தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: வேங்கை

வேங்கை மரம்

தேக்கிற்கும், தோதகத்திற்கும் அடுத்து தரமான மரமாக கருதுவது வேங்கை ஆகும். நீரிழிவு நோயுள்ளோர் வேங்கை மரக்குவளையில் நீர் அருந்தினால் குணம் பெறலாம். வேங்கை மரப் பிசின் வயிற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
இம்மரம் தாழ்ந்த குன்றுகளிலும் மலை ஒட்டிய சமவெளிகளிலும், நல்லவளமான, ஆழமான செம்மண் மற்றும் செம்புரை மண்ணிலும் நன்கு வளரும். 15-18 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையது.
வேங்கை மரம் ஆண்டிற்கு சுமார் 750 மில்லி மீட்டர் அளவிற்கு மேல் மழைகிடைக்கும்  பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சிமலையோர பகுதிகளுக்கு ஏற்ற மரமாகும். கடற்கரை மணல் பகுதி இம்மரத்திற்கு அறவே உகந்ததல்ல.
தேக்கைப் போன்றே நெருக்கி நட்டு பின்னர் கலைத்திடலாம். அப்போது தான் இடைப்பட்ட காலத்தில் வருவாயும் கிடைக்கும். நன்கு வளரச்சியடைந்த இம்மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.

வேங்கை மரப் பட்டை
வேங்கை மர இலைகள்
வேங்கை மர மலர்கள்


விதைநேர்த்தி செய்தல்

வேங்கையை பயிரிட பல வழிமுறைகள் உள்ளன. நேரடியாக விதையை விதைக்கலாம். நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடவு செய்யலாம். நாற்றுக்குச்சிகள் தயாரித்தும் நடலாம். இம்மூன்றில் நீண்ட ஆணிவேர் உருவாகி மரக்கன்று நன்கு வளர நேரடி விதைப்பு அல்லது நாற்றுக்கள்  மூலம் மரம் வளர்க்கும் முறையை கடைபிடிப்பதே சிறந்ததாகும்.
மார்ச் மாதங்களில் மரத்தில் நெற்றுக்கள் இருக்கும். ஒரு கிலோ எடையில் 1600-2000 நெற்றுக்கள் கிடைக்கும். 4.5 செ.மீ நீளமும், 3.5 செ.மீ அகலமும் கொண்ட ஓர் விதை கொண்ட தட்டையான நெற்றுக்கள் நீண்ட நாட்கள் மரத்திலேயே இருக்கும். ஆரம்பத்தில் பச்சை நிறத்தில் காணப்படம் நெற்றுக்கள் பின்னர் பழுப்பு நிறமாக மாறும். மரத்திலிருந்து உதிர்ந்து காற்றிலே பறந்து செல்லக் கூடிய தன்மையுடையது. எனவே நெற்றுக்கள் முதிர்ந்தவுடன் மரத்திலேயே நெற்றுக்களை சேகரித்து விட வேண்டும்.

நாற்றுகள் உற்பத்தி

10 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 30 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தியை மணலும், எருவும் வண்டலும் கலந்து அமைக்க வேண்டும்.
நெற்றை விதைக்கும் பொழுது நீரிலோ (அல்லது) சாணக் கரைசலிலோ இரண்டு நாட்கள் ஊற வைத்து 20 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். 40-90% மளைப்புக் கிடைக்கும்.

நாற்றுக்கள் வளர்ந்ததும், தாய்ப் பாத்தியிலிருந்து இள நாற்றுக்களை எடுத்து 16 x 30 செ.மீ அளவுள்ள பாலீதின் பைகளில் நட்டு வளர்க்க வேண்டும். சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு நாற்றுக்கள் நடுவதற்கு ஏற்ற முதிர்ச்சியடைந்துவிடும். நாற்றுக்குச்சிகள் தயாரிக்க ஒரு வருட வளர்ச்சியுடைய நாற்றுக்களில் பென்சில் பருமனுள்ள நாற்றுக்குச்சிகள் எடுத்து பாலிதீன் பைகளில் நட்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்

நடவு

தேக்கு நடுவது போன்று 4மீ x 4 மீ இடைவெளியில் 1 ஏக்கருக்கு 250 நடவு செய்யலாம். பின்னர் வளர்ந்து வரும் நிலையில் சுமார் 5 அல்லது டூ ஆண்டுகள் கழித்து வளர்ச்சி குறைவாக உள்ள மரங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள மரங்களை அகற்றி சிறு மரச்சாமான்கள் செய்வதற்கு விற்றிடலாம். இவ்வாறு நீக்கப்பட்ட மரங்கள் போக சுமார் 200 மரங்கள் அறுவடை செய்யும் காலம் வரை நன்கு பராமரித்து வரவேண்டும். அவ்வப்போது நோயினால், இயற்கை இடர்பாடுகளால் சேதப்படும் கிளைகளை அகற்றி பராமரித்து வரவேண்டும். ஆரம்பத்தில் வளர்ச்சி நிதானமாக இருக்கும். பின்னர் இரண்டாம் வருட முடிவில் சுமார் 1.7 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து விடும். சில சமயம் கடும் வறட்சி தோன்றினால் இலையுதிர்ந்து பட்டுப் போனது போன்று காட்சியளிக்கும். பின்னர் மழை கிடைத்ததும் துளிர்த்து விடும். ஓங்கி உயாந்து வளரும் பொழுது சூரிய ஒளித் தேவை அதிகமாகும். எனவே பிறமரங்களின் நிழல் விழாமல் கவனிக்க வேண்டும்.


தாய் படுக்கை நாற்றங்கள்

மகசூல்

10 ஆண்டுகளில் சுமார் 100 செ.மீக்கு குறையாத சுற்றளவுள்ள மரம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கரில் வளர்க்கக்கூடிய 250 மரங்களில் இடைப்பட்ட காலத்தில் கலைத்து எடுக்கப்பட்ட மரங்கள் போக இறுதியில் சுமார் 200 மரங்கள் கிடைக்கும். இம்மரங்களிலிருந்து சுமார் 1 மரத்தில் ரூ.5,000/- வீதம் 200 மரங்களிலிருந்து ரூ.10,00,000 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in


Updated on :April, 2015

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015