இதர மர வகைகள் ::முள்ளில்லா மூங்கில்

முள்ளில்லா மூங்கில் (Thornless Bamboo)


மூங்கில் மரம்

மூங்கில் புல் வகையை சார்ந்த ஒர தாவரமாகும். “பச்சைத்தங்கம்” என அழைக்கப்படும் மூங்கில் உலகில் சுமார் 1400 இனங்கள் உள்ளன. அவற்றில் 136 இனங்கள் (Species) இந்தியாவில் உள்ளன. மூங்கில்களில் சில இனங்கள் ஒரே நாளில் சுமார் 30 செ.மீ வரை வளரக்கூடிய தன்மையுடையது. தமிழ்நாடடில் பெருவாரை (பொந்து மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என்ற இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இவைளில் முட்கள் ஒன்றோடு ஒன்று பின்னி காணப்படுவதால், விவசாயிகள் வெட்டி எடுப்பதற்கு மிகுந்த சிரமும், அதிக செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். முள்ளில்லா மூங்கில்களில் இப்பிரச்சினைகள் இல்லை. தமிழ்நாடு வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவு தமிழ்நாட்டின் வெவ்வேறு மண்வகை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு உகந்த நான்கு முள்ளில்லா மூங்கில் இனங்களை பல சோதனைகள் மூலம் கண்டறிந்து அவைகளை விவசாயிகள் லாபகரமாக பயிர் செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

அவைகள்

  • பேம்பூஸா வல்காரிஸ் ( Bambusa vulgaris)
  • பேம்பூஸா நூட்டன்ஸ் (Bambusa nutans)
  • பேம்பூஸா டுல்டா (Bambusa tulda)
  • பேம்பூஸா பல்கூவா (Bambusa balcooa)

மேலே கண்ட இனங்களில் பேம்பூஸா டுல்டா வகை மூங்கில் ஓரளவு களர் மண்ணுள்ள நிலங்களிலும் வளர்க்கலாம். இவ்வகை மூங்கில்கள், குறைந்த நீர் மேலாண்மையிலும் நன்றாக வளர்ந்து பயன்தரும். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் வசதிசெய்து வளர்ப்பதன் மூலம் அதிக மகசூலும் வருமானமும் ஈட்டலாம்.

மூங்கில் மரம்
மூங்கில் மர கன்றுகள்
மூங்கில் மரத் தோட்டம்

நாற்றங்கால்

இளம் மூங்கில்களிலிருந்து 10 முதல் 15 செ.மீ. நீளமுள்ள இரண்டு கணுவுள்ள கரணைகளைச் சேகரித்து அவற்றின் கீழ்முனையில் இண்டோல் பியூட்டிரிக் அமிலம் (IBA) 2000 பி.பி.எம். வேர் ஊக்கி நொதியினை தடவி, அந்த கரணையை 16 x30  செ.மீ அளவுள்ள பாலிதீன் பையிலுள்ள மண்ணிற்குள் நட்டு பின் ஈரப்பத கூடாரத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். கரணையின் மேல் வெட்டுப்பகுதியினை மெழுகால் தடவி கரணைகள்  காய்ந்து விடாமல் மூட வேண்டும்.  சுமார் 15 முதல் 20 நாட்களில் கணுவிலிருந்து புதுதுளிர்கள் உருவாகும். அவைகள் தொடர்ந்து நன்கு வளர்ந்தால், மண்ணிற்குள் புதைந்துள்ள கரணையில் வேர்கள் உருவாகியுள்ளதைத உறுதி செய்யலாம். இவ்வகையில் சுமார் 70 சதவீத கணுக்கள் துளிர்க்கும். தாய்ப்பாத்திகளிலும் மூங்கில் கரணைகளை நட்டு புதிய துளிர்கள் உருவானவுடன் பைகளுக்கு கவனமாக சிறிதளவு மண்ணுடன் மாற்றுவது மற்றொரு முறையாகும். துளிர்க்காத கரணைகளை அவ்வப்போது நீக்கிவிட்டு, புதிய கரணைகளை கொண்டு மாற்றி நட்டு வரவேண்டும். சுமார் 45 நாட்கள் கழித்து ஈரபத கூடாரத்திலிருந்து மூங்கில் கன்றுகளை வெளியில் எடுத்து 75 சதவீத நிழல் கொடுக்கக்கூடிய அக்ரோநெட்டின் கீழ் வைத்து சுமார்  1மாதம் வரை பராமரிதது வரவேண்டும். பின் சூரிய வெளிச்சத்தில் வைத்து வளர்க்க வேண்டும். மூங்கில் விதைகள் கொண்டும் நாற்றுகள் உற்பத்தி செய்யலாம். ஆனால் விதைகளின் முளைப்புத்திறன் சுமார் ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே இருக்கும். முளைப்பு சதவீதம் 45 ஆகும். மேற்கண்ட முறைகள் தவிர திசு வளர்ப்பு முறை மூலமும் மிக அதிகமான நாற்றுக்கள் உற்பத்தி செய்யலாம்

நடவு

சுமார் ஆறுமாத வயதுள்ள கன்றகளை நிலங்ளில் நடலாம். 0.60x0.60x0.60 மீட்டர் அளவுக்கும் குறையாத குழிகளை 5x5 மீட்டர் ( செடிகளுக்கு இடையே 5 மீட்டர் வரிசைகளுக்கு இடையே 5 மீட்டர்) இடைவெளிகளில் மழைகாலத்திற்கு முன் குழி எடுத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர்வளர்ச்சி உட்பூசாணம் (VAM) மற்றும் 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவைகளை இட்டு மழை பெய்தவுடன் நாற்றுக்களை நட வேண்டும். செடிகளின் வேர்கள் மண்ணுக்கு வெளியில் தெரியாவண்ணம் குழிகளை சுற்றியுள்ள மேல்மண்ணை கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும். மழைநீர் சேகரமாகும் வகையில் செடிகளைச் சுற்றி பாத்தி கட்ட வேண்டும். இதன் மூலம் அதிகளவு புதிய குருத்துக்கள் உருவாகும். இச்செயல் செடிகளின் வளர்ச்சியை  ஊக்கப்படுத்த உதவும். நடப்பட்ட கன்றுகளுக்கு மழையில்லா வறட்சி காலங்களிலும், கோடை காலங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுவது நாற்றுகளின் இழப்பை முழுக்க தவிர்க்க உதவும். சொட்டுநீர் பாசனமுறை மூலம் மூங்கில் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினால் அதிக மகசூல் கிடைக்கும்.

அறுவடை

மூங்கில் கன்றுகள் நடப்பட்ட சுமார் ஐந்தாம் வருடத்திலிருந்து ஒவ்வொரு தூரிலும் (clump) 30-40 மூங்கில் கழிகள் (culm) வளர்ந்திருக்கும். ஐந்தாவது வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மூங்கில் குத்திலிருந்தும் சுமார் 8 முதல் 10 முதிர்ந்த மூங்கில்களை அறுவடை செய்யலாம். ஒரு தூரிலுள்ள மொத்த மூங்கில் கழிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் வெட்டி எடுத்தல் வேண்டும். மூங்கில் பெரும்பாலும் முதிர்ந்த கழிகள் தூருக்கு உள்ளேயும், இளம் கழிகள் தூருக்கு வெளியேயும் இருப்பதால், குதிரை லாடம் வடிவில் கழிகளை வெட்டி எடுக்க வேண்டும். அறுவடை செய்யக் கூடிய மூங்கில்களின் எண்ணிக்கை தூர்களின் வயதை பொறுத்து மாறுபாடும்.

மூங்கில்களின் பயன்பாடுகள் :

  • மூங்கில்களின் வேர்கள் மண்துகள்களை இறுக்கமாக பிடித்துக் கொள்வதாலும், வளர்ந்த மூங்கில்கள் குடைபோல் மண்ணை மழைநீரின் நேரடி தாக்குதலிலிருந்து காப்பதாலும், காய்ந்த இலைகள் போர்வை போல மண்ணை மூடி காப்பதாலும் மண் அரிப்பை தடுத்து மண்வளததைக் காப்பதுடன், நீர்வளத்தையும் பெருக்க உதவுகிறது.
  • வளர்ந்த மூங்கில்கள் வீடுகள் கட்ட தாங்கு குச்சிகளாக பயன்படுகிறது.
  • குடிசைகள், சிறுவீடுகள் கட்ட மூலப் பொருட்களாக பயன்படுகிறது.
  • பெரிய வீடுகள் மற்றும் உணவகங்களில் உள் அலங்கார மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.
  • இளம் குருத்துக்கள் ஊறுகாய் தயாரிக்கவும், கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் மற்றும் நூல் இழைகள் ஆடைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
  • மூங்கில்களில் பேப்பர், பிளைவுட் மற்றும் பார்டிக்கிள் போர்டுகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அகர்பத்தி, பட்டாசுகள், கூடைகள், பர்னீச்சர்கள் தயாரிப்பிலும் அதிகமாக உபயோகப்படுகிறது. மேலும் பல்வேறு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

வருமானம்

ஏக்கருக்கு ஆண்டிற்கு குறைந்தபட்ச ரூ.16,000/- வருமானமாக கிடைக்கும். இந்த வருமானம் ஆண்டுகள் செல்லச் செல்ல பல மடங்கு அதிகரிக்கும்.

.எண் விபரங்கள் பேம்புஸா பல்குவா பேம்புஸா நியூட்டன்ஸ் பேம்புஸா டுல்டா பேம்புஸா வல்கரீஸ்
1. இடைவெளி 5x5 5x5 5x5 5x5
2. தூர்கள் / ஏக்கர் 160 160 160 160
3. 5 வருடத்திற்கு பிறகு சராசரியாக கிடைக்கும் கழிகள் /தூர் 30 36 40 43
4. அறுவடை செய்யக்கூடிய கழிகள் /வருடம் /தூர் 8 10 11 13
5. மொத்த கழிகள் / ஏக்கர் 1280 1600 1720 2080
6. வருமானம் /ஏக்கர் (ரூ.15.00 /கழி வீதம்) 19200 24000 25800 20800

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

Updated on: April ,2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015