முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

மகசூல் கொழிக்கும் ‘ கோலியாஸ் ’ ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வருமானம்
அசோக்,தஞ்சைப் மாவட்டம்.
தொடர்புக்கு: 9047542854

தமிழக நெற்களஞ்சியத்துக்குச் சொந்தக் காரர்களான தஞ்சைப் பகுதி விவசாயிகள் ’கோலியாஸ்’ கிழங்கு விவசாயத்தில் இப்போது கொடி கட்டிப் பறக்கிறார்கள். கேரட் வடிவில் பழுப்பு நிறத்தில் இருக்கும் ’கோலியாஸ்’ மருத்துவக் குணம் கொண்டது. கோலியாஸ் செடியின் இலை, தண்டு, கிழங்கு மூன்றிலிருந்தும் ஃபோர்ஸ்கோலி (Forskohlii) என்ற மருத்துவ மூலப்பொருள் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சில மாத்திரை, மருந்துகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்தல், ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகத் தரப்படும் மாத்திரைகளில் கோலியாஸ் மூலப்பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழகம் முழுவதும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சேலம் ஆத்தூர் பகுதியில் முதன்முதலாகப் பயிரிடப்பட்ட கோலியாஸ், இப்போது ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ஓரளவு தண்ணீர் வசதியும் எளிமையான பராமரிப்பும் இருந்தால்போதும் என்பதால் இப்போது தஞ்சை பகுதி விவசாயிகளும் கோலியாஸை பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். ’’நெல், கரும்புக்குப் போடுற மாதிரி அதிகமா உரம் போடத் தேவையில்லை.

ஆடு, மாடு எதுவும் இந்த இலையைக் கடிக்காது. இருபது நாளைக்கு ஒரு தடவ லேசா தண்ணீர் விட்டா போதும். ஆறு மாசத்துல மகசூல் எடுத்துடலாம். ஏக்கருக்குச் சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். பத்து டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். டன்னுக்குப் பதினஞ்சாயிரம் கிடைக்கிறதால, எல்லாச் செலவும் போக ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நமக்கு நிக்கும்’’ என்கிறார் வல்லம் அருகே அய்யாசாமிபட்டியில் கோலியாஸ் பயிரிட்டிருக்கும் விவசாயி அசோக்.

செலவும் மானியமும்
“நாத்துகள் மூலமே கோலியாஸ் மறு உற்பத்தி செய்யப்படுகிறது. அறுவடைக்கு முன்னதாகப் பதியன் முறையில் இந்த நாத்துகளை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். தேவைப்பட்டால் சேலத்திலிருந்து நாங்களே நேரடியாக நாத்துகளை சப்ளை செய்வோம்’’ என்கிறார் அருள் ஹெர்பல் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் செல்வம். ஒரு ஏக்கரில் 16 ஆயிரம் நாத்துகளை நட முடியும். இதன் மொத்த விலை 3,500 ரூபாய்தான். நாற்று விற்பனை செய்யும் நர்சரி நிறுவனங்களே விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கிழங்கு, தண்டு, இலை களை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்கின்றன. இதனால், விளைச்சலை வண்டி ஏற்றி விற்க வேண்டிய அவசியமும் விவசாயி களுக்கு இல்லை. கோலியாஸ் பயிரிட ஏக்கருக்கு ரூ. 3,450 அரசு மானியம் தருகிறது என்பது கூடுதல் தகவல்.

Updated on March, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015