பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மா தண்டு துளைப்பான்: பேட்டோசீரா ருஃபோமேக்கலேட்டா
தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் மரத்தைக் குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகிறது.
  • துளைக்கப்பட்ட பகுதியின் கீழே மரத்தைச்சுற்றிலும் மரத்தூள்களும் புழுவின் கழிவுகளும் காணப்படும்.
  • புழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று உணவுக்கடத்தும் திகலை உண்பதால் மரக்கிளைகள் வாடிவிடும்.
  • சேதம் அதிகமாகும் நிலையில் முழுமரமும் அழிந்து போகும்.

பூச்சியின் விபரம்:

  • புழு - வளர்ச்சியடைந்த புழு 10-15 செ.மீ நீளமுடையது, தலை பழுப்பு நிறத்தில் காணப்படும். புழுவின் முன்பகுதி அகன்றும் உடல்பகுதி சிறுத்தும் காணப்படும்.
  • வண்டு - நன்கு வளர்ச்சியடைந்த வண்டு பெரியதாகவும் கடினமான முன் இறக்கைகளை கொண்டிருக்கும். சிகப்பு நிற புள்ளிகள் முன் இறக்கையில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • சேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி விட வேண்டும்.
  • பூச்சி எதிர்ப்புத்திறனுடைய மர ரகங்களை பயிரிட வேண்டும் (நீலம், கிமாயூதீன்).
  • வண்டு உண்ணக்கூடிய மாற்று பயிர்வகைகளை அகற்ற வேண்டும்.
  • வண்ணம் பூசுதல் 20 கி காப்பரில் பவுடரை 1 லி தண்ணீரில் கலந்து மரத்தின் அடியிலிருந்து 3 அடி உயரத்தில் வண்ணம் பூச வேண்டும். இதனால் பெண் வண்டின் முட்டையிடும் தன்மை தடுக்கப்படுகிறது.
  • சேதம் அதிகமாகும் தருவாயில் காப்பர் ஆக்ஷிகுளோரைடு பசையை மரத்தின் அடிப்பாகத்தில் தடவ வேண்டும்.
  • வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு மோனோகுரோட்டாபாஸ் 10 லிருந்து 20 மிலி வரை எடுத்து பாதிக்கப்பட்ட துளையினுள் செலுத்த வேண்டும்
  • கார்போபீயூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கி வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்த துளையை அடைத்து விட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016