தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: தேக்கு
தேக்கு
தேக்கு மரக கன்றுகள்

தேக்கு மரம்

தேக்கு மரத்தின் விஞ்ஞான பெயர் டேக்டோனா கிராண்டிஸ் (Tectona grandis.F) ஆகும். கிரேக்க மொழியில் “டெக்டன்” என்றால் “தச்சர்” என பொருள்படும் அதே போன்று “டெக்டோனா” என்றால் தச்சருக்குச் சம்பந்தப்பட்டது.  கிராண்டிஸ் என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் “தச்சர்களுக்கு உகந்த பிரமாதமானமரம்” என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மரம் ஓங்கி வளருவதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.

இந்தியாவில்  குறிப்பாக தென் இந்தியாவில் இந்த மரம் காடுகளில் கடல்மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. நல்ல  மண்வளம் நிறைந்த நிலத்தில் தேக்குமரம் 55 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. சாதாரண  நிலையில் மலைப்பகுதிகளில் 25 மீட்டர் உயரமும் சமவெளிப் பகுதியில் 15 மீட்டர் உயரமும் வளரக்கூடியது ஆகும்.

தேக்கு மரம்
தேக்கு மரப் பட்டை
தேக்கு இலைகள்

தேக்கு பயரிட ஏற்ற நிலம்

பல சூழ்நிலைகளிலும் தேக்கு வளருகிறது. குறிப்பாக ஆண்டிற்கு 750 மி.மீ அளவிற்கு குறைவாக மழைபெய்யும் பகுதிகளில் இம்மரம் நன்றாக வளருவதில்லை. மேலும் தொடர்ந்து மழையில்லாத மானாவாரி பகுதிகளிலும் நன்றாக வளருவதில்லை.
இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மற்றும் மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்களும், மணல் கலந்த களி நிலங்களில் நன்கு வளரும். மண் ஆழம் குறைவாக உள்ள நிலங்களிலும் கடுங்களி நிலங்களும், நீர் வடியா நிலங்களும் இம்மரத்திற்கு ஏற்றதல்ல.
இது ஒர “ஒளி விரும்பி” “Light demander” ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் மரம் நல்ல முறையில் வளரும்.

விதை நேர்த்தி

தேக்குமர விதைகளை விதை நேர்த்தி செய்வது முக்கியமானதாகும். குறிப்பாக தேக்கு விதைகளை கோணி சாக்குபையில் வைத்து கட்டி 12 மணி நேரம் சாண பாலில் ஊறவைக்க வேண்டும் பின்னர் 12 மணி நேரம் வெளியில் உலர்த்த வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்வது மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

நாற்றங்கால்

தேக்கு தோட்டம் அமைக்க தேக்கு நாற்றுக்குச்சிகள் தயாரிக்க வேண்டும். மேற்படி நாற்றுக்குச்சிகளை தயாரிக்க தேவையான நாற்றங்கால் 10x1x.30 மீட்டர் அளவுள்ள மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் மணலும், 50 சதவீதம் வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும். இந்த மண்ணில் தொழு எருவோ, சாணமோ கலக்கக் கூடாது. அவ்வாறு கலந்தால், வேர்புழுக்கள் தோன்றி நாற்றுகள் சேதமாகும். பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி பாத்திகளில் பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10 x 1 மீட்டர் பரப்புள்ள பாத்திக்கு 6 கிலோ என்ற அளவில் தேக்கு விதை விதைக்க வேண்டும். விதைத்த பின் சிறிது மணலை மேலாக பரப்பி அதன் மேல் வைக்கோலை பரப்பி மூடிவிட வேண்டும். தினமும் இருமுறை நீர் தெளித்து வர வேண்டும். தேக்கு நாற்றுக்கள் முளைத்து வரும் பொழுது வைக்கோலை எடுத்துவிட வேண்டும்.

தேக்கு மலர்கள்
தேக்கு விதைகள்

நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் பத்து மாதம் முதல் ஒரு வருடம் வளர்ந்த நிலையில் தண்டின் வளர்ச்சி சுமார் பென்சில் பருமன் அல்லது பெருவிரல் கனத்திற்கு இருக்கும். மேற்படி பென்சில் பருமனுள்ள நாற்றுக்குச்சிகளை 16x30 செ.மீ அளவுள்ள பாலிதீன் பைகளில் வளர்த்து நடவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் கட்டைவிரல் கனத்திற்கு தண்டு வளர்ந்தும் நாற்றுகளை எடுத்து வேர்ப்பகுதியில் உள்ள சிறு வேர்களை எல்லாம் அகற்றி விட வேண்டும். கழுத்து பகுதிக்கு மேல் 2 செ.மீ அளவிற்கும் வேர்ப்பகுதி சுமார் ½ அடி உடைய நாற்றுக் குச்சிகளாக வெட்டித் தயாரிக்க வேண்டும். வளர்ச்சியடையாத நாற்றுக்களை நாற்றங்காலிலேயே விட்டு வைத்து பின்னர்  நன்கு வளர்ச்சியடைந்த பின் நாற்றுக்குச்சி தயாரிக்கலாம். நாற்றுக்குச்சிகளை அப்படியே தோட்டங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டிய இடத்தில் நடவு செய்யலாம்

நடவு செய்யும் முறை

தேக்கு நடவு செய்யப்படும் இடம் நன்றாக சுத்தம் செய்து களைகள் அகற்றப்பட  வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னர் 2m x2m இடைவெளியில் 45 கன செ.மீ அளவுள்ள குழி எடுத்து நன்கு காய்ந்த பின், மக்கிய தொழு எருவுடன் வண்டல் மண் கலந்து குழியை முக்கால் பாகம் நிரப்ப வேண்டும். மழைக்காலம், ஆரம்பித்ததும் குழிகள் நன்கு ஈரமாக ஆனதும், குழிகளில் கடப்பாறையால் துவாரம் அமைத்து அவைகளில் தேக்கு நாற்றுக் குச்சிகளை நட்டு குச்சி .

சேதமடையாமல் மண் அணைத்து துவாரத்தில் காற்று போகாமல் இறுக்கமாக கெட்டிப்படுத்த வேண்டும். அதே சமயம் நாற்றுக் குச்சியின் கழுத்துப் பகுதியும் குழியின் மேல் மட்டமும், ஒரே மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குச்சியின் கழுத்துப்பகுதி மண் உள்ளே புதைந்து விடக்கூடாது. மண்மூடிவிட்டால் துளிர் வருவது தடைபடும். இவ்வாறு நடப்பட்ட நாற்றுக் குச்சிகள் ஒருவாரம் முதல் 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். இந்த செடிகளில் அதிக துளிர்கள் வந்தால் நல்ல வளர்ச்சியடைந்த ஒரு துளிரை மட்டும் விட்டு விட்டு மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். 16x30 செ.மீ. அளவுள்ள பாலித்தீன் பைகளில் வளர்த்த தேக்கு நாற்றுக்களை 60 செ.மீ கன அளவுள்ள குழிகளில் நட்டும் இம்மரத்தை வளர்க்கலாம்.

செடிகளை சுற்றி களை எடுப்பதும், மண் கொத்தி கொடுப்பதும் ஒரு மாதத்திற்கு பிறகு செய்ய வேண்டும். இநத செடிகள் நன்கு வளர குறைந்தது மாதம் இருமுறை நீர் விடுவது அவசியமாகும். இவ்வாறு ஐந்து வருடங்கள் வரை செய்துவந்தால் தேக்கு நன்றாக வளரும்.தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும் பக்க கிளைகள் இல்லாததாகவும் வளர்த்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும். மேலும் மரங்கள் அடர்ந்து வரும் நிலையில் 5ம் வருடத்தில் இடை வரிசைகளை நீக்கி மரம் நல்ல பருமன் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அதாவது முதல் 5-வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது மூலைவிட்ட வரிசையில் ஒரு வரிசைவிட்டு நடுவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2x 2 மீட்டர் இடைவெளியில் நட்டால் ஏக்கருக்கு 1000 மரங்கள் இருக்கும். இதில் 500 மரங்களை வெட்டி எடுக்க வேண்டும். அப்பொழுது மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவு மரங்களுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.

அடுத்து 10-12 வருடத்தில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் இருக்கும். மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 20 -25 வருடங்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.

Updated on :March, 2015

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015