முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ! சக்கைப்போடு போடும் இயற்கை சம்பங்கி!
விதையை விதைத்துவிட்டு, வருமானத்திற்காக மாசக்கணக்கில் காத்து இருப்பதெல்லாம் அந்தக்காலம். இப்பல்லாம் உடனுக்குடன் மகசூல் கிடைக்கணும்… தினம்தினம் வருமானம் வரணும் என்பதுதான் பலருடைய மனநிலை. இந்த மனநிலைக்கு தோதான பயராக இருக்கிறது மலர் சாகுபடிதான். அதிலும் பூச்சி, நோய் தாக்காத, வருடம் முழுக்க வருமானம் தரும் சம்பங்கிதான் பெரும்பாலான விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது என சம்பங்கி சாகுபடி செய்யும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்.

இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன் !
சங்கரன் கோவிலிருந்து திருவேங்கடம் செல்லும் சாலையில், ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருங்கோட்டூரில் இருக்கும் சுப்ரமணியனின் தோட்டத்திற்குச் சென்றோம். அன்புடன் வரவேற்றவர் எங்க பூர்வீகமே விவசாயம்தான். எங்க அப்பா காலத்தில் ரசாயன விவசாயம் தான். எஸ்.எஸ்.எல்.சி முடித்த பிறகு  படிக்கப் பிடிக்காததால், எங்களுடைய ரைஸ் மில்லைப் பாத்துக்க ஆரம்பித்தேன். அப்படியே அப்பாவுடன் சேர்ந்து விவசாயத்தையும் பாத்துக்க ஆரம்பித்தேன். அப்பா காலமானதும், தொடர்ந்து விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறேன்.

ஒரு நாள் ராஜபாளையத்திலிருந்து சங்கரன் கோவிலுக்கு வருவதற்காக  பேருந்துநிலையத்தில் காத்துக்கொண்டிருந்த போதுதான் ‘பசுமை விகடன்’ போஸ்டர் கண்ணில் தட்டுப்பட்டது. சும்மா படித்தப் பார்ப்போம், பஸ்சில் நேரம் போகுமே என்று நினைத்து வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் பற்றிய செய்திகள் இருந்த அந்தப் புத்தகம் எனக்குள் பல யோசனைகளைத் துண்டி விட்டுச்சு. அதிலிருந்து ஒவ்வொரு இதழையும் விடாமல் படிக்க ஆரம்பித்தேன். திருநெல்வேலியில் நடந்த நம்மாழ்வார் இயற்கை விவசாயக் களப்பயிற்சியில் கலந்துக் கொண்டு… அமுதக்கரைசல், பஞ்சகவ்யா மாதிரியான இடுபொருட்களுடைய நன்மை பற்றியும் தயாரிக்கும் விதத்தையும் தெரிந்து கொண்டேன். உடனே, ‘ரசாயனத்திலிருந்து இயற்கைக்கு  மாறவேண்டும் என்று முடிவு செய்து… கரும்பு, நெல், எலுமிச்சைப் பயிர்களுக்கு அடியுரமாக குப்பை உரத்தையும், அமுதக்கரைசலையும் கொடுத்தேன். நல்ல மாற்றம் தெரிந்தது என்றார் சுப்பிரமணியன்.

நம்பிக்கை நாற்று ஊன்றிய அனுபவ விவசாயிகள் !
“அப்படியே போய்க் கொண்டிருந்தப்போது திண்டுக்கல் மாவட்டம், தவசிமடையைச் சேர்ந்த மருதமுத்து, செம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் இரண்டு பேருடைய சம்பங்கி சாகுபடியை  பற்றி பசுமை விகடனில் வந்தது. உடனே இரண்டு பேரிடமும் பேசிவிட்டு அவங்களோட தோட்டத்துக்குப் போய், சம்பங்கி சாகுபடி பற்றி ‘ஏ டு இசட்’ கேட்டுத் தெரிந்துக் கொண்டு வந்தேன். அவங்க கொடுத்த நம்பிக்கையில் எனக்கு ஆர்வம் அதிகமானது. முதலில் 70 சென்டில் சம்பங்கி போட்டேன். அடுத்து 50 சென்ட் என்று இப்போது மொத்தம் ஒன்றேகால் ஏக்கரில் சம்பங்கி இருக்கு. மூன்று வருடமாக சம்பங்கி மூலம் நல்ல மகசூல் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

ஸ்ரீகார், சுஹாசினி, வைபோங், பூலோரஜினி என பல ரக சம்பங்கிகள் இருந்தாலும் ‘பிரஜ்வல்’ என்ற ரக விதைக்கிழங்கைத்தான் அதிகமாக நடவு செய்கிறார்கள். இது, மற்ற ரகங்களைவிட பூக்கள் பெரிதாகவும் அதிக மகசூலையும் தரும். செம்மண், செவல் கலந்த கரிசல் மண் நிலங்களில் சம்பங்கி நன்றாக வளரும். சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து, ஒரு வாரம் இடைவெளிவிட்டு, ஏக்கருக்கு 8 டிராக்டர் வீதம் தொழுவுரத்தைப் போட்டு உழவு செய்ய வேண்டும். பிறகு 3 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளுக்கு இடையில் இரண்டரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பாத்திகளின் இரு ஓரங்களிலும் இரண்டரை அடி இடைவெளியில் மூன்று அங்குல அளவுக்குக் குழிபறித்து, குழிக்கு ஒரு கிழங்கு வீதம், முளைப்பு மேல் நோக்கிஇருக்குமாறு செங்குத்தாக முக்கோண நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பொடி கிழங்காக இருந்தால் இரண்டு
நடவு செய்ய வேண்டும். வாய்க்கால், சொட்டுநீர். ஸ்பிரிங்லர் ஆகிய முறைகளில் எது வசதியாக இருக்கிறதோ அந்த முறையில் பாசனம் செய்யலம் (இவர் ஸ்பிரிங்லர் அமைத்திருக்கிறார்).

120-ம் நாளில் பூக்கும் !
முதல் பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர் விட வேண்டும். பிறகு, நிலத்தின் தன்மையைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் பாசனம் செய்து கொள்ளலாம். நட்ட 15-ம் நாளில் முளைப்பு வரும். பிறகு படிப்படியாக வளர ஆரம்பிக்கும். 120-ஆம் நாளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். எட்டாவது மாதத்திற்கு மேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். மாதம் ஒரு முறை களை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 10 டிராக்டர் தொழுவரமிட வேண்டும். இதை இரண்டு செடிகளுக்கு இடையில் குழிதோண்டி, ஒரு குழிக்கு முக்கால் சட்டி வீதம் கொடுக்க வேண்டும். ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் இடையில் எருவை வைப்பதால் இரண்டு செடிகளுக்கும் தேவையான சத்து கிடைத்துவிடும். இவ்வாறு செய்தால் மகசூல் அதிகரிப்பதோடு, செடியின், ஆயுளும் கூடும்.

மாதம் 500 கிலோ !
“சங்கரன் கோவில் பூ மார்க்கெட்டில்தான் சம்பங்கியை விற்பனை செய்கிறேன். தினமும் காலையில் பூவைப் பறித்ததும் வீட்டிலேயே வைத்து ஒரு கிலோ அளவில் தனித்தனி பாக்கெட்டுகளாக எடை போட்டு மார்க்கெட்டில் போட்டுருவேன்.  ஒன்றேகால் ஏக்கரிலிருந்து மாதம் சராசரியாக 500 கிலோ பூ கிடைக்கிறது. வருடத்திற்கு 6 ஆயிரம் கிலோ பூ கிடைக்கும். ஒரு கிலோ பூ சராசரியாக 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கணக்கில் 6 ஆயிரம் கிலோவுக்கு, 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக, வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும். விதைக்கிழங்கு  ஸ்பிரிங்லர் என்று ஆரம்பக்கட்ட செலவு 64 ஆயிரம் ரூபாய் ஆகும். இது நிரந்தர முதலீடு. அதற்கு பிறகு தொடர்ந்து வருடக்கணக்கில் வருமானம் எடுத்துக் கொண்டே இருக்கலாம் என்றார்.

வெற்றி மேல் வெற்றி
மற்ற விவசாயத்தில் ஒரு ஏக்கரில் எடுக்கும் மகசூலை, அரை ஏக்கரில் எடுப்பதை இலக்காக வைத்துக் கொண்டு, அதற்கான பயிர்கள் போட வேண்டும். சம்பங்கியை ஒரு முறை நட்டால் குறைந்தது 6 வருடத்திற்கு கணிசமான வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும். குறைவான முதலீட்டில் அதிக வருமானம் எடுக்கும் வழியைத் தெரிந்து கொண்டு அதை முறையாக செய்தாலே விவசாயத்தில் வெற்றி மேல் வெற்றிதான் என்றார்.


125 சென்ட் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்ய சுப்ரமணியன் சொல்லும் ஆண்டு செலவு – வரவு கணக்கு

விவரம்

செலவு

வரவு

நிரந்தர முதலீடு

 

 

உழவு

1,500

 

விதைக்கிழங்கு

25,000

 

ஸ்பரிங்லர் அமைக்க

37,500

 

மொத்தம்

64,000

 

நடைமுறைக் செலவு

 

 

தொழுவுரம்

40,000

 

வேலையாட்கள் கூலி

2,400

 

பூக்கள் மூலம் வரவு

 

5,40,000

மொத்தம்

42,400

5,40,000

நிகரலாபம்

 

4,97,600

உத்திகள் … தொழில்நுட்பங்கள் !
கூடுதல் மகசூல் தரும் இடைவெளி !
விதைக்கிழங்கை நடவு செய்வதற்கு முன், அமுதக்கரைசலில் அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வேர் அழுகல் நோய் தாக்காது. சிலர் ஓர் அடி இடைவெளியில் நடுகிறார்கள். ஆனால், இரண்டரை அடி இடைவெளி விடும்போது, மகசூல் கூடுவதோடு, செடிகளின் ஆயுளும் கூடும்.

வீட்டில் எடை… மார்கெட்டில் விலை !
வீட்டில் வைத்தே ஒரு கிலோ, இரண்டு கிலோ என்ற கணக்கில் தனித்தனி பாக்கெட்டுகளில் எடை போட்டு மார்கெட்டுக்கு கொண்டு செல்வதுதான் சுப்பிரமணியனின் பாணி. இதனால் மார்க்கெட்டில் கூட்ட நெரிசலில் எடை போடுவதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. சரியாக எடை போட்டார்களா இல்லையா என்ற சந்தேகம் கொள்ளவும் தேவையில்லை. மார்கெட்டுக்குள் நுழைந்ததும் அன்றைய விலை என்ன என்பதைத் தெரிந்து நாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். எடை போடுபவர்கள் ஒவ்வொரு பாக்கெட்டாக தராசில் வைத்து எடைபோடும் போது அவர்களுக்கும் சுலபமாக இருக்கும்.

தண்ணீரை சிக்கனப்படுத்தும் ஸ்பரிங்லர்!
வாய்க்கால் பாசனத்தில் தண்ணீர் அதிகம் செலவாகும். சொட்டு நீர்ப்பாசனத்தில் செலவாகும். சொட்டு நீர்ப்பாசனத்தில் செலவாகும் தண்ணீரை விடவும், 50 சதவிகிதம் குறைவாகத்தான் ஸ்பிரிங்லர் முறையில் செலவாகிறது. வாய்க்கால் பாசன முறையில் வேலையாட்கள் தேவை. இதில் வேலையாட்கள் மிச்சம். தவிர, சொட்டு நீர்க்குழாய் போல, அடைப்புப் பிரச்னைகள், ஸ்பிரிங்லரில் இல்லை.

முழுபலன் தரும் முக்கோண நடவு!
விதைக்கிழங்கை நேருக்கு நேராக நடவு செய்யாமல் ‘ஜிக்ஜாக்’ முறையில் நடவு செய்ய வேண்டும். நேருக்கு நேர் நடவு செய்யும் போது செடிகள் ஒன்றோடொன்று மோதி வளர்ச்சி குறையும். முக்கோண நடவு செய்யும் போது, நிலம் முழுவதும் செடிகள் அடர்ந்து வரும். பாசனத்திற்கும் தடை இருக்காது.

நோய் தாக்குதல் நோ…நோ!
இயற்கை உரம் போடுவதால் கிழங்கு அழுகல், வேர்ப்புழுத் தாக்குதல், மொட்டுத் துளைப்பான் போன்ற சேதாரங்கள் எதுவும் வருவதில்லை. சம்பங்கிப் பூவை இயற்கை முறையில் பயிரிடும் போது பூக்களும் தரமாக இருக்கும். பூவின் நுனியில் சிவப்பு நிறம் மிகக் குறைவாக காணப்படும். செயற்கையில் பயிரிடும் போது அதிகமான சிவப்பு நிறம் தெரியும். இயற்கை முறை சம்பங்கியா.. ரசாயன உரத்தில் விளைந்ததா.. என்பதை இதை வைத்துத்தான் கண்டுபிடிப்பார்கள்.

 அகத்தி வேலியால் கிடைக்கும் உபரி வருமானம்!
சம்பங்கி வயலைச் சுற்றி அகத்தி நடவு செய்திருக்கிறார், சுப்பிரமணியன்.  அதுபற்றிப் பேசியவர், “ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் காத்து அடிக்கும் போது தண்ணீர் பரவலாக வீணாகும். அதில்லாமல் மயில் மாதிரியா பறவைகள் வராமல் இருப்பதற்காகவும் அகத்தியை ஒரு அடி இடைவெளியில் வேலி மாதிரி நட்டிருக்கிறேன். நான் வளர்க்கும் ஆடுகளுக்கு இந்த அகத்தியைத்தான் தீவனமாக கொடுக்கிறேன். அதனால் ஆடுகள் மூலமாகவும் ஒரு வருமானம் கிடைக்கிறது என்றார்.

தொடர்புக்கு
சுப்ரமணியன், செல்போன் : 9790584942
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 10.01.15 www.vikatan.com

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015