தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்
சிப்பிக் காளான் வளர்ப்பு

சிப்பிக் காளானைப் பண்ணைக் கழிவுகளான நெல் மற்றும் கோதுமை போன்றவைகளில் எளிதாக வளர்க்கலாம்.

சிப்பிக் காளான் குடில்
தென்னங் கீத்து வேய்ந்த குடிலைக் காளான் சாகுபடி செய்யப் பயன்படுத்தலாம். குடிலின் அளவு தினசரி நாம் உற்பத்தி செய்யும் காளான் அளவைப் பொறுத்து அமைய வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ காளான் உற்பத்தி செய்வதாக இருந்தால் சுமார் 300 ச.மீ அளவுக்குக் குடிலின் அளவு இருக்க வேண்டும். காளான் குடிலை இரண்டாகத் தடுத்து ஒன்றை வித்துப் பரவும் அறையாகவும் மற்றொன்றைக் காளான் தோன்றும் அறையாகவும் பயன்படுத்தலாம். வித்துப் பரவும் அறையின் வெப்ப நிலை 20-30o செல்சியஸ் வரை இருக்கலாம். அதிகப்படியான வெளிச்சம் தேவையில்லை. ஆனால் காற்றோட்டம் தேவை. அறையின் சன்னல்களுக்கு 35மெஷ் அளவுள்ள நைலான் வலைகளைப் பொருத்தி காளான் ஈ போன்ற தீமை பயக்கும் பூச்சிகள் புகா வண்ணம் தடுக்கலாம்.

காளான் தோன்றும் அறையில் 23-25o செல்சியஸ் வெப்ப நிலையும் காற்றின் ஈரப்பதம் 85  சதவிகிதத்திற்கு மேலும் இருக்க வேண்டும். தரையில் பரப்பியுள்ள மணலையும் அறையின் சுவர்களை யொட்டி உட்புறத்தில் தொங்கவிடப் பட்டிருக்கும் சாக்குப் படுதாக்களையும் தண்ணீரால் நனைத்து (இரண்டு அல்லது மூன்று முறை) தேவையான சூழ்நிலையை உருவாக்கலாம். அறையில் நல்ல காற்றோட்டமும் தேவையான அளவு வெளிச்சமும் வேண்டும்.

சிப்பிக் காளான் வளர்க்கப் பாலிதீன் பைகளில் உருளைப் படுக்கைகள் தயாரிக்க வேண்டும். வியாபார ரீதியில் காளான் உற்பத்தி செய்ய நெல் வைக்கோல் சிறந்தது. படுக்கைகள் தயாரிக்கும் முன் வைக்கோலைப் பதப்படுத்துவது மிகவும் அவசியம். பொதுவாக மூன்று பதப்படுத்தும் முறைகள் கையாளப்படுகின்றன. வைக்கோலை எதற்காக நாம் பதப்படுத்த வேண்டும்.

ஒன்று ... நெல் வைக்கோலில் உள்ள அதிகப்படியான நுண்ணுயிரிகளைக் குறைத்தல். இதனால் களைப் பூசணங்கள் தோன்றுவது குறைகின்றது.
இரண்டு... காளான் வித்துக்கள் பரப்பிய பிறகு காளான் பூசண இழைகள் எளிதாக வைக்கோலின் மேற்பரப்பில் பரவி வளர வாய்ப்பாக அமைகிறது.

(i) கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல்
நன்கு உலர்ந்த வைக்கோலை 5 செ.மீட்டர் அளவுள்ள துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த வைக்கோல் துண்டுகளை சுமார் 1 மணி நேரம் 8o செ. கொதிநிலையில் தண்ணீரில் அமிழ்ந்திருக்குமாறு செய்ய வேண்டும்.

(ii)நீராவியில் பதப்படுத்துதல்
ஊற வைத்த வைக்கோல்த் துண்டுகளை ஆட்டோக்ளேவ் போன்று வடிவமைக்கப்பட்ட கொதி கலன்களில் நீராவியினால் சுமார் 45-60 நிமிடங்கள் பதப்படுத்தலாம்.

(iii)இரசாயண முறையில் பதப்படுத்ததல்
இம் முறையில் வைக்கோல் துண்டுகளை நேரடியாக மருந்துக் கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்துப் பிறகு பயன்படுத்தலாம். சுமார் 10 கிலோ உலர்ந்த எடையுள்ள வைக்கோல் துண்டுகளை இம்முறையில் பதப்படுத்த நூறு லிட்டர் மருந்துக் கரைசல் தேவை. நூறு லிட்டர் தண்ணீருடன் கார்பென்டசிம் என்னும் பூசுணக் கொல்லி 10 கிராமும், பார்மலின் (45 சத அடர்வுள்ளது) என்னும் திரவம் 125 மி.லி.யம் கலந்து இரசாயணக் கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன்பின் வைக்கோல் துண்டுகளைக் கரைசலில் நன்கு அமிழ்ந்திருக்கும்படி 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பார்மலின் எளிதாக ஆவியாக விடுமாதலால் வைக்கோல் துண்டுகள் அடங்கிய அண்டாவின் வாய்ப்பகுதியை பாலித்தீன் விரிப்பு கொண்டு மூடிக்கட்டிவிட வேண்டும். பிறகு 16 மணி நேரம் ஊறிய வைக்கோலை அகற்றி அதிகப்படியான நீரை வடித்துச் சுத்தமான அறையில் உலர்த்த வேண்டும்.

இம்முறையில் வைக்கோலைப் பதப்படுத்துவதில் எச்சரிக்கை தேவை. எந்தக் காரணத்தைக் கொண்டும் கார்பென்டசிம் மருந்தின் அளவை (அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்) அதிகரிக்கக் கூடாது. பார்மலின் திரவம் ஆவியாகக் கூடியது. ஆகையால் இதைப் பயன்படுத்தும் போது கையுறை அணிந்து, முகத்திற்கும் முக மூடி அணிந்து கொள்வது அவசியம்.

கொதி நீரில் பதப்படுத்துதல், இராசயண முறையில் பதப்படுத்துதல் ஆகிய முறைகளை ஒப்பிடும் போது இராசயண முறையில் வைக்கோலைப் பதப்படுத்துவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

பதப்படுத்திய வைக்கோல் துண்டுகளை காற்றோட்டமுள்ள ஒரு அறையில், சுத்தமான சாக்குப்படுதா ஒன்றின் மேல் பரப்பி, ஈரப்பதம் சுமார் 65 சதவிகிதம் இருக்கும்படி உலர்த்த வேண்டும். ஒரு பிடி வைக்கோல் துண்டுகளை கையிலெடுத்து இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. அதே சமயம் வைக்கோல் ஈரமாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில் வைக்கோலில் சுமார் 65 சதவிகித ஈரமிருக்கும்.

காளான் வித்திடுதல்
சுமார் 60க்கு 30 செ.மீ. அளவுள்ள பாலிதீன் பைகளில் (80 காஜீ பருமன்) அடுக்கு முறையில் வித்திட்டு உருளைப் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு காளான் வித்துப் புட்டியைப் பயன்படுத்தி இரண்டு படுக்கைகள் வரை தயாரிக்கலாம். முதலில் பாலிதீன் பையின் அடிப்பகுதியைச் சணல் நூலால் கட்டி பையதை் திறந்து பதப்படுத்திய வைக்கோல் துண்டுகளை சுமார் 5 செ.மீ.உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அதன் மேற்பரப்பு முழுவதும் சுமார் 25 கிராம் அளவிற்குக் காளான் வித்துக்களைத் தூவ வேண்டும். மீண்டும் அதன் முல் 10 செ.மீ. அளவிற்கு வைக்கோல் துண்டுகளை இரண்டாவது அடுக்காக நிரப்பி அதன் மேற்பகுதியில் 25 கிராம் அளவிற்கு வித்துக்களைத் தூவ வேண்டும். இதே போல் மூன்றாவது மற்றும் நான்காவது அடுக்குகளைத் தயார் செய்ய வேண்டும். முடிவாக 5 செ.மீ. உயரத்திற்கு ஐந்தாவது அடுக்காக வைக்கோல் துண்டுகளை பரப்பிய பின் பயைின் வாய்ப்பகுதியை சணல் நூலால் கட்ட வேண்டும். ஒவ்வொரு முறை வைக்கோல் நிரப்பும் போதும் பையினை நன்றாகக் குலுக்கி விட வேண்டும். பின் 10-15 துளைகளை இட வேண்டும்.

தயாரித்த உருளைப் படுக்கைகளைப் பூசண இழை பரவும் அறையில் பல அடுக்குகளாக தொங்க விட வேண்டும். படுக்கை முழுவதும் பூசண இழைகள் முழுமையாகப் பரவ சுமார் 15 முதல் 20 நாட்களாகும். காளான் பூசணம் முழுமையாகப் பரவிய பின் மூன்று நான்கு நாட்களில் காளான் மொட்டுகள் படுக்கையின் மேற்பரப்பில் தோன்றும்.

காளான் தோன்றும் அறையைத் தகுந்த முறையில் பராமரிப்பது சீரான காளான் உற்பத்திக்கு மிகவும் அவசியம். அறையில் நிலவம் வெப்பநிலை சுமார் 23 முதல் 25o  ஈரப்பதம் 85 முதல் 90 சதமாகவும் இருப்பது மிகவும் நல்லது. அறைக்குள் மந்தமான வெளிச்சம் இருக்க வேண்டும். காற்றோட்டம் இருப்பதுமு் மிகவும் அவசியமான ஒன்று. காற்றோட்டமில்லாமல் அறையை அடைத்து வைத்து விட்டால் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாக காளானின் இயற்கையான வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். வசதி வாய்ப்பிற்கேற்ப தட்ப வெப்பநிலை, வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை சரியான அளவில் பராமரிக்க தற்கால புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம்.

மொட்டுக்கள் தோன்றிய இரண்டு மூன்று நாட்களில் காளான்கள் முழு வளர்ச்சியடைகின்றன.காளான்களைத் தண்ணீர் தெளிக்குமுன் பறித்துச் சுத்தம் செய்து துளையிட்ட பாலிதீன் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். முதல் அறுவடை முடிந்தவுடன் படுக்கையில் மேலும் 10 துளைகள் இட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகக் காளான்கள் தோன்றும். இம்முறையைப் பின்பற்றி மூன்றாவது முறையாகவும் காளான் அறுவடை செய்யலாம்.

முதல் அறுவடை முடிந்தபின் காளான் படுக்கைகளை கத்தியால் கிழித்து விட்டு தண்ணீர் தெளிப்பதால் இரண்டாவது. மூன்றாவது அறுவடைகளை செய்யலாம்.

Updated on Nov 2013

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014