வனவியல் தொழில்நுட்பங்கள்

தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள்

தைலமரம் (Eucalyptus spp)

Industrial Agroforestry      Industrial Agroforestry

காகிதக் கூழ் வளர்ப்பு முறைகள்

யூகலிப்டஸ் மிர்டேசியே (Myrtaceae) குடும்பவகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடயவை. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை.
            வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தரமான, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக மகசூல் தரும், சிறந்த மரங்களை ஆராய்ந்து வீரிய ரக கூழ்மரக் கன்றுகளை குளோனல் முறையில் உற்பத்தி செய்துள்ளது.

தாவரப்  பண்புகள்
தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் ( 20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்டது. இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இம்மரத்தின் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்மையும் உடையவை. இம்மரமானது ஜீலை - ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும். பருவத்திற்கு வரும்.

மர வளர்பியல் பண்புகள்
தைலமரம் பல்வேறு வகையான மண் மற்றும் காலநிலைகளுக்கேற்ப வேகமாக வளரக்கூடிய, அதிக மறுதாம்பு வாய்ப்புள்ள மர வகையாகும். தைல மரம் வறட்சிதாங்கும் தன்மையுடையதாக அறியப்பட்டாலும் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஆண்டு மழையளவு குறைந்த பட்சம் 800 மி.மீ. தேவை. இம்மரமானது வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக்கூடியது.

நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்

  • மண்ணின் ஆழம் 1.0 மீ - க்கு குறைவாக உள்ள நிலத்தைத் தவிர்க்க வேண்டும்
  • அதிக உவர் மற்றும் களர் நிலங்களைத் தவிர்க்க வேண்டும்
  • மண்ணின் அமிலகாரத்தன்மை 6 லிருந்து 8 வரை இருக்க வேண்டும்
  • அதிக மண் அரிப்பு மற்றும் நீர் தேக்க நிலங்களைத் தவிர்க்க வேண்டும்

நாற்றங்கால் வளர்ப்பு முறைகள்
தைல மர நாற்றுக்களை விதைகள் மூலமாகவும், விதையில்லா இனப்பெருக்க முறையில் ஒரு (Vegetative propagation)வழிமுறையான குச்சிகள் (கன்றகப் பெருக்கம் - cloning) மூலமாகவும் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ விதையில் சராசரியாக 6,42,000 வீரிய விதைகள் இருக்கம். ஆனால் தற்போது கன்றகப் பெருக்க (cloning) முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளே அதிக மகசூல் தருவதால், கன்றகப் பெருக்கக் கன்றுகளை மண்ணின் தன்மையறிந்து நடவு செய்வது நல்லது.

கன்றகப் பெருக்க (cloning) உற்பத்தி
ஒரே மரத்திலிருந்து பெறப்பட்ட ஒத்த மரபுப் பண்புகளைக் கொண்ட நாற்றுக்களை கன்றகப் பெருக்க (cloning) நாற்றுக்கள் என்று கூறுகிறோம். மிகச் சிறந்த, அதிக உற்பத்தித் திறன் கொண்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு, நிலத்திலிருந்து சுமார் 30 செ.மீ உயரத்தில் வெட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. அப்படி வெட்டப்பட்ட மரத்திலிருந்து மறுதாம்புகள் (coppice)  வளர ஆரம்பிக்கும். 45 முதல் 60 நாட்கள் ஆனபிறகு, அந்த மறுதாம்புகளை வெட்டியெடுத்து அதன் குச்சித்தண்டுகளை இண்டோல்பியூட்ரிக் அமிலம் (IBA) கலந்த பவுடரில் தடவிப் பின்னர் பசுமைக்குடிலில் (green house) வளா்க்கப்படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் நாற்றுக்கள் 15-20 நாட்களில் வேர்கள் விட்டு, 45 ஆம் நாள் முதல் முழுமையான நாற்றுகளாக தயாராகிவிடுகின்றன. பின்னர் 90 நாட்கள் வரை கன்றகப் பெருக்க (cloning) நாற்றுக்களை திறந்தவெளி நாற்றங்காலில் வைத்துப் பராமரித்துப்பின் நடவுக்கு பயன்படுத்தலாம்.

சாகுபடி முறைகள்
தைல மரங்கள் குறுகிய கால சுழற்சி முறைகளான 4 முதல்  6 ஆண்டுகள் அறுவடைமுறை தொழிற்சாலைத் தேவைகளுக்குக் குறிப்பாக, மரக்கூழ், எரிபொருள் தயாரிப்புக்காக வளர்க்கப்படுகின்றது. முதலில் நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். பருவ காலங்களில் தைலமர நாற்றுக்களை 3 மீ X 15 மீ  அல்லது 3 மீ X 2 மீ  இடைவெளியில்  45  செ.மீ. X 45 செ.மீ. X 45 செ.மீ.அளவுள்ள குழிகளில் நட வேண்டும். மேலும் நாற்றுகளை நடும் போது கரையான் தாக்குதலைத் தடுக்க 5 கிராம் 10 கிராம் வரை போரேட் இடப்பட்ட குழிகளில் இடவேண்டும். நாற்றுக்களை குழிகளில் நடும்போது 1-2 கிலோ இயற்கை எருவுடன் 25 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கலந்த உரம் இடவேண்டும். தவிர ஒவ்வொரு குழியிலும் குப்பை உரத்துடன் 25 கிராம் டிரைகோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் கலந்து இடுவதால் வேரழுகல், வேர் வாடல் நோய்களிலிருந்து, நடப்பட்ட கன்றுகளைப் பாதுகாக்கலாம். முதல் இரண்டு ஆண்டுகளில் பருவமழை இல்லாத காலத்தில் நீர்ப்பாசனம் அவசியம். மேலும் இரண்டு முதல் மூன்று முறை களைகளை அகற்ற வேண்டும்.

நடவு செய்ய ஏற்ற காலம்

  1. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் ஜீன் ஜீலை முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்ய மிகவும் சிறந்த காலமாகும். பருவகாலத் தொடக்கத்தில் நாற்றுகளை நடுவது தொடாந்து வரும் பருவகால மழையை நாற்றுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு புதுவேர் விட்டு வளர்வதற்கு ஏதுவாகும்.
  2. கோடைக்காலத்தில் நாற்றுகளை நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். நல்ல நீர்ப்பாசன வசதி உள்ள நிலையில் நாற்றுகளை எந்த காலத்திலும் நடலாம். குளர்காலத்தில் நாற்றுகளின் வளர்ச்சி குறைவாக இருக்குமாதலால் அக்காலத்தில் நடவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  3. மரக்கன்றுகள் பட்டுப்போன இடங்களில் ஒரு மாத காலத்திற்குள் அல்லது உடனடியாக புதிய கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

குளோனிங் முறையில் நாற்றுக்கள் உற்பத்தி

Pulpwood Pulpwood
   
Pulpwood Pulpwood
உயர் தர குளோனிங் நாற்றுகள் - காகித ஆலை, கரூர்
Pulpwood Pulpwood

உயர்தர மரங்களைத் தேர்வு செய்தல்

Pulpwood Pulpwood

குளோனிங் முறையில் வனத்தோட்டங்களை உருவாக்குதல்

Pulpwood Pulpwood
தைலமரத்தில் ஊடுபயிர்
Pulpwood Pulpwood

பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும் (Pest and disease)

வ.எண். பொதுவான பூச்சி வகைகள் கட்டுப்படுத்தும் முறைகள்
01. தண்டு துளைப்பான் கம்பியின் மூலம் தண்டு துளைப்பான் புழுவை வெளியே எடுத்து அப்பகுதியில் 10 மி.லி. மோனோ குரோட்டோபாஸ் பஞ்சில் நனைத்து தண்டு ஒத்தடமாக  (Stem Padding) கட்டிவிட வேண்டும்
02. கழலைக் குளவி இமிடாகுலோபிரிட் (Imidacloprid) ஒரு லிட்டர் நீரில் 0.5 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
03. கரையான் குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து பயிர்களின் மீது தெளிப்பதோடு வேர்பகுதிகளிலும் ஊற்ற வேண்டும்

நோய்கள் : தைல மரங்களைத் தாக்கும் முக்கிய நோய்கள் வேரழுகல்,  தண்டு கொப்புள நோய், இளஞ்சிவப்பு தண்டழுகல் மற்றும் நாற்றுக்களைத் தாக்கும் பழுப்பு நோய் முதலியனவாகும்.

வ.எண். நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள்
1. துரு நோய் நனையும்  கந்தகம் 0.25% தெளிக்க வேண்டும்
2. இலைக்கருகல் மாங்கோசிப் (Moncozeb) 0.25% தெளிக்க வேண்டும்
3. தண்டு கொப்புள நோய்  பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்டு அல்லது சுரண்டி எடுக்கப்பட்டு போர்டோ களிம்பு (Bordeaux paste)  தடவப்பட வேண்டும்
4. நாற்று அழுகல் காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25%  நாற்றின் வேர்ப்பாகம் நனையும் படி ஊற்ற வேண்டும்
    நாற்று நடும் குழிகளில் 25 கிராம் டிரைகோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் இடவேண்டும். கார்பென்டாசிம் 0.1%  கரைசலால் வேர்பாகம் முழுவதும் நனையும் படி ஊற்ற வேண்டும்

மகசூல்
நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைலமரம் அறுவடை செய்யப்படும். நல்ல மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000/- வரை வருவாய் பெறலாம்.

  • இம்மரம் எளிய கனமான கட்டுமானப்பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும் குச்சிகளாகவும் பயன்படும் .
  • யூ டெரிடிகார்னிஸ் வகை தைலமரங்கள் பதபடுத்தப்பட்ட பிறகு கதவுகளின் நிலைகள் , சன்னல், கதவுகள், மரச் சாமான்கள் , அலமாரிகள் , கைப்பிடிகள், (அட்டைப் ) பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன .
  • இலைகளிலிருந்து பெறப்படும் நீர்மம் பூச்சி எதிர்ப்புத்தன்மையுடையதால் உயிரியல் பூச்சி எதிர்ப்புகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

தைலமரத்தின் வணிகப்பயன்பாடு

  • தைல மரங்கள் வேகமாக வளரக்கூடிய மர வகையாகும். இம்மரம் காகிதம், காகிதக்கூழ், துகள் அட்டைகள் மற்றும் மொத்த அட்டைகள் தயாரிக்கும் பணிகளுக்கும் பெரிதும் உகந்த மரம்
  • இம்மரம் எரிபொருள், கரித்துண்டுகள் தயாரிக்கப்பயன்படும்
  • இம்மரம் எளிய கனமான கட்டுமானப்பணிகளுக்கும், இரயில்வே தண்டவாளக் கட்டைகள், பாலங்கள் கட்டுவதற்கும் குச்சிகளாகவும் பயன்படும்
  • யூ டெரிடிகார்னிஸ் வகை தைலமரங்கள் பத்ப்படுத்தப்பட்ட  பிறகு கதவுகளின் நிலைகள், சன்னல் கதவுகள், மரச்சாமான்கள், அலாமாரிகள், கைப்பிடிகள், (அட்டைப்) பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • இலைகளிலிருந்து பெறப்படும் நீர்மம்,  பூச்சி எதிர்ப்புத்தன்மையுடையதால் உயிரியல் பூச்சி எதிர்ப்புகள் தயாரிக்கப்பயன்படுகின்றன
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016