பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
இலையுறை கருகல் நோய்: ரைசோக்டோனியா சொலானி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் துார் வைக்கும் பருவத்திலிருந்து பூட்டைப் பருவம் வரை பயிர்களை தாக்குகிறது.
  • நீர் மட்டத்திற்கு அருகில் இருக்கும் இலையுறைகளில் நோயின் முதன்மை நிலை அறிகுறிகள் காணப்படும்.
  • இலையுறையின் மேல் முட்டைவடிவம் அல்லது நீள்வட்ட வடிவ அல்லது வடிவமற்ற பச்சை கலந்த சாம்பல் நிற புள்ளிகள் தோன்றும்.
  • புள்ளிகள் பெரிதாகும் போது, நடுப்பகுதி சாம்பலான வெள்ளை நிறமாகவும் அதன் ஓரங்கள் ஒழுங்கற்ற கரும்பழுப்பு அல்லது ஊதா பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.
  • பயிரின் மேல்பகுதியிலுள்ள புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து அனைத்து தூர்களிலிருந்து கண்ணாடி இலைவரை காணப்படும்.
  • தீவிர தாக்குதலின் போது பயிரின் அனைத்து இலைகளும் கருகிப்போய் இறந்துவிடும். முடிவில் முழு பயிரும் இறக்க நேரிடுகிறது.
  • இந்நோய் தாக்குதல் இலையின் உள் உறைகள் வரை பரவிச் சென்று முழு பயிரும் இறக்க நேரிடுகிறது.
  • முதிர்ந்த பயிர்கள் இந்நோய்க்கு அதிகமாய் (எளிதில்) இலக்காகும் தன்மை கொண்டவை. குறிப்பாக ஐந்து முதல் ஆறு வாரங்களான இலையுறைகளே அதிகமாய் பாதிக்கப்படுகின்றன.
  • பயிரின் முன் பூட்டைப் பருவம் மற்றும் தானிய நிரப்புதல் ஆகிய வளர்ச்சிப் பருவங்களில் இந்நோய் அதிகமாய் தாக்கப்படுகின்றன. இதனால் தானிய நிரப்புதல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக பூங்கொத்தின் கீழ்ப்பகுதியில் தானியங்கள் முழுமையாக நிரம்பப்படாமல் காணப்படும்.
  • கண்ணாடி இலைகள் தாக்கப்பட்டிருந்தால் 25 சதவிகிதம் மகசூல் இழப்பு ஏற்படும்.
  • நோய் பரவும் விதம் மற்றும் நீடித்திருக்கும் தன்மை: புழுதி மண்ணில், நோய்க் காரணிகள் இழைமுடிச்சு அல்லது பூசண இழையாக சுமார் 20 மாதங்களுக்கு வாழும். ஆனால் ஈர மண்ணில் 5-8 மாதங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். இழை முடிச்சு பாசன நீர் மூலமாக பரவுகிறது.
  • இலைக்கருகல் நோய்க்கு ஏற்ற காரணிகள்:
    • இழை முடிச்சு அல்லது நோய் தாக்கப்பட்ட திரள் நீரில் மிதத்தல்.
    • மண்ணில் நோய் தாக்கம் இருப்பது.
    • 96-100 சதவிகிதம் ஒப்பு ஈரப்பதம். 28-32 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு.
    • அதிக அளவிலான தழைச்சத்து உரங்கள்.
    • அதிக விதை அளவு அல்லது பயிர் (இடைவெளி குறைவு) நெருக்கமாய் இருத்தல்.
    • தொடர்ச்சியான மழை.
       
  நீள்வட்ட சாம்பல் புள்ளி   மேல்பகுதியில் புண்கள்   இலையுறையில் புண்கள்    

நோய்க் காரணி:

  • ரைசோக்டோனியா சொலானி (பூசண நோய்)
  • இந்நோய் மண்மூலம் பரவக் கூடியது ஆகும்.
  • பொதுவாக இப்பூசணம் நீண்ட உயிரணுக்களுடைய தடுப்பற்ற பூசண இழையை உருவாக்குகிறது. இவை இளமையாக இருக்கும்போது நிறமில்லாமலும், பின் முதிர்ச்சி நிலையில் மஞ்சளான பழுப்பு நிறமுடனும் காணப்படும்.
  • இப்பூசணம் அதிக அளவிலான உருளைவடிவ இழை முடிச்சுகளை உருவாக்குகிறது. இவை முதலில் வெண்மையாகவும், பின் பழுப்பு நிறம் அல்லது ஊதா நிற பழுப்பாகவும் மாறிவிடும்.
  • மூன்று வகையான பூசண இழைகளை உருவாக்குகிறது. கொடி பூசண இழை, கதுப்புடைய பூசண இழை மற்றும் மணி மாலை வடிவமான உயிரணுக்கள் இழை முடிச்சுகள் நன்கு நெருக்கமான பூசண இழைகளைக் கொண்டிருக்கும். அவை ஒழுங்கற்ற, அரைக்கோளமாக அடிப்பகுதி தட்டையாகவும் இளமையில் வெண்மை நிறத்துடனும் பின் முதிர்ச்சியடையும்போது பழுப்பு நிறம் அல்லது கரும்பழுப்பு நிறமாக மாறிவிடும். ஒரு தேனி இழை முடிச்சு 1-6 மிமீ வட்ட குறுக்களவு கொண்டிருக்கும். இவை ஒன்றன் பின் ஒன்றாகக் கூடி பெரிய வடிவமாக மாறிவிடும்.

கட்டுப்பாடு:

  • தொழு உரம் 12.5 டன்/எக்டர் அல்லது பசுந்தாள் உரம் 6.25 டன்/எக்டர் அல்லது வெப்பம்புண்ணாக்கு 150 கிலோ//எக்டர் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • அதிக அளவு உரங்கள் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • உகந்த பயிர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • மாற்று களைச்செடிகளை அழிக்க வேண்டும். இயற்கை சீர்திருத்திகளை அளிக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட வயலிலிருந்து மற்ற ஆரோக்கியமுள்ள வயல்களுக்கு நீர் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும்.
  • கோடைக்காலத்தில் வயலை ஆழமாய் உழுதல் மற்றும் பயிர்த்துார்களை எரித்தல்.
  • வேப்பெண்ணெய் 3% (15 லிட்டர்/எக்டர்) நோய் தாக்கிய ஆரம்ப நிலையில் தெளிக்கவும்
  • சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் @ 10 கிலோ/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்பொடியைத் தூவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • மண் வழியில் உரமாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் @ 2.5 கிலோ/எக்டர் அளவை நடவு செய்து 30 நாட்களுக்குப் பிறகு அளிக்க வேண்டும். (இதனை 50 கிலோ தொழு உரம்/மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்).
  • திரவ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்10மி.லி./கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்யவும்.
  • நடவு செய்து 45 நாட்களிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் மொத்தம் மூன்று முறை நோயின் தீவிரத்தைப் பொருத்து இலைவழி அளிப்பாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் (0.2 %செறிவுடன்) தெளிக்க வேண்டும்.
  • இலைவழி அளிப்பு பூசணக்கொல்லிகளைப் பயன்படுத்தி இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • கார்பென்டசிம் (500 கிராம்/எக்டர்) அல்லது அசொஸ்டிராபின் 500 மி.லி./எக்டர் ஆகியவற்றையும் அளிக்கலாம் அல்லது ஹெக்ஸகோனசால் 500 மில்லிகிராம்/லிட்டர் தண்ணீருடன் நோய் தென்பட்டவுடன் மற்றும் 15 நாட்களுக்குப்பின் ஒரு முறையும் தெளிக்கவும்.
  • பூசணக்கொல்லிகளான பெனோமைல் அல்லது இப்ரோடியோன் மற்றும் உயிர் எதிர்ப்புப் பொருள்களான வேலிடாமைசின் அல்லது பாலிஆக்ஸின் ஆகியவற்றை தெளிக்கலாம்.
  • கார்பென்டசீம் 250 கிராம் அல்லது குலோரோத்தலோனில் 1 கிலோ தெளிக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016