பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள்

கதிர்ப்பூசணநோய்: பலவகை பூசணங்களின் சேர்க்கை

  • இந்நோய் தமிழகத்தில் சோளம் பயிரிடப்படும் பகுதிகளில் மழைக்காலத்தில் பொதுவாகக் காணப்படும்.
  • ஆஸ்பெரிஜில்லஸ் நைஜர், ஆஸ்பெரிஜில்லஸ் ஒரைசே, கர்வுலேரியா லுனேட்டா, ஹெல்மிந்தோஸ்போரியம், டெட்ராமீரா, ரைசோபல் நைக்ரிகன்ஸ், புசேரியம் மொனிலிபார்மே மற்றும் ஆல்டெர்நேரியா போன்ற பூசணங்களால் இந்நோய் ஏற்படுகின்றது.

அறிகுறிகள்

  • கதிர் பறித்தவுடன் இந்நோய் தோன்ற ஆரம்பித்து நாளடைவில் கதிர் முழுவதும் பரவுகின்றது.
  • கதிர்களில் பல்வேறு நிறங்களில் பூசண வளர்ச்சி ஏற்பட்டு கதிர்கள் வீணாகின்றன.
  • இந்நோய் கதிர் பறித்தவுடனும் கதிரில் பால் பிடிக்கும் தருணத்திலும் தோன்றினால் அதிகமான இழப்பினை ஏற்படுத்துகின்றது.
  • தானியம் முதிர்ச்சியடைந்தபின் இந்நோய் தோன்றினால் தானியங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. இந்நோயினால் தானியங்கள் கெட்டுவிடுதல், முளைக்கும் திறன் குறைதல், தானியத்தின் தரம் குறைதல் போன்ற  விளைவுகள் ஏற்படுகின்றன.
  • அத்துடன் அப்ளாபாக்சின் என்ற நச்சுப் பொருள் இந்நோயினால் தோன்றுவதால் அவ்வாறான தானியங்களை உட்கொள்ளுவதால் மனித இனத்திற்கும், விலங்கினத்திற்கும் கேடு விளைவும் வாய்ப்புண்டு.
கட்டுப்பாடு
  • இந்நோய் கோ 21, கோ 22 ஆகியவைகளில் குறைவாகத்  தோன்றுகின்றது. 
  • நோய் தாக்கிய கதிர்களிலிருந்து பெற்று விதைகளை விதைக்கப் பயன்படுத்தக்கூடாது.
  • இதன் மூலம் விதைப்புத்திறன் குறைவதைத் தவிர்க்கலாம்.
  • விதை முளைப்புத் திறன் குறைவதைத் தடுப்பதற்காக விதைக்கும்முன், திரம் 2 கிராம்/கிலோ வீதம் கலந்து இடவும்.
  • அடிக்கடி மழை தூறிவரும்  குளிர் காலத்தில் கதிரி பிரியும பொழுதும் முதல் தெளிப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பின்பும் பால் பிடிக்கும் தருணத்திலும் மேன்கோசெப் 1 கிலோ / எக்டர் அல்லது கேப்டான் 1 கிலோ + ஆரியோப்பஞ்சின் - சால்  100 கிராம் / எக்டர் வீதம் தெளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • விதைகளைச் சேமித்து வைப்பதற்கு முன் அதிகமாக ஈரம் இல்லாமல் நன்கு காய வைத்தபின் சேமித்து வைக்கவும்.
  • இதன் மூலம் தானியங்களைப் பூசணங்கள் தாக்கமால் பாதுகாப்பதுடன் முளைப்புத்திறன் குறைவதையும் தடுக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014