organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை

நூற்புழு மேலாண்மை

முன்னுர

நூற்புழுக்கள் கணுக்களற்ற உருளை வடிவ புழுக்களாகும். இவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே காணமுடியும். இவை மண், தண்ணீர் போன்றவற்றில் உயிர் வாழ்கின்றன. இவற்றுள் சில வகை நூற்புழுக்கள் பயிர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து அவற்றினை சேதப்படுத்தி மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்படாத பயிர்களே இல்லை எனலாம். இந்நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றி, வெளிர் நிறமடைந்து, இலைகள் மற்றும் காய்கள் சிறுத்து விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. நம் மாநிலத்தில், இதுவரை 90 க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பயிர்களைத் தாக்கக்கூடிய நூற்புழுக்களில் பெரும்பாலானவை நீண்ட மற்றும் உருளை போன்ற இளநிலை நூற்புழுக்களாகும். சில இனத்தின் மூன்றாம், நான்காம் நிலை அடைந்த முதிர்ச்சியான புழுக்கள் மொச்சை அல்லது அவரை வடிவம் போல இருக்கும். நூற்புழுக்களின் சராசரி நீளம் 0.3மி.மீ. முதல் 4 மி.மீ. வரை இருக்கும். நிலத்தில் ஒரே மாதிரியான பயிரை காலம் காலமாகப் பயிரிட்டுக் கொண்டே வருகையில், அந்தப் பயிரினைச் சார்ந்து வாழ்கின்ற நூற்புழுக்கள் எண்ணிக்கையில் மிகுந்து மண்ணிலேயே தங்கி விடுகின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி நாளடைவில் குறைந்து, விளைச்சலும் குறைகிறது.

நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் விளைச்சல் குறைந்து, விளைபொருள் தரமும் குறைந்து வேளாண் பெருமக்களுக்கு நட்டம் ஏற்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட் போன்ற பயிர்களில் கிழங்குகளின் தோற்றம் உருமாறி காணப்படும். பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்பட்ட பயிர்கள் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போல் தோன்றும்.

நூற்புழுக்களுக்கு தலை பாகத்தில் போர்வை போர்த்திய குத்தூசி போன்ற அலகு அமைப்பு உள்ளது. இதனைப்பயன்படுத்தி வேரிலிருந்து சாறை உறிஞ்சி வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்களைச் செடிக்குச் செல்ல விடாமல் தடுத்து விடுகின்றன.

நூற்புழுக்களை அவை உணவு உட்கொள்ள தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்து நான்கு வகைகளாகப்பிரிக்கலாம். அவையாவன.

  1. முழுமையான அகவேர் நூற்புழுக்கள்
  2. வேரில் முழுமையாக உட்புகாத நூற்புழுக்கள்
  3. புறவேர் நூற்புழுக்கள்
  4. இலை, மொக்கு மற்றும் பூக்களை உண்ணும் நூற்புழுக்கள்

நூற்புழு தாக்குதலினால் தோட்டத்தின் தோற்றத்தில் காணப்படும் வேறுபாட்டினையும், செடியில் காணப்படும் அறிகுறிகளையும் தெரிந்து, அதற்கேற்ப மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தோட்டத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் பயிர் வளர்ச்சியின்றி காணப்படும். நண்பகல் நேரத்தில் மண்ணில் ஈரம் இருக்கும் பட்சத்தில் அவை வாடியது போல் காணப்படும். மேலும், பயிர் உரிய காலத்திற்கு முன்பே முதிர்ச்சி நிலையை அடைந்து விடும்.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016