முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

பணம் வளரும் பண்ணைக் குட்டை !
மீன் வளர்ப்பில் ஆண்டுக்கு ரூ.1,75,000
வளமான நிலத்தில் கூட வருமானம் எடுக்க முடியாமல் பலர் திணறும் சூழ்நிலையில்… பனற்றுக் கிடந்த நிலத்தில், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உழைத்து, மீன் வளர்ப்பு மூலமாக நல்ல வருமானம் பார்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள பாப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி.

பாதை காட்டிய பசுமை விகடன் !
எனக்கு நான்கு ஏக்கர் நிலம் இருக்கு. கரும்புதான்  முக்கிய வெள்ளாமை. என் நிலத்தில் கொஞ்சம் தாழ்வான பகுதி. அதில் அதிகளவு தண்ணீர் ஊறிக்கிட்டே இருந்தது. அதனால் அந்த நிலத்தில் நெல் விதைத்தேன். அறுவடை சமயத்தில், மயில்கள் வந்து பெருமளவு நெல்லை காலி பண்ணிவிட்டது. அதனால் அந்த நிலத்தில் வெற பயிர் எதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தேன். ‘பசுமை விகடன்’ வெளிவந்ததிலிருந்து, தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். என்னதான் 30 வருடத்திற்கு மேல் நான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தாலும், இந்த எட்டு வருடத்தில் பசுமை விகடன் மூலமாகத்தான் அதிகம் கத்துக் கொண்டிருக்கிறேன். இயற்கை விவசாய முறைகளை நிறைய தெரிந்து கொண்டேன். ஒரு காலத்தில் நஷ்டத்தில் போய்க்கிட்டிருந்த என்னுடைய பண்ணையம் இன்றைக்கு லாபத்துடன் இயங்குவதற்கு காரணம், இந்த புத்தகத்தில் படித்த பண்ணைக் குட்டை மீன் வளாப்புப் பற்றிய செய்திதான் என்றார் பெரியசாமி.

பயன் கொடுத்த பண்ணைக் குட்டை !
அரசாங்கத்துடன் இலவசப் பண்ணைக் குட்டை திட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன் இங்கு குட்டை வெட்டினோம். இது தண்ணீர் அதிகமாக ஊறும் இடம் என்பதால், ஊறும் தண்ணீரை பாசனத்திற்குப் பயன்படுத்திக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் பசுமை விகடனில் பண்ணைக் குட்டையில் மீன் வளர்க்கலாம் என்ற தகவலைப் படித்தேன். அதன் பிறகு தான் 10 சென்ட் நிலத்தில் மீன் வளர்க்க ஆரம்பித்தேன். தண்ணீர் ஊறிக்கிட்டே இருப்பதால் தண்ணீர் பற்றிய பயமே இல்லை. அதிக தண்ணீர் ஊறினாலும் குழாய் மூலமாக தோட்டத்திற்குப் போய்விடும். மேட்டூர் டேமில் இருக்கும் மீன் விதைப் பண்ணையில் இருந்து ரோகு, கெண்டை, மிர்கால் ரகங்களில் ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, குட்டையில் விட்டேன். இதற்கு முந்நூறு ரூபாய் செலவானது. இப்போது மீன் எல்லாம் நன்றாக வளர்ந்திருக்கு. தேவைப்படுறவங்க தோட்டத்திற்கே வந்து வாங்கி கொண்டு போறாங்க என்றார்.

மூன்று மாதங்கள் கவனம் !
பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பில் முதல் மூன்று மாதங்களுக்க மிக அதிக கவனம் தேவை. மீன்கள் சிறியதாக இருப்பதால், அவற்றைச் சாப்பிடுவதற்காக மீன்கொத்தி, நீர் காகம், கொக்கு மற்றும் நீர்வாத்து ஆகியவை அடிக்கடி வரும். அவை தண்ணீரில் உள்ள மீன்களைச் சர்ப்பிட்டு விடும். முதல் மூன்று மாதங்கள் வரை பறவைகளின் நடமாட்டத்தை கவனித்து விரட்ட வேண்டும். சுற்றி மீன் வலை வேலி அமைத்தால், பாம்புகளிடமிருந்தும் மீன்களைக் காப்பாற்றி விடலாம்.

மீன்கள் அதிக எடை வந்தால்தான் நல்ல லாபம் கிடைக்கும். அதனால், தினமும் சரியான அளவில் தீவனங்களைக் கொடுத்து வரவேண்டும். குஞ்சுகளை விட்ட முதல் மூன்று மாதங்களுக்கு… தினமும் கடலைப் பிண்ணாக்கு 100 கிராம் மற்றும் தவிடு 50 கிராம் ஆகியவற்றை தண்ணிர் சேர்த்து புட்டுப் பதத்தில் பிசைந்து, காலை எட்டு மணிக்கு மிதக்கும் உணவுத் தட்டில் வைத்து விட வேண்டும். அதோடு, தினமும் ஒரு கூடை பசுஞ்சாணத்தைப் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் தூவி விட வேண்டும். நான்காவது மாதத்திலிருந்து மகசூல் வரை… தினமும் மக்காச்சோள மாவு 100 கிராம், 50 கிராம் தவிடு எனப் பிசைந்து தீவனமாகக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மாட்டுச் சாணத்தையும் தூவி வர வேண்டும். மார்க்கெட்டுகளில் இலவசமாகக் கிடைக்கும் முட்டைக்கோஸ் தழைகள் மற்றும் காலிஃபிளவர் தண்டு, பலவித கீரைகள் ஆகியவற்றையும் மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்.

கோடை காலத்தில் உதவும் ஆகாயத்தாமரை!
மே-ஜீன் மாதங்களில் கடுமையான வெயில் காரணமாக சில பண்ணைகளில் மீன்கள் இறக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க… ஆகாயத்தாமரையை கொஞ்சம் பறித்து குளத்தில் போட வேண்டும். அவை உடனே வளர ஆரம்பிக்கும் இச்செடியின் அடியில் மீன்கள் பதுங்கி வெப்பத்தை சமாளித்துக் கொள்ளும். தவிர ஆகாயத் தாமரை இகைளை மீன்கள் விரும்பி சாப்பிட்டுக் கொள்கின்றன. ஓர் ஆண்டு  முடிந்ததும், வளர்ந்த மீன்களை விற்பனை செய்துவிட்டு, குட்டையைச் சுத்தம் செய்து மீன் குஞ்சுகளை வாங்கி விடலாம்.

அதிபட்ச செலவு ரூ.20 ஆயிரம்!
“10 சென்ட் குட்டையில் ஆயிரம் மீன்கள் விட்டால், பறவை தின்னது, செத்தது, சேதாரமானது போக… 750 மீன்கள் இருக்கும். ஒரு வருடத்தில் ஒவ்வொரு மீனும் சராசரியாக  இரண்டு கிலோ எடையில் இருக்கும். ஒரு கிலோ 130 ரூபாய் என்று தோட்டத்திற்கே வந்து வாங்கி கொண்டு போகிறார்கள். மொத்தமாக விற்பனை செய்யும் போது 1,500 கிலோவுக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் செலவு போக… ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும் என்றார்.

ஆற்றுப்பாசன நிலங்களில் நீர் ஊறும் பகுதிகளில் இந்த பண்ணைக் குட்டை மீன் வளர்பைச் செய்யலாம். இது மூலமாக குறைந்த செலவில் நிறைவான லாபம் பார்க்க முடியும். என்னைப் பார்த்து, எங்க மாவட்டத்தில் பல விவசாயிகள் பண்ணைக் குட்டையில் மீன் வளர்பை ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி பண்ணைக் குட்டையைப் பராமரித்தாலே போதும்.. வருடக் கடைசியில் கை நிறையக் காசு பார்க்கலாம் என்றார், மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு
பெரியசாமி,
செல்போன் , 99763 02584
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.02.3015 www.vikatan.com

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015