பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு: ஒபிசீனியா அரினோசெல்லா

இப்புழுவானது கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் விளைவிக்கின்றது. வருடம் முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைக்கலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது.
  • மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியல் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.
  • ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும்.
  • அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.
வறண்ட திட்டுகள்
சுரண்டப்பட்ட இலைகள் தீய்ந்த தோற்றம்

பூச்சியை அடையாளம் காணுதல்:

  • இளம் புழு: புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்பழுப்பு நிற தலையையும் உடையது. இதன் முன் மார்பு பழுப்பு நிறத்திலும், பின்புறம் சிவப்பு நிறத்திலும் காணப்படும். உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும்.
  • கூட்டுப்புழு: கழிவு மற்றும் பச்சைய இலைகளைச் சுரண்டி செய்யப்பட்ட மெல்லிய நுாலாம் பட்டையினுள் கூட்டுப்புழுக்கள் காணப்படும்.
  • முதிர்ந்த பட்டாம்பூச்சி: சாம்பல் நிற வெள்ளைப் பட்டாம் பூச்சியாகும்.
    • பெண்: பெண் பூச்சியானது நீண்ட உணர்கொம்பும், முன் இறக்கையில் 3 மங்கலான புள்ளிகளைக் கொண்டிருக்கும்.
    • ஆண்: பின் இறக்கை தோலுடன் இணையும் இடத்தில் சற்று முடியுடன் காணப்படும்.
இளம் புழு கூட்டுப்புழு முதிர்ந்த பட்டாம்பூச்சி

மேலாண்மை:

சாதாரண முறைகள்/உழவியல் முறைகள்:

  • தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி எடுத்து அழித்து விட வேண்டும். குறிப்பாக கோடை காலம் துவங்கும் முன் செய்து விடுவது நன்று.

இராசயன முறை:

  • தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 EC) 0.02%, (அ) மாலத்தியான் 50 EC 0.05% (1 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.05% (அ) பாஸலோன் 0.05% இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.

உயிரியல் முறை:

  • மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். (அ) 3000 / ஹெ என்ற அளவில் விட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும். எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.
  • யூலோபிட், பிராக்கிமெரியா, சாந்தோபிம்பிளா ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015