Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை
மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: நெல்

நெல் சாகுபடியில் நடவு முறையை நாம் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வந்தாலும் அதிகமான நீர்த்தேவை, நடவுக்குத் தேவையான அதிக கூலி ஆட்கள் மற்றும் வயலைப் பதப்படுத்துவதற்கான அதிக சக்தி போன்ற காரணங்களால் சமீப காலமாக பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் சாகுபடி செய்வதையே விரும்புகின்றனர். மேலும் நடவு நெல் சாகுபடி முறையில் வயலில் நீரைத்தேக்கி வைப்பதற்காக அதிகமாகத் தொழியடிப்பதின் காரணமாக மண்ணின் கட்டமைப்பு சிதைக்கப்படுவதோடு மட்டுமின்றி மேல் மற்றும் அடிமண் இறுக்கத்திற்கும் வழிவகை செய்கிறது. இதனால் நெல்லிற்குப் பிறகு சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. எனவே நேரடி நெல் விதைப்பு முறையானது, நடவு நெல் சாகுபடிக்கு ஒரு சிறந்த மாற்று முறையாகும்.

தமிழ்நாட்டில் தற்பொழுது பருவமழை பரவலாக தொடங்கியுள்ள சூழ்நிலையில் விவசாய பெருங்குடி மக்கள் புரட்டாசி பட்டத்தில் நேரடி நெல் விதைப்பையே தேர்வு செய்து மானாவாரியில் பயிரிடுகின்றனர். பெரும்பான்மையான விவசாயிகள் புரட்டாசி பட்டத்தில் நெல்லை சாகுபடி செய்வதற்கு டிராக்டர் இயந்திரம் கொண்டும், நாட்டுக்கலப்பையைக் கொண்டும் விதைப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு விதைப்பு செய்வதற்கு கால்நடைகள் மற்றும் கூலித் தொழிலாளர்களையே பெரும்பாலும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் கால்நடைகள் மற்றும் கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக காலம் தாழ்த்திப் பயிர் செய்வதால் நெல்லை வறட்சி தாக்கும் சூழ்நிலை உருவாவதுடன், மகசூல் குறைவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. இம்முறையில் நெல்லை சாகுபடி செய்வதால் அதிகமான விதைகள் தேவைப்படுவதோடு மட்டுமின்றி, முறையற்ற பயிர் இடைவெளியின் காரணமாக உழவியல் நடைமுறைகளை சுலபமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதில்லை. மேலும் அதிகமான பயிர்நெருக்கத்தின் காரணமாக பயிர்களுக்கிடையே நீர், உரம் மற்றும் சூரிய ஒளிக்கான போட்டி ஏற்பட்டு, மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

மேற்கூறிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செட்டிநாட்டில் நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் பயிர் செய்வது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதைப்புக்கருவியின் மூலம் குறைந்த செலவில், குறைந்த வேலையாட்களைக் கொண்டு ஓரு ஏக்கர் நிலத்தை 45 நிமிடங்களில் விதைப்பு செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.500/- வீதம் மிச்சப்படுத்தலாம். இக்கருவியைக் கொண்டு பயிர் செய்யும் போது சுமார் 40 மூட்டை விதைகளை நாம் மிச்சப்படுத்த முடியும். இக்கருவியைக் கொண்டு விதைக்கும் போது பயிர்களுக்கிடையே சரியான இடைவெளி (25 x10 செ.மீ.) பராமரிக்கப்படுவதால் பயிர் போட்டியைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பயிர்களுக்கு சீரான விகிதத்தில் சத்துகள் கிடைக்க வழிவகை செய்வதுடன், அதிக மகசூல் கிடைக்கவும் உதவுகின்றது. இம்முறையால் வயலில் இருந்து குறைந்த மீத்தேன் வாயு வெளியீடு, குறைந்த வேலையாட்கள் தேவை மற்றும் பயிர்கள் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகி நடவுப் பயிரைக் காட்டிலும் அதிக மகசூலைத் தருகிறது.

நேரடி நெல் விதைப்பு : ஓர் ஒப்பீடு

விபரம் கைவிதைப்பு நாட்டுக்கலப்பை கொண்டு விதைத்தல் விதைப்பு கருவி மூலம் விதைத்தல்
ஆகும் நேரம் 1 மணி நேரம் 5 மணி நேரம் 45 நிமிடங்கள்
விதையளவு 35 கிலோ 35 கிலோ 15 கிலோ
தேவைப்படும் ஆட்கள் 1 2 1
செலவு(ரூபாய்) 1000 1200 600

நெல் சாகுபடியில் நடவு முறை : ஓர் ஒப்பீடு

விபரம் நடவு முறை இயந்திர நடவு முறை திருந்திய நெல் சாகுபடி
ஆகும் நேரம் 8 மணி நேரம் 2 மணி நேரம் 8 மணி நேரம்
விதையளவு 30 கிலோ 15 கிலோ 3 கிலோ
தேவைப்படும் ஆட்கள் 16 2 12
செலவு(ரூபாய்) 3000 3500 2100

நேரடி நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு பெரும் சவாலாக இருப்பது களைகளின் எண்ணிக்கை, களைகளின் வகைகள் மற்றும் காலத்தைப் பொறுத்து களை விதையும் நெல்விதையும் சேர்ந்து ஒரே சமயத்தில் வளர்தல், களைகளானது உரச்சத்துக்கள், ஈரப்பதம், சூரிய ஒளி மற்றும் இடைவெளி ஆகியவற்றிற்காக நெற்பயிருடன் கடுமையாகப் போட்டி போன்றவற்றால், நேரடி நெல் விதைப்பில் 30-55 சதவீதமும், நேரடி புழுதிக்கால் விதைப்பில் 50-80 சதவீதமும், மகசூல் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி தானியத்தின் தரமும் பாதிக்கப்படுகின்றன. நடவு வயலைப் போலின்றி, நேரடி நெல் விதைப்பில் நடவு நிலத்தை பண்படுத்தாமல் விதைகளை அப்படியே விதைப்பதால் களைகளின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படும். எனவே நேரடி நெல் விதைப்பில் அதிக மகசூலுக்கு விதைத்த 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் களைகள் இன்றி பயிரைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.


நேரடி நெல் விதைப்பில் விதைத்த 3 முதல் 8 நாட்களுக்குள் ஏக்கருக்கு பிரிட்டிலாகுளோர் 175 கிராம் அல்லது பென்டிமெத்தலின் 400 கிராம் வீதம் 25 கிலோவை மணலுடன் கலந்து வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது தெளித்தால் அகன்ற இலை களைகள் மற்றும் புல் வகைகளை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். மேலும் நேரடி நெல் விதைப்பில் விதையின் முளைப் பகுதியில் களைக்கொல்லி படும்பொழுது சிறிது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே களைக்கொல்லியுடன் பாதுகாப்பான்(safener) மருந்தை கலந்து பயன்படுத்துவது சிறந்த பயனை அளிக்கும். மேலும் விதைத்த நட்ட 25 வது நாளில் அகன்ற இலைகளையுடைய களைகளைக் கட்டுப்படுத்த 2,4-டிஇஇ சோடியம் உப்பை ஏக்கருக்கு 200 கிராம் வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பயிர் வளர்ந்த 25-30 வது நாளில் பினாக்சோ புரோப்பி ஈத்தைல் களைக்கொல்லியை ஏக்கருக்கு 20 கிராம் வீதம் தெளித்தும் புல் வகைகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும் பயிர் வளர்ந்த15-20 வது நாளில் ஏக்கருக்கு குளோரிமுரான் + மெட்சல்புரான் மீத்தைல் (ஆல்மிக்ஸ்) 15 கிராம் அல்லது பிஸ்பைரிபேக் சோடியம் 10 கிராம் அல்லது சைக்கலோ பாப்பி பியூட்டைல் 50 கிராம் அல்லது அசிம்சல்ப்யூரான் 15 கிராம் வீதம் ஆகிய ஏதாவதொரு களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானைக் கொண்டு சீராக தெளித்து அகன்ற இலைக்களைகள், கோரை வகைகள் மற்றும் புல் வகைகளை சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்.

பெருகி வரும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக இடுபொருட்கள் செலவினை குறைக்க வருங்காலத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி செய்யம் பரப்பளவு மேலும் அதிகரிக்கும் என்பது திண்ணம். மேற்கூறிய தொழில்நுட்பங்களை செவ்வனே கையாண்டால் இந்த புரட்டாசி பட்டத்தில் நெல்லில் அதிக மகசூல் பெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆதாரம்:

பெ.கதிர்வேலன் மற்றும் சி.சுவாமிநாதன்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்,
செட்டிநாடு – 630102, சிவகங்கை.

 
Fodder Cholam