organic farming
அங்கக வேளாண்மை :: உயிராற்றல் வேளாண்மை

உயிராற்றல் விவசாய பஞ்சாங்கம்

இந்த நாட்க்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழி முறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒவ்வொன்றிலும் அதாவது அந்த குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விவசாய வேலைகள் என்ன செய்தால் நமக்கு ஆரோக்கியமான தாவரங்கள் வளர்ந்து அதிக விளைச்சலையும், தரமான மற்றும் சுவை கூடிய விளைச்சலையும் பெறலாம் என அறிந்து கொள்ள உதவும். அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில் குறிப்பாக சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏற்படும் நிகழ்வுகளை கணித்து அதனால் தாவரங்களிலும் மற்றும் மண்ணிலும் ஏற்படும் மாறுதல்களை கணக்கிட்டு அதற்க்கேற்றவாறு நாம் செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கூறப்பட்டுள்ளது.

இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள்

  1. மேல் நோக்கு நாட்கள்
  2. கீழ் நோக்கு நாட்கள்
  3. தவிர்க்க வேண்டிய நாள்
  4. அபோஜி (தொலைவு நிலா)
  5. பெரிஜி (அண்மை நிலா)
  6. அமாவாசை
  7. பெளர்ணமி
  8. சந்திரன் எதிர் சனி
  9. இராசி மண்டலத்தில் சந்திரன் பயணம் செய்யும் நாட்கள்
cal

மேல் நோக்கு நாட்கள்

இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் (சுமாராக) அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்கு மேலுள்ள பகுதிகள் வளர்ச்சி வேகம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த நாட்களில் 1. விதைகளை நேரடியாக நடவு செய்தல் – மக்காச்சோளம், வெண்டை, பீட்ரூட், பூசணி, நெல் நேரடி விதைப்பு போன்ற விதை நடவு வேலைகள்.

நாற்றுகளுக்காக விதைத் தெளிப்பு – கத்தரி, தக்காளி, நெல் மற்றும் மரங்களின் விதைகள் தேங்காய் போன்றவை 3. இலை வழி ஊட்டமாக உரங்களை நீரில் கரைத்து தெளித்தல். 4. பஞ்ச காவ்யம் தெளிக்க 5. B.D.501 (கொம்பு சிலிக்கா) தெளித்தல் (காலை 10.00 மணிக்குள்)

கீழ் நோக்கு நாட்கள் (நாள்)

இவ்வாறு கருப்பு வண்ணமாக இட்டுள்ள நாட்கள் கீழ் நோக்கு நாட்கள்சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக) தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் எனப்படுகின்றது. இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளர்ச்சி அதிகரிக்கின்றது. மண்ணில் நுண்ணுயிர் பெருக்கும் அதிகரிக்கின்றது.

ஆகவே இந்த நாட்களில்

  1. நாற்றுகள் மாற்றி நடவு செய்தல்
  2. மரவள்ளி குச்சிகள், கரும்பு கரணைகள் க்ளைரிசிடியோ போன்ற குச்சிகளை நடவு செய்தல், பதியன்கள் போடுதல் போன்ற வேலைகள்
  3. கம்போஸ்ட் தயாரிப்பு
  4. கம்போஸ்ட் மற்றும் திரவ உரங்களை நிலத்தில் இட
  5. B.D.500 (கொம்பு சாண உரம்) + CPP (சாண மூலிகை உரம்) நீரில் கரைத்து நிலத்தில் தெளிக்க (மாலை 3.00 மணிக்கு மேல்)
  6. உழவு செய்தல் போன்ற வேலைகள்

தவிர்க்க வேண்டிய நாட்கள்

(தவிர்க்கவும் நேரத்திலிருந்து 6 மணி நேரம் முன்னும் பின்னும் முக்கிய விவசாய வேலைக்களைத் தவிர்க்கவும்)
சந்திரம் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சுமார் 13.5 நாட்களில் ஒரு முறை சூரியனின் சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட இடத்தில் கடக்கிறது. இந்த நாள் தவிர்க்க வேண்டிய நாள் என் குறிப்பிடப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட கிரகணம் என்றே கூறலாம். இந்த நாட்காட்டியில் தவிர்க்கவும் என்று குறிப்பிட்ட நாளில் அந்த குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்பு ஆறு மணி நேரமும் பின்பு ஆறு மணி நேரமும் விதைத்தல், நாற்று நடுதல், இலைவழி உரத்தெளிப்பு போன்ற முக்கியமான வேலைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.

அபோஜி – தொலைவில் உள்ள சந்திரன்

இந்த நாளில் பூமியில் இருந்து சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கும். இந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாளில் குறிப்பிட்டுள்ள மணியில் 6 நேரமும் பின்பு 6 மணிநேரமும் முக்கியமாக விதைப்பது மட்டும் தவிர்க்கவும். ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் நடவு செய்யலாம். அவ்வாறு உருளைக்கிழங்கு நடவு செய்தால் விளைச்சல் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் கிழங்கு சற்று பெரியதாகவும் சுவை கூடுதலாகவும் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பெரிஜி – அண்மை சந்திரன்

இந்த நாளில் சந்திரன் தனது சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கும். இந்த நாளில் விதைத்தல், நாற்று நடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். அண்மையில் இரண்டு மூன்று வருடங்களில் கிடைத்த தகவல்கள் இந்த நாளில் (நெல், தர்பூசணி, மஞ்சள், தட்டைப்பயறு போன்றவை) வெவ்வேறு பகுதிகளில் விதைத்த விவசாயிகள் அனுபவித்த உண்மை. ஓரளவிற்கு விளைந்த விளைப் பொருட்கள் கூட அவற்றின் சுவை மாறுபட்டு (சுமார் 75% வரை குறைந்து) காணப்பட்டது.

அமாவசை

இந்த நாள் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நாளில் சூரியனுக்கு அருகில் சந்திரன் இருக்கும். இது 29.5 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. இந்த நாளில் சேமித்து வைக்க வேண்டிய விதைகள், வைக்கோல் போன்ற கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தட்டைகள் இவற்றை அறுவடை செய்து பக்குவப்படுத்தி வைக்கலாம். மர வேலைகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில் போன்றவற்றை அறுவடை செய்யலாம். கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல் உழவு செய்த வயலில் கம்போஸ்ட் இடுதல் போன்றவையும் செய்யலாம்.

பெளர்ணமி

  • இந்த நாளில் சந்திரன், சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும் இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 48 மணி நேரம் முன்பு விதைகளை விதைத்தால் செடிகள் வேகமாக வளர்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியே அந்த செடிகள் தாங்கும் சக்தியை ஓரளவு இழக்க காரணமாகிறது. ஆதலால் ஓரளவு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விதைகள் விரைவில் முளைப்பதால், நாற்றுகள் ஓரளவு முதிர்ச்சி அடையும் வரை பாதுகாப்பு மிகவும் அவசியம்.
  • இந்த நாளில் காலை நேரத்தில் 10.00 மணிக்குள் B.D.501 (கொம்பு சிலிக்கா) தெளித்தால் பூஞ்சாண நோய்கள் தடுக்கப்படுகிறது.
  • பஞ்சகாவ்யம் தெளிக்க மிகவும் உகந்த நாள்

சந்திரன் எதிர் சனி

இந்த நாள் சந்திரன், பூமி, சனி கிரகம் மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் அமைகின்ற நாள்

  • இவ்வாறு அமையப்பெறும் நாளில் காலை நேரத்தில் B.D.501 தெளிப்பு மிகுந்த பலனை அளிக்கிறது.
  • இந்த நாளில் விதைத்த விதைகள் மிகமிக ஆரோகியமான நாற்றுகளாக வளர்கின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனும் பூச்சிகள் தாக்குதல்களைக் கூட எதிர்த்து வளரும் திறனும் அதிகரிக்கிறது.
  • சந்திரன் எதிர் சனி அமையும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குள் விதைத்தால் நலம்
  • இந்த நாளில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யலாம்.

இராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்கள்

ஒவ்வொரு இராசியும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடிப்படையில் சக்திகளை வெளிப்படுத்துகிறது
அவை

மேஷம், சிம்மம், தனுசு = நெருப்பு = விதைகள், பழங்கள்
ரிஷபம், கன்னி, மகரம் = மண் = கிழங்குகள், வேர்கள்
மிதுனம், துலாம், கும்பம் = காற்று = பூக்கள்
கடகம், விருச்சகம், மீனம் = நீர் = இலைகள், தண்டுகள்

இவ்வாறு வெளிப்படும் சக்திகள் சந்திரன் மூலம் பூமியில் உள்ள தாவரங்களில் அந்தந்த குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் மாறுதல்களிலும், வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த ராசிகளில் சந்திரன் பயணிக்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தாவரங்களை பிரித்து விதைப்பு, நாற்றுநடவு, அறுவடை போன்ற வேலைகள் செய்வது மிகுந்த பலனை அளிக்கிறது. இவ்வாறு அந்த மூலக்கூறுகளின் அடிப்படையில் தாவரங்களைப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

  • நெருப்பு – விதைகள், பழங்கள் – நெல், கோதுமை, பயறு வகைகள், தக்காளி, கத்தரி, பீன்ஸ், மா, பலா, நிலக்கடலை, பருத்தி போன்றவை
  • மண் – கிழங்குகள், வேர்கள் – நன்னாரி, வெட்டிவேர், மரவள்ளி, உருளைக்கிழங்கு, சேனை, மஞ்சள், இஞ்சி, காரட், பீட்ரூட் போன்றவை
  • காற்று பூக்கள் – காலிபிளவர், ரோஜா, மல்லி போன்றவை
  • நீர் – இலைகள், தண்டுகள் – கறிவேப்பிலை, முட்டைக்கோசு, வெங்காயம், கீரை வகைகள், இலைக்காக வாழை நடுதல், மர வேலைக்கான மரங்கள் போன்றவை

இவ்வாறு பிரித்து அந்தந்த மூலக்கூறுகளாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட தாவரங்களுக்குண்டான வேலைகளை செய்வது மிகவும் நன்மைத் தரும்.


ஆதாரம்

  • செல்வராஜ் மற்றும் குழுவினர்கள் – 2006. அங்கக முறையில் நிலையான தோட்டக்கலைப் பண்ணையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதகமண்டலம்.
  • இந்திய உயிராற்றல் வேளாண்மைக் குழு

Updated on March 2014

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16