பயிர் பாதுகாப்பு :: காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைத்துருநோய் (Leaf Rust Disease)

அறிகுறிகள்

  • பெரும்பாலும் இந்நோய் இலைகளில் காணப்படுகின்றது. காய், பிஞ்சு, நுனித்தண்டு ஆகியவற்றிலும் இந்நோய் தோன்றும். முதன் முதலில் இலையின் அடிப்பாகத்தில் 1 முதல் 2 மி.மீ. அளவுள்ள மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும்.
  • நாளடைவில் இவை பெரிதாகி ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாகத் தோன்றும். இச்சிறுபகுதியில் சிறு சிறு செந்துரு வித்துக்கள் கோடிக்கணக்கில் காணப்படும். இப்பகுதிக்கு நேராக உள்ள இலையின் மேற்பரப்பு மஞ்சளாகவும் பின்பு பழுப்பு நிறமாகவும் மாறி விடுகின்றது.
  • நாளடைவில் இலையின் அடிப்பாகத்தில் எண்ணற்ற ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமுடைய புள்ளிகள் தோன்றி இலைப்பாகம் முழுவதையும் பாதிக்கும். இதனால் தாக்கப்பட்ட இலைகள் கரும் பழுப்புநிறமாக மாறிப் பின்பு காய்ந்து விடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் முதிர்வதற்கு முன்பே உதிர்ந்து விடுகின்றன. இதனால் காப்பிச் செடியில் இலைகள் இல்லாமல் வெறும் குச்சிகள் மட்டும் இருப்பதைக் காணலாம். எனவே நோயுற்ற செடிகள் வளர்ச்சி குன்றியிருக்கும். மேலும் விளைச்சல் மிகவும் குறைந்து விடுகிறது. இவ்வாறு காப்பித்துரு நோய் அடிக்கடி தோன்றினால் பாதிக்கப்பட்ட செடியிலிருந்து அதிக லாபம் கிடைப்பதில்லை.

 

 

 

ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற புள்ளிகள் செந்துரு கொப்பளங்கள

கட்டுப்பாடு

  • நோயுற்றுக் கீழே விழந்து கிடைக்கும் இலைகளை அப்புறப்படுத்தி எரித்து விடுதல் வேண்டும். இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் வாய்ந்த எஸ் 238, எஸ் 395 ஆகிய வகைகளைப் பயிரிடப் பயன்படுத்தலரம்.
  • இந்நோயைத் தடுக்க 0.5 சத போர்டோக் கலவையை கீழ்கண்ட காலங்களில் இலைகளின் அடிப்பாகம் நன்றாக நனையுமாறு பூ விடுவதற்கு முன்பு ஒருமுறையும், பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் மே மாதத்தில் ஒரு முறையும், பருவமழைக்குப் பின்பு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையும், அக்டோபர் மாதத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015