பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: லவெலுல்லா டாரிகா

அறிகுறிகள்

இவ்வகை பூஞ்சாணம் இலை, இலைகாம்பு, பூங்கொத்து,பிஞ்சு, காய் ஆகியவற்றைத் தாக்குகிறது.  நோயுற்ற பகுதிகளில் வெண்மைநிற துகள் படிவ பூஞ்சாண வளர்ச்சி காணப்படும்.  இலைகளின் கீழப்பரப்பில் காணப்படும்.  இப்படிவ உருவம் பெருகி பின்பு ஒன்றோடொன்று இணைந்து விடும்.  வெண்மை நிற படிவம் நாளடைவில் பழுப்பு நிறமாக மாறி கடைசியில் கருமை நிறமாகி விடும்.  பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றியும் வாடியும், வதங்கியும் காணப்படும்.  தாக்கப்பட்ட பூக்கள் வாடி காய்ந்து விழுந்துவிடும்.  பூவிலிருந்து பெரும்பாலும் பிஞ்சுகள் உண்டாவது இல்லை.  முதிர்ச்சியுறும் பருவத்திலுள்ள காய்கள் பாதிக்கப்பட்டால் அவை சிறியனவாகவும், உருவம் மாறியும் வெடித்தும் காணப்படும்.

பரவுதல்

அக்டோபர், நவம்பர் முதலிய மாதங்களில் நிலவும் தட்ப வெப்ப நிலை இந்நோய் உண்டாவதற்கு ஏற்றதாக அமைகிறது.  வெதுவெதுப்பான வறட்சிக் காலங்களில் உள்ள குறைவான காற்றின் ஈரப்பசையே இந்நோயிற்கு சாதகமாக அமைகிறது.  இந்நோய் ஒரு பருவத்திலிருந்து, மற்றொரு பருவத்திற்கு நோயுற்ற இலைகள், சிறுகுச்சிகள், கிளைகள் மூலம் பரவுகிறது.  இந்நோயின் பூஞ்சாணம் உறங்கிய நிலையில் உயிருடன் செடிகளில் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறம் இலையின் கீழ்பரப்பில் போடி போன்ற துகள்கள்

மேலாண்மை

வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணை 3 சதம் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் நோய் கண்டவுடன் தெளிக்க வேண்டும் (அ) எக்டர் ஒன்றுக்கு கார்பன்டாசிம் 250 கிராம் அல்லது நனையும் கந்தகத் தூள் 2500 கிராம் தெளிக்கவேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016