பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
குலைநோய்: பைரிகுலேரியா ஒரைசே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.
  • இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.
  • தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும்.
  • கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலை நோய்” என்கிறோம்.
  • கணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கிறோம்.
  • பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.
  • கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.
           
  இலை குலைநோய்   தண்டு குலைநோய்   கழுத்துப் பகுத குலைநோய்      
         
      தாக்கப்பட்ட பயிர    

நோய்க் காரணி:

  • சேமிப்பு நெல் விதைகள் மற்றும் தாக்கப்பட்ட தூர்களில் இந்நோய் காரணி இருக்கும்
  • பூசண இனவிருத்தி அமைப்புகள், வித்துக்கள் மூலம் அடுத்த பருவ நெற் பயிருக்கு இந்நோயைப் பரப்பும்.
  • பூசணவித்துக்களை காற்றின் மூலம் மற்ற நெல்யிர்களுக்கு நீண்ட தூரம் வரை பரவும்.
  • கொத்துக்களாக உருவாகும் கொனீடியாக்கள் 2-4 இடைச்சுவருடன், அடிப்பரப்பு சற்று வீக்கமாக, நுனியில் மெலிந்திருக்கும்.
  • கொனீடியா 20-22 x 10-12 மைக்ரோ.மீட்டர் அளவுடையது. கொனீடியா சற்று நீண்டு பெரியதாக, நுனிப்பகுதியை நோக்கி மெலிந்து காணப்படும்.

கட்டுப்பாடு:

உழவியல் மற்றும் இரசாயன முறை :

  • குலைநோய் எதிர்ப்பு இரகங்களை பயிர் செய்யவேண்டும்.
  • நோய் தாக்குதலைத் தாங்கும் இரகங்களான கோ 47, கோ 50, ஏடிடீ 36, ஏடீடி 37, ஏஸ்டீ 16, ஏஎஸ்டீ 20, ஏடீடி 39, எஎஸ்டீ 19, டிபீஎஸ் 3, வெள்ளை பொன்னி, ஏடீடி 44, கோ ஆர் ஹச், பல்குனா, ஸ்வர்ணமுகி, சுவாதி, பிரபாட், ஐஆர் 64, ஐஆர்36 மற்றும் ஜெயா) ஆகியவற்றை பயிரிடுதல்.
  • அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • தழைச்சத்து உரத்தை மூன்றாக பிரித்து இடவேண்டும்.
  • வரப்பிலிருக்கும் களைகளை அழிக்க வேண்டும்.
  • புழுதி நாற்றாங்கால்களையும், தாமதமாக நடுதலையும் தவிர்க்க வேண்டும்.
  • குலை நோய் அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடைக்குப் பின் வைக்கோல் மற்றும் தூர்களை எரித்துவிட வேண்டும்.
  • வரப்புகள், பாத்திகளின் மீது உள்ள புல்வகைகள், மற்ற களைகளை அழிக்கவேண்டும்.

உலர் விதை நேர்த்தி:

  • சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும் (10 கிராம்/கிலோ விதை)

ஈரவிதை நேர்த்தி:

  • கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.

சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கொண்டு நாற்றுவேர் நனைத்தல்

  • 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்பொடியைத் தூவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • மேடாமிநோஸ்டரோபின் 5௦௦ மி.லி./ எக்டர் அல்லது அசாக்ஸிஸ்டேராபின் 5௦௦ மி.லி./ எக்டர் மற்றும் த.மி.வே.பல்கலைக்கழகத்தின் பி.ஃப்-1 கலவையை தெளிக்கவும்.   
  • நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்
  • பூசணக் கொல்லிகளை சரியான அளவில் தெளிக்கக் வேண்டும்.
  • காலை 11.00 மணிக்குள்ளும்/மாலை 3.00 மணிக்கு மேலும் தான் மருந்துகளை தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016