பயிர் பாதுகாப்பு ::ரோஸ்மேரி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

செம்பேன் சிலந்தி
இப்பூச்சியின் இளம் மற்றும் வளர்ந்த உயிரிகள்  கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. இப்பூச்சிகள் தாக்கிய இடங்களில் வெண்மை நிறப் புள்ளிகள் உருவாகி பின்னர் முழு இலையும் வெண்மை நிறமடைவதால் அவை காய்ந்து சருகாகி விடுகின்றன.
மேலாண்மை முறைகள்

  • இயற்கையில் இரை விழுங்கும் சிலந்தி களில் ஒன்றான பைடோசிலஸ் பெர்சினிலிஸ், இந்த செம்பேன் சிலந்தியைக் கட்டுப்படுத்துகின்றது.
  • வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம்  அல்லது வேப்பெண்ணெய் 3 சத கரைசலை 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.

வெள்ளை ஈ
இளம்  பூச்சிகளும்,  வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பரப்பில், ஏராளமான எண்ணிக்கையில்  இருந்து கொண்டு தொடர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் காய்ந்து விடுகின்றன. மேலும் இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும்.
மேலாண்மை முறைகள்

  • செடியின் பாதிக்கப்பட்ட  பகுதிகளை சேகரித்து அழிக்கவும்.
  • மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இதனைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சத  கரைசலை ஏக்கருக்கு 0.1 சத ஒட்டும் கரைசல் டீப்பாலுடன் கலந்து தெளிக்கவும்.

வெள்ளைப்புழு
இப்புழுக்கள் மண்ணுக்கு அடியில் இருந்து கொண்டு, வேர்களைக் கடித்து உண்டு சேதம் விளைவிக்கும். சில வேளைகளில் புழுக்கள் தண்டையும் துளைக்கக் கூடியவை. அதிகம் தாக்கப் பட்ட செடிகளை மெதுவாக இழுத்தாலே அது சுலபமாக வந்து விடும். பெண் வண்டு முட்டைகளை நிலத்தில் இடும். முட்டைகளிலிருந்து விழும் இளம்புழுக்கள் வேர்களை அடைந்து, அவற்றைக் கடித்து உண்டு வளரும். வளர்ந்த புழுக்கள் வெண்மையாகவும், சதைப்பற்று கொண்டும் உடலில் பல சுருக்கங்களைக் கொண்டும், வளைந்தும் காணப்படும். அவை மண்ணுக்கடியிலேயே கூட்டுப்புழுக்களாக மாறி பின்னர் வண்டுகளாக வெளிவரும். வண்டுகள் நீள்வட்ட வடிவத்திலும், கருமை நிறத்திலும் காணப்படும்.

Updated on March, 2014

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014