தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல்:: அடிப்படை கொள்கைகள்

அழகுத் தோட்டம்
அழகுத் தோட்டம் என்பது வெளிப்புற வாழுமிடமாகும். ஆதலால் அழகுத் தோட்டம் அமைக்கும் முன் திட்டமிடுதல் மற்றும் வரைபடம் தயார் செய்வது மிக முக்கியமானதாகும். அழகுத் தோட்டம் அழகாகவும் , ரம்மியமாகவும் இருக்க வேண்டும் திட்டமிடும் பொழுது நிலத்தின் அமைப்பு , மண் எந்த வகையைச் சார்ந்தது, அப்பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம் , கட்டிடத்தின் உயரம் மற்றும் நிழல் விழும் பகுதி, தண்ணீர் வசதி போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள மரங்கள் , செடிகள் , கொடிகள்  மற்றும் அதன் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்து புள்ளிவிவரங்களையும் சேகரித்துக் கொண்டு அதன் பின்புதான் அழகுத்தோட்டம் அமைப்பதற்கான வரைபடம் தயார் செய்ய வேண்டும்.

அழகுத்தோட்ட வரைபடம் தயார் செய்தல்
அழகுத்தோட்ட வரைபடம் தயார் செய்யும் போது வீட்டு அழகுத் தோட்டம் அல்லது வேறு வகையான அழகுத் தோட்டமாக (பொது பூங்கா , தொழிற்சாலைப் பூங்கா) இருந்தாலும் அழகுத் தோட்டம் அமைக்க இருக்குமிடத்தில் உள்ள கட்டிடம், மதில் சுவர் , பூமிக்கடியிலுள்ள குடிநீர்க் குழாய், வடிகால் குழாய், கழிவுநீர்த் தொட்டி ஆகியவற்றைப் போன்ற நிரந்தர அமைப்புகளை வரைபடத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். வீட்டின் வெளிப்புறச்சுவரில் உள்ள சன்னல்கள், வாசல்கள், வராண்டா , வெளியே தெரியும் முக்கிய இடங்களையும், மறைக்க வேண்டிய இடங்களையும் குறித்துக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே உள்ள மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவற்றையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

தனிக் காகிதம் ஒன்றில் தோட்டத்தில் இருக்க வேண்டிய அம்சங்களை வரிசைப்படி குறித்துக் கொள்ள வேண்டும். வரைபடத்தில் இந்த அம்சங்களை எல்லாம் அளவுப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சில நேரங்களில் எல்லா அழகுத் தோட்ட அம்சங்களையும் பொருத்த முடியாவிட்டால் முக்கியத்துவம் குறைந்த  அம்சங்களை விட்டு விட்டு மிக முக்கியமான அம்சங்களை மட்டும் தேர்வு செய்த அம்சங்களை எந்தெந்த இடத்தில் பொருத்தினால் நன்றாக இருக்கும் என்று ஊகித்து அதற்கு மாற்று அம்சங்களையும் வைத்துக் கொண்டு வரைபடம் தயார் செய்ய வேண்டும். அதில் எது மிகவும் நன்றாக இருக்கிறதோ அல்லது வீட்டின் உரிமையாளர் எவ்வாறு விரும்புகிறாரோ அது போன்று இறுதியான வரைபடம் தயார் செய்ய வேண்டும். பின்னர் தோட்டத்தை 3 அல்லது 4 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியின் படத்தையும் 4 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியின் படத்தையும் நான்கு மடங்கு பெரிதாகப்போட்டுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் புல்தரை முக்கியமான அம்சமாகும். ஆதலால் வீட்டின் முன்பகுதி அல்லது வீட்டின் இட அல்லது வடபகுதியில் அமைக்க வேண்டும். புல்தரையினையோ , நடைபாதையினையோ அல்லது சாலையையோ இரண்டாகப் பிரிக்கக்கூடாது. வீட்டுத் தோட்டத்தில் பாதை மற்றும் சாலை நேராக அமைக்க வேண்டும். மரங்களை பொதுவாக வீட்டின் பின்புறம் , இடப்புறம் மற்றும் வலதுபுறங்களில் நடவு செய்ய வேண்டும். முன் பகுதியில் நடவு செய்தால் வீட்டின் தோற்றத்தை மறைத்து விடும். மரங்கள் தேர்வு செய்யும் பொழுது அதன் உயரம், வேர்களின் வளர்ச்சி,  மரத்தின் அமைப்பு, இலை உதிரும் தன்மை, பூக்களின் வண்ணம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.
குத்துச் செடிகள், கொடிகள் போன்றவற்றை அப்பகுதியின் சூழ்நிலைக் கேற்ப உகந்த செடிகளை தேர்வு செய்து அதனை பல்வேறு இடங்களில் பயன்படுத்தவேண்டும். பூ படுக்கைகள் அமைத்து தோட்டத்திற்கும் வீட்டிற்கும் அழகு சேர்க்கலாம்.

அழகுத் தோட்ட வரைபடம் தயார் செய்யும் பொழுது அங்குள்ள கட்டிடத்தின் அமைப்பு, வர்ணம், அருகிலுள்ள கட்டிடங்கள் நில அமைப்பு போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் அழகுத் தோட்டம் அமைத்த பின் அது மிகவும் அழகாகவும் அருகிலுள்ள அமைப்புகளுடன் ஒத்துப்போவதாகவும் உகந்த வண்ணத்தில் உள்ளதாகவும்  இருக்க வேண்டும். ஒவ்வொரு வகையான அழகுத் தோட்டம் அமைக்கும் பொழுது அதன் முக்கியப் பண்புகள் மாறாமல் இருக்க வேண்டும். பல்வேறு அழகுத் தோட்டங்களின் பண்புகளைப் பற்றி இங்கே காண்போம்.

வீட்டுத் தோட்டம்
வீட்டுத் தோட்டம் அமைக்கும் பொழுது அளவுகள் சரியான குறித்த விகிதத்தில் இருக்க வேண்டும். அதில் வீடு முக்கிய அம்சமாகும். சில நேரங்களில் வீட்டுத் தோட்டத்தில் அலங்காரத் தண்ணீர்த் தொட்டி, சிலை, அல்லது மேடைப் புல் தரை அல்லது சிறந்த மரம் போன்றவை சிறப்பு அம்சமாக இருக்கலாம். நடைபாதை மற்றும் சாலை மிகவும் அழகானதாக அமைக்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் அழகுத் தோட்டம் அமைப்பு
தொழிற்சாலைகள், பொதுவாக பெரிய மற்றும் சிறிய நகரங்களில் அல்லது தேசிய , மாநில நெடுஞ்சாலை அருகில் அமைக்கப்படுகின்றன. பொதுவாக தொழிற்சாலைகளில் பல்வேறு வகையான தூசி , ரசாயன வாயு, கழிவு நீர் மற்றும் ஒலி போன்றவை சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றன. இத்தகைய மாசுபட்ட சூழ்நிலையில் சுற்றுப்புற சூழ்நிலையை நன்றாக உருவாக்க வேண்டுமானால்  அழகுத் தோட்டங்கள் அமைப்பது மிகவும் இன்றியமையாததாகும். தொழிலாளர்கள் உணவருந்தவும் இடைவெளியில் இளைப்பாறவும் வசதியாக புல்தரை , மண்டபம் போன்ற அமைப்புகள் வைக்கலாம். இவ்வாறு அமைக்கப்படும் தோட்டங்கள் தொழிற்சாலைகளில் சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதுகாப்பதுடன் , தொழிலாளர்களின் களைப்பை போக்கவும் உதவுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் தொழிற்சாலைகளில் தோட்டங்கள் அமைக்க அதிக அளவு மரங்கள் (மாசுபடிதலை எதிர்த்து வளரக்கூடியவை) செடிகள் மற்றும் புல்தரையினை அமைக்க வேண்டும். தேர்வு செய்யக்கூடிய செடிகள் , கொடிகள் மற்றும் புல்வகைகள் பல்வேறு வகையான மாசுபட்ட சூழ்நிலையையும் தாங்கி  வளரக்கூடியதாக இருக்க வேண்டும்.

அழகுத் தோட்டங்கள் எல்லா இடங்களிலும் அதாவது உணவு விடுதிகள், மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் அமைக்கப்படுகின்றன.  அவ்வாறு அமைக்கப்படும் பூங்காக்கள் அவற்றின் தன்மைக்கேற்ப அமைப்பு, மரங்கள், செடிகள், புல்தரை போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அழகுத் தோட்டம் அல்லது பூங்காக்கள் அமைக்கும் பொழுது மேலே குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் மனதில் கொண்டு சிறந்த வரைபடம் தயார் செய்ய வேண்டும்.

மாடித்தோட்டம்

நகர்புறங்களில் வீட்டைச்சுற்றி செடிகள் நடுவதற்கு போதிய இடம் இல்லாததால் மாடியில் தோட்டம் அமைக்கும் பழக்கம் பரவிக் கொண்டு வருகிறது. மாடியில் செடிகள் வளர்ப்பதற்கு முன் அங்குள்ள சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் தான் அந்த மாறுபட்ட சூழ்நிலைகளில் செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

மாடிச் சூழ்நிலைகள்
மாடியில் இருக்கும் செடிகளுக்கு குறைந்த அளவு மண்தான் கிடைக்கும். அதனால் ஆழமாக வேர்விட்டு வளர முடியாது. குறைந்த அளவு மண்ணில் ஊட்டச் சத்துகளும் குறைவாகத் தானிருக்கும், அதனால் செடிகளுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை நாம் அடிக்கடி செயற்கை உரங்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாடியில் வெயில், வெளிச்சம் மற்றும் காற்று அதிகமாக இருக்கும். எனவே தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும் மண்ணில் உள்ள ஈரம் விரைவில் காய்ந்துவிடும். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதனால் செடிகள் விரைவில்  வாடிவிடும். ஆகவே மாடியில் உள்ள செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியமாகிறது. மாடியில் வடிகால் எளிதாக இருக்கும். தண்ணீர் எப்போதும் தேங்காது. ஆனால் மழைக் காலங்களில் மண்ணிலுள்ள ஊட்டச் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும்.
அதனால் செடிகளுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை நாம் அடிக்கடி செயற்கை உரங்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் சிறிதுசிறிதாக பல தவனைகளில் இட வேண்டும். கடுமையான வெயிலையும் , மழையையும், காற்றையும் தாங்கி வளரக்கூடிய செடிகள் மட்டுமே மாடிச்சூழ்நிலைகளில் வளரும்.
மாடியில் செடி வளர்ப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. தொட்டிகளில் செடிகளை வளர்த்து மாடியில் பல இடங்களிலும் வைத்து விடலாம் அல்லது மாடியில் குறிப்பிட்ட இடங்களில் மண் கலவையைப் போட்டு அதில் நேரடியாகச் செடிகளை நட்டு விடலாம். எந்த முறையைக் கையாண்டாலும் முக்கியமாக ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது மாடியில் எவ்வளவு எடையை ஏற்றலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாடியில் புல் தரை

ஒரு பசுமையான புல் தரையை மாடியில் அமைத்துவிடலாம். புல் தரை அமைக்க வேண்டிய பகுதியில் தண்ணீர் உறிஞ்சாத பொருளினால் மெழுகி தரையை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மண் கலவையை இட வேண்டும். தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக ஒரு பக்கம் சற்று சரிவாக இருக்க வேண்டும். புல் தரை அமைப்பதற்கு சுமார் 10 முதல் 12 செ.மீ உயரத்திற்கு மண் கலவை போட்டால் போதும்.

நல்ல வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய அறுகம்புல், ஜப்பான் புல், மணிலா புல், கொரியன் புல், ஹைதிராபாத் புல், குட்டை பெர்முடா ஆகிய புல் வகைகளும் மாடியில் நடுவதற்கு ஏற்றதாகும்.

மாடியில் இருக்கும் புல்தரைக்கு தவறாமல் உரமிடுதல் வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் , 50  மூரியேட் – ஆப் – பொட்டாஷ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைப் புல் நடுவதற்கு முன்பாக மண் கலவையோடு கலந்து விட வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை சூப்பர் பாஸ்பேட் உரத்தையும்  மூரியேட் – ஆப் – பொட்டாஷ் உரத்தையும் இதில் பாதி அளவுக்கு கொடுக்க வேண்டும்.

தொட்டிகள்
மாடித் தரையில் மண் கலவை போட்டு நேரடியாக செடிகள் நடுவதை விட தொட்டிகளில் செடிகள் வளர்த்து மாடியில் வைப்பது நல்லது. தொட்டிகள் அகன்ற அடிப்பாகத்தை கொண்டதாக இருந்தால் காற்றில் சாய்ந்து விடாமல் இருக்கும். கனமான பெரிய தொட்டிகளை அஸ்திவாரத்திலிருந்து எழுப்பப்பட்ட சுவற்றின் மேல் வைக்க வேண்டும். சிறிய தொட்டிகளை கீழே சுவர் இல்லாத பகுதியில் கூட வைக்கலாம். பெரிய தொட்டிகளில் மற்றும் தாழ்களில் சிறிய மரங்களை வளர்க்கலாம். சுமார் 60 செ.மீ உயரமும் குறுக்களவும் கொண்ட தொட்டிகள் அல்லது பெட்டிகள் மரம் வளர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

கைப்பிடிச் சுவர்களையும் தொட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்தலாம். கைப்பிடி சுவற்றின் மேல் ஆங்காங்கே செடிகள் வைப்பது கட்டிடத்தின் அழகைக் கூட்டும் மாடியில் இடம் குறைவாக இருந்தால் சுவற்றில் குறிப்பிட்ட கான்கிரீட் பலகைகளைச் சொறுகி அதன் மேல் தொட்டியில் உள்ள செடியை வைக்கலாம். கான்கிரீட் பலகைகளுக்கு பதிலாக இரும்பு வளையங்களை சுவற்றில் பொருத்தி அதில் தொட்டிகளை வைத்து விடலாம்.

பந்தல்கள்

மேற்குப் பக்கத்து சுவர்களின் ஓரமாக ஒரு பந்தல் போட்டுவிட்டால் வசதியாக இருக்கும். பந்தல் போடுவதற்கான கால்களை மண் தரையில் எங்கு வேண்டுமானாலும் ஊன்றி விடலாம். ஆனால் மாடியில் கால்களை நிறுத்துவதற்கு சில சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கைப்பிடிச் சுவற்றில் இரண்டு மூன்று  இரும்பு வளையங்களை ஒன்றின் கீழ் ஒன்றாக 50 செ.மீ இடைவெளியில்  பொருத்தி அதில் மூங்கில் கம்புகளை சொறுகி விடலாம். வளையங்கள் சிறியதாக மூங்கில் அல்லது சவுக்கு மரக்கம்புகள் நுழையும் அளவுக்கு இருந்தால் போதும்.

மாடியில் வளர்ப்பதற்கேற்ற செடிகள்
நல்ல வெயிலையும் முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத் தான் மாடியில் வளர்க்க  வேண்டும். வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் வளரக் கூடிய எல்லா வகைச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால் மாடியில் குறைந்த அளவே மண் இருப்பதனால் மரங்களையும் பெரிய செடிகளையும் வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதினால் வண்ண வண்ண பூக்களையும், இலைகளையும் கொடுக்கக் கூடிய செடிகளை வளர்க்கலாம்.
திசு வளர்ப்பு

தாவரங்களின் செல் அல்லது திசுக்களைக் கொண்டு பயிர்ப்பரப்புதல் தற்போது பிரபலமான முறையாக கருதப்படுகிறது. தாவரத்தின் செல் , திசுக்களை எடுத்து அதை வளர ஏதுவான சூழ்நிலையை ஏற்படு்த்தி செடியான பின்னர் பயன்படுத்துவது திசு வளர்ப்பு என கருதப்படுகிறது. இம்முறையில் ஆர்க்கிட் , ஆந்தூரியம் போன்ற விலையுயர்ந்த அழகிய மலர்கள் பயிர்பரப்பட்டு பயிரிடப்படுகின்றன. இம்முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் குறுகிய காலத்தில் பல இலட்சக்கணக்கில் கன்றுகளை உற்பத்தி செய்து பயன்பெறலாம்.