organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை

அங்கக முறையில் பூச்சி மேலாண்மை முறைகள் - உழவியல் முறைகள்

உழவியல் முறை என்பது வழக்கமான பண்ணை நடவடிக்கைகள் மூலமாக பூச்சிகளைக்கட்டுக்குள் வைத்திருப்பதாகும். அதாவது, பூச்சிகளை அழித்து பொருளாதார நட்டம் ஏற்படாமல் பயிர்களைக்காத்தலாகும். பல்வேறு வகையான உழவியல் முறைகள் உள்ளன. அவையாவன:

1.1. பலதரப்பட்ட பயிர்களை ஒன்றிணைத்தல்

இது அங்கக வேளாண்மையின் முதுகெலும்பாக்க் கருதப்படுகிறது. ஒரு நிலத்தில் ஒரே வகையான பயிரினைத்தொடர்ந்து பயிரிடும்போது ஒரு குறிப்பிட்ட பயிர் வளர்ச்சிச் சத்தின் அளவு அந்நிலத்திலிருந்து அதிகளவில் உறிஞ்சப்பட்டு சத்துப்பற்றாக்குறை பயிர்களுக்கு ஏற்படுகின்றது. பயிர்ச்சத்துக் குறைபாடு பூச்சிகளின் எண்ணிக்கையும், அவற்றின் தாக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. இதனைக்கருத்திற்கொண்டே நம் முன்னோர்கள் கலப்புப்பயிர், ஊடுபயிர் போன்ற முறைகளைக்கடைப்பிடித்துள்ளனர். ஒன்றிற்கும் மேற்பட்ட பயிர்களைக்குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடும் போது சத்துகள் மறுசுழற்சி அடைகின்றன. இதனால் மண்ணின் வளம் மேம்படுகின்றது. வளமான மண்ணில் வளரும் திடமான பயிர்களில் பூச்சிகள் தாக்கம் குறைந்தே காணப்படும். ஊடுபயிர் செய்யப்பட நிலங்களில் பூச்சிகளால் விருப்பு வெறுப்புகளுக்குள்ளான பயிர்கள் இரண்டும் காணப்படுவதால் அவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக்கட்டுக்குள் வைக்கும் சுற்றுச்சூழலை உருவாக்குகின்றது. உதாரணமாக சோளத்தில் துவரையை ஊடுபயிராகப்பயிரிடும் போது சோளக்கதிர்களைத்தாக்கும் கதிர் நாவாய்ப்பூச்சிகளின் எண்ணிக்கையும் துவரையில் தோன்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் பாசிப்பயிரில் சோளத்தினை ஊடுபயிராகப்பயிரிடும்போது சோளத்தண்டுத்துளைப்பான்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது.

1.2. பயிர் இரகத்தேர்வு

நல்ல தரமான விதைகளையும், பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ள இரகங்களையும், குறுகிய காலங்களில் முதிர்வடையும் இரகங்களையும் தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலமாக அங்கக வேளாண்மையில் சீரான லாபத்தை ஈட்டிட முடியும். பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட முக்கிய பயிர் ரகங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

பயிர் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகம் பூச்சி
நெல் டி.கே.எம்.6 தண்டு துளைப்பான் மற்றும் புகையான்
சோளம் கோ.42, பி.ஒய்.3 ஆணைக்கொம்பன் மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சி
பருத்தி எம்.சி.யூ.-3 தண்டுக்கூன் வண்டு
கரும்பு கி.ஓ.சி.661 தண்டு துளைப்பான்

1.3.விதைக்கும் பருவம்

விதைகளை விதைக்கின்ற அல்லது பயிர்களை நடுகின்ற பருவங்களை சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்போது அந்தப்பயிர் ஒரு குறிப்பிட்ட பூச்சியின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்.

  • உதாரணமாக சம்பா பருவத்தில் முன்கூட்டியே நடவு செய்யும் சம்பா பருவத்தில் முன்கூட்டியே நடவு செய்யும் நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுக்களின் தாக்கம் குறைந்து காணப்படும்.
  • செப்டம்பர் மாதத்தில் நடப்படும் நெற்பயிரில் ஆணைக்கொம்பனின் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும்.
  • செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக விதைக்கப்படும் சோளத்தில் குருத்து ஈக்களின் தொந்தரவு குறைந்து காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பயிர் பூச்சி புகைப்படங்கள் செய்ய, தவிர்க்க வேண்டியவை
நெல் இலைச்சுருட்டுப்புழு பருவத்தில் நடுவதால் குறைகிறது.
  புகையான் சம்பா பருவத்தில், விரைவில் நடவு செய்வதால் குறைகிறது
  ஆணைக்கொம்பன் செப்டம்பரில் நடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
சோளம் குருத்து ஈ செப்டம்பரில் முன்பாக விதைப்பதின் மூலம் குறைகிறது
பருத்தி தத்துப்பூச்சி ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு விதைத்தால் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
1.4. பயிர் அடர்த்தி

பயிர் விதைப்பின் அடர்த்தியையோ, நடவின் அடர்த்தியையோ சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தும் போது பூச்சிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் தாக்குதலிலும் மாற்றம் ஏற்படுகின்றது.

  • உதாரணமாக கொண்டைக்கடலையில் குறைந்த அடர்த்தி விதைப்பு காய்ப்புழுக்களின் எண்ணிக்கையையும் அதிக அடர்த்தி அசுவினியின் எண்ணிக்கையையும் குறைத்திட உதவிடும்.
  • நெல்லில் குறைந்த அடர்த்தி நடவு இலைச்சுருட்டுப்புழு மற்றும் புகையானின் எண்ணிக்கையைக் குறைந்திட வழிவகுக்கும்.

அதேபோல் கரும்பில் குறைந்த அடர்த்தி விதைப்பு தண்டு துளைப்பானைக்குறைத்திட ஏதுவாக அமைந்திடும். பயிர் அடர்த்தியினால் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்

பூச்சி மேலாண்மையில் பயிர் அடர்த்தி

பயிர் அடர்த்தி கட்டுப்படுத்தப்படும் பூச்சி
நெல் குறைந்த அடர்த்தி நடவு இலைச்சுருட்டுப்புழு புகையான்
கொண்டைக்கடலை குறைந்த அடர்த்தி விதைப்பு காய்ப்புழு
கொண்டைக்கடலை அதிக அடர்த்தி விதைப்பு அசுவிணி
கரும்பு குறைந்த அடர்த்தி விதைப்பு தண்டுத்துளைப்பான்

1.5.வாழும் இடம் மாற்றங்கள்

வாழ்விட மாற்றம் என்பது ஒரு சில பயிரில் காணப்படும் பூச்சி அப்பயிர் அறுவடை முடித்ததும் அப்பகுதியிலேயே தன் வாழ்க்கைக்கு ஏற்ற மற்ற பயிர்களின்(வரப்பில் உள்ள களை நச்சுகளை) அடைந்து மீண்டும் தனக்கு சாதகமானபயிர் வரும் வரை காத்திருக்கும் நிகழ்ச்சியே. எனவே முக்கிய பயிர்களில் காணப்படும் களைச்செடிகளையும் இதரச்செடிகளையும் கண்டறிந்து அவைகளை முற்றிலுமாகக் களைத்து பயிர்களின் வாழிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தவதாகும். ஏனெனில் அவை பூச்சிகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்து பருவ காலங்களில் பயிர்களைத்தாக்கிடும் காரணிகளாகத் திகழ்கின்றன. வயல்களின் வரப்புகளிலும், மூலை முடுக்குகளிலும் பூச்சிகளைக்கவரும் தாவரங்களையும் பூச்சிகளை விரட்டிடும் செடிகளையும் வைத்திருப்பதன் மூலமாக முக்கியப்பயிரில் தோன்றும் பூச்சிகளின் சேதத்தினை ஓரளவிற்குக் குறைத்திடலாம்.

1.6.கவர்ச்சிப்பயிர்கள்

ஒரு குறிப்பிட்ட பூச்சிக்கு ஒரு குறிப்பிட்ட பயிர்மிகவும் விரும்பத்தக்க உணவுப்பயிராக விளங்கிடும்.அவ்வாறான பயிர்களைக்கவர்ச்சிப்பயிர் என்று அழைக்கின்றோம். கவர்ச்சிப்பயிர்களை முக்கியப்பயிர்களினூடே ரிரு வரிசையிலோ, வரப்புகளிலோ பயிரிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக, பூச்சிகள் கவர்ச்சிப்பயிர்களில் முதலில் தாக்குதலைத்துவக்கும். அப்போது அவற்றைக்கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. இதன் மூலம் முக்கியப்பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தை முன்கூட்டியே தடுத்திட முடியும்.

அங்ககப்பூச்சி மேலாண்மையில் பயன்படுத்தப்படும் கவர்ச்சிப்பயிர்கள்

பூச்சி மேலாண்மையில் கவர்ச்சிப்பயிர்கள்

முக்கியப்பயிர் கவர்ச்சிப்பயிர் கவரப்படும் தாய்ப்பூச்சி
பருத்தி, தக்காளி, துவரை செண்டுமல்லி பச்சைக்காய்ப்புழு
பருத்தி, நிலக்கடலை சோளம் குருத்து ஈ, தண்டுத்துளைப்பான்
முட்டைக்கோசு, பூகோசு கடுகு வைர முதுகுப்பூச்சி
பருத்தி வெங்காயம், பூண்டு இலைப்பேன்
பருத்தி, தக்காளி, நிலக்கடலை ஆமணக்கு புருட்டூனியாப்புழு
 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016