பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் நோய்கள்

வாடல் நோய்: ஃபியூசேரியம் உடம்

அறிகுறிகள்

இந்நோய் பயிரின் எல்லாப் பருவங்களிலும் காணப்படும்.  இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டால் விதையிலைகள், மஞ்சளாகவும், பழுப்பாகவும் மாறுவதுடன் இலைக்காம்புகளின் மீது பழுப்பு வளையம் காணப்படும்.  இவ்வாறான, இளஞ்செடிகள் நாளடைவில் காய்ந்து விடுகின்றன.  வளர்ந்த செடியில் நோய் வந்தால் செடியின் அடிப்பாகத்திலுள்ள முதிர்ந்த இலைகள் ஆரம்பத்தில் மஞ்சளாக மாறுகின்றன.  பின்பு அவை யாவும் வாடித் தொங்கி விடும்.  முதலில் முதிர்ந்த இலைகளும், அதன் பின் இளம் இலைகளும் வாடி விடுகின்றன.  நாளடைவில் இலைகள் யாவும் உதிர்ந்து விடுகின்றன.  வாடிய செடிகளை பிடுங்கி பார்த்தால், வேர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.  வாடிய செடியின் சாற்றுக் குழாய் தொகுதியைப் பூசண இழைகள் வளர்ந்து அடைத்து விடுகின்றன.  பட்டையை உரித்துப் பார்த்தால் உட்புறத்தில் மண் நிறத்தில் கீற்றுகள் தென்படும்.  வெண்மை நிற பூசண வளர்ச்சி நோய் முற்றிய நிலையில் தண்டின் அடிப்பாகத்தில் தென்படும்.  செடிக்கு எடுத்துச் செல்லப்படும் உணவுச்சத்துக்கள் மற்றும் நீர் ஆகியவை வேர்ப்பாகத்திலிருந்து மேல் நோக்கி எடுத்துச் செல்வது தடைப்படுகிறது.  இதனால் வாடல் ஏற்படுவதற்கு சாதகமாகிறது.

 

   
அறிகுறி வாஸ்குலர் பகுதியில் சிவந்த பழுப்பு நிறக்கோடுகள்

பரவுதல்

பூஞ்சாணம் மண்ணில் தங்கியிருந்து வேர்களில் பூச்சிகள் அல்லது நூற்புழுக்கள் உண்டாக்கும் காயங்களின் மூலம் பரவுகிறது.  விதைகளின் மூலமாகவும் பரவும் தன்மையுடையது. பூஞ்சாணம் மண்ணிலுள்ள அங்ககப் பொருட்களை உணவாகக் கொண்டு ஏறத்தாழ 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மையுடையது.

மேலாண்மை

  • விதை நேர்த்தி
    டிரைக்கோடெர்மாவிரிடி டால்கம் பவுடர் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம், 1 கிலோ விதைக்கு
  • உயிரியல் முறை
    சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ்அல்லது டிரைக்கோடெர்மாவிரிடியை(2.5 கிலோ ஹெக்டேர்) 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும்.
  • இரசாயன முறை
    பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பன்டாசிம் 1 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016