலிருந்து 120 செ.மீ விட்டுப் பின் ஓலைகளை நறுக்குவதால் புழுக்கள் எளிதில் துளைவிட்டு உட்செல்வதை தடுக்கலாம்.

இராசயன முறை:

  • பாதிக்கப்பட்ட மரங்களில் இருக்கும் துளைகளை கவனித்து மேலே இருக்கும் துளையைத் தவிர பிறவற்றை அடைத்துவிட வேண்டும். பின்பு இத்துளை வழியே புனல் மூலம் 1% கார்போரைல் (20கி/லி) (அ) 0.2% டிரைகுளோர்பான் மரம் ஒன்றுக்கு 1 லி வீதம் ஊற்றிவிட்டுத் துளையை அடைத்து விட வேண்டும். தேவைப்படின் 1 வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை செய்யவும்.
  • கொண்டைப் பகுதியில் தாக்குதல் இருப்பின் ஓலைகளைச் சுத்தம் செய்து பூச்சிக்கொல்லிக் கரைசலை ஊற்றவும். தண்டில் துளைகள் இருப்பின் அவற்றை தார் அல்லது சிமெண்ட் பூச்சு மூலம் அடைத்து விட வேண்டும். ஆக்கர் கருவி மூலம் துளையிட்டு அத்துளையில் புனல் வைத்து மருந்தை ஊற்றலாம்.
  • மணலுடன் வேப்பங்கொட்டைப்பொடி 2:1 என்ற வீதத்தில் கலந்த கலவை அல்லது லின்டேன் 1.3 கிராம் மற்றும் மணல் கலந்து விரவி மட்டை இடுக்குகளில் 3 மாதத்திற்கு ஒருமுறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூண் வண்டு முட்டை இடுவதைத் தவிர்க்கலாம்.

இயந்திர முறை:

தென்னை ஓலைப்பொறி:

  • கரும்புச்சாறு 2.5 கி.கி + ஈஸ்ட் மாத்திரை 5 கி + 5 மி.லி அசிடிக் அமிலம் (அல்லது அன்னாசி/கரும்புச்சாறுடன் ஊறவைத்தது) + நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகள் ஏக்கருக்கு 30 வீதம் தென்னந் தோப்பில் வைத்து, கூண் வண்டுகளைக் கவரச் செய்து அழிக்கலாம்.
வாளியுடன் இனக்கவர்ச்சிப்பொறி
சிவப்பு கூன் வண்டு பிடித்தல்

பிரமோன் பொறி:

  • எக்டருக்கு ஒரு பொறி அமைக்கவும்
  • படி 1 : குறிப்பிட்ட சில வாலிகளில் 3-4 துளைகள் இட்டு அதனை தென்னை நார், சணல் நார்கள் கொண்டு இலேசாக அடைக்கவும். இதனால் வண்டுகள் வாலியுனுள் வர ஏதுவாகும்.
  • படி 2 : வாலியினுள் ஃபெர்ரோலியூர், 1 லி நீர், 100 கி அன்னாசி (அ) கரும்புச் சாறு, 2 கி ஈஸ்ட் மற்றும் 2 கி கார்போரைல் போன்றவற்றை வைக்கவும்.
  • படி 3 : இந்த வாலியினை வண்டின் தாக்குதல் அதிகமுள்ள இடங்களில் வைக்கவும்.
  • படி 4: வாரத்திற்கொருமுறை இந்த வாலிநீரை மாற்ற வேண்டும். இது கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015