organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை

முன்னுரை

பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திட உலகளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் சுமார் ஒரு சதவீத அளவு மட்டுமே பூச்சிகளை அளிப்பதில் பங்கு பெறுகின்றன. மீதமுள்ள 99 சதவீதம் பூமியையும், வளிமண்டலத்தையும் சென்றடைகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அவை பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கினை விளைவிக்கின்றன. பெரும்பாலான பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுக்கள் மண், நீர், காற்று போன்ற வாழ்வாதாரங்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று தீங்கினை விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை.

பூச்சிக்கொல்லி மருந்துகள் நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப்பதால் பூச்சிகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் பல மடங்கு பெருகி சேதத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், பூச்சிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறனைப் பெற்று விடுவதால் அவை அதிக அளவில் பெருகிட வழிவகுக்கின்றன. பூச்சிக்கொல்லிகளின் நச்சுக்கள் நாம் உண்ணும் உணவுப்பொருட்களிலும், உணவு சங்கிலியிலும் நிலைத்திருப்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீர்க்க முடியாத நோய்களுக்கான காரணிகளாகவும் திகழ்கின்றன. எனவே பூச்சிக்கொல்லிகளற்ற பயிர் உற்பத்தி காலத்தின் கட்டாயமாகும்.

அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை என்பது சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை வழி பூச்சிக்கட்டுப்பாடு முறையாகும். பயிர்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகிய பின் அவற்றைக் கட்டுப்படுத்துவதை விட அவைகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை அடையா வண்ணம் பல்வேறு உத்திகளைக் கையாள்வது அங்ககப்பூச்சி மேலாண்மையின் அடிப்படைக் கொள்கையாகும். அறிவு மற்றும் திறன் சார்ந்த தொழில்நுட்பங்களின் உதவியுடனும், எளிதில் கிடைக்கப்பெறும் எளிய பொருட்களைக்கொண்டும், உழவர்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியினாலும் கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவைகள் முறையே,

  • சீரான பயிர் முறைகளையும், பயிர் உற்பத்தி முறைகளையும் கடைப்பிடித்தல்.
  • பயிர்ச்சூழலையும், அவற்றில் தோன்றும் பூச்சியினங்களையும், அவற்றின் இயற்கை எதிரிகளையும் நன்கு புரிந்து செயல்படுதல்.
  • பூச்சிகளின் வாழ்க்கை முறைகளையும், அவை தோன்றும் பருவங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும், நன்கு அறிந்து மேலும் அவை பெருகா வண்ணம் அவற்றிற்கான வருமுன் காப்பு முறைகளைக் கையாளுதல்.
  • உள்ளூரிலேயே எளிதாகக் கிடைக்கப்பெறும் இயற்கைப்பொருட்களைக் கொண்டு பயிர்களில் தோன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்  மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல்
 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016